செருப்பின் அரசியல்

| Thursday, December 13, 2018
செருப்பின் அரசியல்
இந்த வருடத்திய பெரியார் பிறந்த நாள் அவர் சிலையின் மேல் செருப்பு வீசப்பட்ட தருணத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. வீசியவர் கண்டிப்பாக அவர் எதிர்த்தவர்களுள் ஒருவராக இருக்க முடியாது. பெரியார் என்ற ஒருவர் இந்த மண்ணில் செயல்பட்டதினால் பயனடைந்த கோடிக்கணக்கான நபர்களுள் ஒருவராகத்தான் இருப்பார். செல்வ புவியரசன் இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து இந்து தமிழ் திசை நாளிதழில் இன்று (19-9-2018) தலையங்கப் பக்கத்தில் மிடுக்கான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். பெரியாரோடு, அம்பெத்கரோடு காரண காரிய அடிப்படையில் சம்பாஷணை ஒன்றைத் தொடங்கி தொடர வலுவில்லாதவர்கள் இப்பெரியவர்களின் சிலைகளுக்கு வேலிக்கம்பி வலை பின்னியோ, செருப்பால் அடித்தோதான் தந்களது தோல்வியை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஹெச்ராஜாக்கள், யெஸ்வீசேகர்கள் மேற்சொன்ன இரு தலைவர்களையும் தங்களால் முடிந்தவரை அர்ச்சித்துக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் தங்கள் தரப்பு என்ன செய்யக் கூடுமோ அதையே செய்து வருகிறார்கள். எது நமக்கு கடினம் என்றால், யார் இல்லையென்றால் இவர்கள் இந்த மண்ணில் சட்டையும் வேட்டியுமாகத் திரிந்து கொண்டிருக்க முடியாதோ, யார் இல்லையென்றால் தந்கள் பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்க முடியாதோ, யார் இல்லையென்றால் இவர்கள் இன்று மைக் பிடித்து குரலெழுப்ப முடிந்திருக்காதோ, அவர்களே இப்பெரியோரைத் தூஷிக்கும்படியான நிலை அருவருப்பானது மட்டுமல்ல, அறம் வீழ்ந்த கதையும் கூட.
ஆனால் அன்று இவர்களெல்லாம் இப்படிப் பொதுவெளியில் குரலெடுத்துப் பேசும், கோவில் உள்ள தெருக்களில்மட்டுமன்றி பிரகாரம் தாண்டி கருவறைக்கும் சென்று “இல்லாநிலையோனைத்” தொட்டு ஆராதிக்கும் நிலைக்கு எடுத்துச் சென்ற பெரியோர்கள் செருப்பால் அடிக்க வரும் இவர்களைப் பார்த்து புன்னகைத்த வண்ணமே நிற்கிறார்கள்.
செல்வ புவியரசன் கட்டுரை ஆழமும் அர்த்தமும் ததும்பி நிற்பது.

--------

அந்தரப்பூவின் கல்யாண்ஜி
எனது நண்பர்களில் பலர் கவிதை எழுதுபவர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் இருக்கிறார்களா என்று கேட்காதீர்கள். எப்பொழுதுமே தோன்றும். கவிதை எழுதுவது விஷயமில்லை, கவிஞனாக இருப்பதுதான் விஷேசம். கவிதை ஒரு பிரதி, அவ்வளவுதான். ஆனால் கவிஞன் என்ற மனோபாவம் அவனுடன் எப்பொழுதுமே உயிர்ப்புடன் இருப்பது. எலியட் வேறு மாதிரி சொல்கிறார். Honest criticism is directed upon the poetry, and not upon the poet. ஆனால் அது வேறு தளத்தில் சொல்லப்பட்டது. கவிஞன் கோமாசாமா ரகங்களை எழுதிக் கொண்டிருந்தாலும், திடீரென்று அற்புதமான படைப்புடன் தோன்றிவிடுவான். மற்றவர்களிடம் விளக்க முடியாத அந்த மனநிலை பெரிய படைப்பொன்றை எந்த வித முன்னறிவிப்புமின்றி பிரசவித்துவிடும். பல சமயங்களில் ஒரு சொம்புக்கும் ஆகாதவன் அதிஅற்புதமான கவிதையை எழுதிவிடுவான். One film wonder மாதிரி.
கல்யாண்ஜி கவிஞராக இருப்பவர். அவருடைய ‘அந்தரப்பூ’ கவிதைத் தொகுப்பை அண்மையில் படிக்க நேர்ந்தது. சின்ன சின்ன கவிதைகள். பல கவிதைகள் ‘கவிதை’ என்பதற்குரிய மனோபாவத்துடன் கைகூடியிருக்கின்றன. பார்வைதான் சிறப்பானது; மொழியே கூட அடுத்ததுதான்.
ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.
------
பேருந்துக்குக் காத்திருக்கையில் எனக்கு
பக்கத்து நபரிடம் பேசும் கெட்ட பழக்கம்.
“வெளுத்த சட்டை பூராவும் ஒரே கறையா இருக்கே?”
என் கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்
கருநீலக் கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.
“காத்துக் காலம் லா. நவ்வாப் பழம் உதுந்தது அது”
சட்டையை மறுபடி நீவிக்கொண்டார்.
நாவல் பழம் உதிர்கிற காற்றுக் காலத்திற்கு
எந்தப் பேருந்தில் ஏறினால் உடனே போகலாம்?
-------
இந்த தினத்தின் முதல் வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர்
முந்திய தினத்தின் கடைசி வகுப்பு எழுத்து மிதக்கும்
கரும்பலகையைப் பார்க்கிறார்.
மிகுந்த தயக்கத்துடன் ஒரு முந்திய தினத்தை
எல்லோரிடமிருந்தும் அழிக்கிறார்.
-----
தவறான பொத்தானை அழுத்திவிட்டேன்.
ஒன்பதாவது தளம் போய்விட்டது.
சரியான பொத்தானை அழுத்தி
மூன்றாவது தளத்திற்கு வந்துவிட்டேன்,
ஒன்பதாவது தளத்தையும் கூட்டிக்கொண்டு.
-----
அரசன் கடை மேஜையில்
தனியாக அமர்ந்திருந்தவர் கையில்
அசையாமல் இருந்தது தேநீர்க் கோப்பை.
வெளியே இருந்துதான் அருந்துகிறார் போல.
----
கதவைத் தட்டுவது
சமயவேல் இல்லையென்று தெரியும்.
கோபால் அல்ல, ராமச்சந்திரன் அல்ல.
நம்பி கூப்பிடுவார், தட்டமாட்டார்.
இளைய பாரதி, பாவண்ணனும் இருக்காது.
தமிழ்ச்செல்வன் வீட்டில் கல்யாணம்.
தீன் சாருக்கு நீதிமன்ற நேரம்.
இதுவரை தட்டாதவர் தட்டுகிறார்கள்.
இதுவரை தட்டாதவர்கள் தட்டும் போது
இந்த அறை இதுவரை இல்லாத
வேறொரு அறையாய் மாறிவிடுகிறது.
-----
இது உங்கள் அறைதான்.
உங்கள் கையில் இருக்கும் ஒற்றைச் சாவி சரியானதே.
மறுபடிகளில் திறக்காவிட்டால் என்ன?
பூட்டுகளுக்கு இப்படிச் சில விளையாட்டு நேரங்கள்
உண்டு.
கதவின் மேல் அழுந்தப் பதிந்திருக்கிறது உங்கள்
உள்ளங்கை ரேகை.
அதைப் பார்த்துக்கொண்டிருங்கள் கொஞ்ச நேரம்.
-----
எங்கள் வீட்டில் மருத்துவர் என்பவர்கள் இல்லை.
எங்கள் வீட்டில் நோயர் என்பவர்கள் இல்லை.
எங்கள் வீட்டில் நாங்கள் என்பவர் இருக்கிறோம்.
எமக்கு நேற்று என்றொரு தினம் இருந்தது.
இதுவரை ஆனதை இன்று எனச் சொல்கிறோம்.
வாய்த்தால், நாளை என்றொரு தினம் குறித்து
நாளை மறுநாள் சொல்கிறோம் யாவர்க்கும்.
-----
கசாப்பு வெட்டு மரங்கள் எப்போதும் எல்லா
இடங்களிலும் அழகாக இருக்கின்றன.
கசாப்பு வெட்டுமரங்கள் ஒரு திருத்தமான ஆபரணப்
பேழைப் போல வெயிலில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
கசாப்பு வெட்டுமரங்களின் வழவழப்பைப் பிரத்யேகமாக
இழைப்பார்கள் போல.
கசாப்பு வெட்டுமரங்களின் பக்கம் மழைக்காலக்
காளான்கள் முளைத்திருக்குமா தெரியவில்லை.
ஒரு வேனல் காலப் பயணத்தில் ஏதோ ஒரு சிறு நகரத்தில்
கசாப்பு வெட்டு மரத்தின் தாம்பாளத்தில் ஏறி ஏறி
ஒரு வெள்ளாட்டுக்குட்டி குதித்துக்கொண்டு இருப்பதை
பார்த்திருக்கிறேன்.
-----
என் வீடு எரிந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியாது.
அடுத்தடுத்து உச்ச இசையின் இணைப்புகளை
அனுப்பிக்கொண்டு இருக்கிறான்.
உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், நீங்களும் இசைப் பிரியர்.
என் வீடு இப்போது எரிந்து கொண்டு இருப்பது ஷிவகுமார்
ஷர்மாவின் சந்தூர் இசையில்.
-----
நேற்று என்னைக் கொன்றீர்கள்.
அதற்காக
நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?
-----

0 comments:

Post a Comment