RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் - 4

| Thursday, December 13, 2018
(47)மாநில தகவல் ஆணையம் மத்திய தகவல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? மாநில தகவல் ஆணையத்தின் ஒரு ஆணையை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா?
மாநில தகவல் ஆணையம் மத்திய தகவல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.  அப்படியான மேல்முறையீடு செய்ய முடியாது.  மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த ஆணை ஒன்றை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.

(48) தலைமை தகவல் ஆணையரும் மற்ற தகவல் ஆணையர்களும் பணியை எவ்விதம் பகிர்ந்து கொள்கின்றனர் ?
இதைப்பற்றிய விவரம் மத்திய  தகவல் ஆணையத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது.

(49)மத்திய தகவல் ஆணையத்தின் ஆளுகை வரம்பிற்குட்பட்ட (Jurisdiction) பொது அதிகார அமைப்புகள் யாவை ?
மத்திய அரசு அல்லது யூனியன் பிரதேசங்களின் அரசுகள் (தில்லி உட்பட) விடுவிக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழியாக உருவாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து பொது அதிகார அமைப்புகளும் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்பிற்குள் வருகின்றன.  மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்பிற்குள் வருகின்றன.  மேலும் இதைப் பற்றிய விவரங்கள் முழுமையாக மத்திய தகவல் ஆணையத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.

(50) மத்திய தகவல் ஆணையம் எவ்விதம் கட்டமைக்கப்பட்டுள்ளது ?
மத்திய தகவல் தலைமை ஆணையரும், பத்திற்கும் மேற்படாத ஆணையர்களும் மத்திய தகவல் ஆணையத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  தகவல் ஆணையர்கள் பற்றிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளன.

(51)அமைச்சரவைக் குறிப்புகள், ஆளுநரின் அறிவுறுத்தல்கள், குடியரசுத் தலைவருக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வெளியிட முடியுமா?
இங்கே ஒரு விடயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  சாதாரண சூழ்நிலைகளில் இவைகள் வெளியிடப்பட வேண்டியதில்லை.  ஆனால், பொது நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவைகளை வெளியிடுவதால் ஏற்படும் பொது நன்மை என்பது கணிசமானது என்று சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பின் பொதுத் தகவல் அலுவலர் கருதுவாராயின், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின், இச்சட்டத்தின் படி விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தவிர பிறவற்றை வெளியிடலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் K.R.நாராயணன் அவர்களுக்கும் அப்போதைய பிரதம அமைச்சர் A.B.வாஜ்பாயி அவர்களுக்கும் இடையே நடந்த குறிப்பிட்ட கடிதப் போக்குவரத்துகளை பொது நன்மை கருதி வெளியிட சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் மறுத்தது இங்கு கருதத்தக்கது.

(52) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வழக்கு செலவு (costs) மற்றும் நஷ்ட ஈடு (compensation) ஆகியன பற்றி விளக்கவும்.
வழக்கு செலவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு செலவிற்கும் ஆதாரமான ஆவணங்களை மனுதாரர் முன்னிலைப் படுத்தியாக வேண்டும்.  மேல்முறையீட்டு நேர்வுகளில், பொதுவாக, மனுதாரருக்குப் பதிலியாக வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராக முடியாது.  சில சிறப்பு நேர்வுகளில் அப்படியான ஒரு ஏற்பாட்டை ஆணையம் அனுமதித்தாலுமே கூட, வழக்கறிஞரை அமர்த்தியதற்கான செலவுகளை இச்சட்டத்தின் படிக்கு மனுதாரர் கோரிப்பெற முடியாது.  சம்பந்தப்பட்ட தரப்புகளே மேல்முறையீடுகளில் தமக்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்.  இருப்பினும், பயணச் செலவுகள், செலுத்தப்பட்டிருக்கும் கட்டணம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட தரப்பு கோரிப்பெற முடியும்.
இச்சிக்கலின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கலாம்.  மனுதாரர் கோரியிருந்த தகவல்களை வழங்குவதற்காக பொதுத் தகவல் அலுவலர் பெருந்தொகை ஒன்றை செலவு செய்திருக்கலாம்.  இத்தொகையை மனுதாரரிடமிருந்து, அனுமதிக்கப்பட்ட வீதத்தில், பொதுத் தகவல் அலுவலர் கோரிப்பெற முடியும்.
வேறு தருணங்களில், மனுதாரருக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக ஆணையம் கருதலாம்.  மனுதாரருக்கு இழைக்கப்பட்ட நட்டம், அசௌகரியம், மன உளைச்சல் ஆகியவற்றிற்காக பொது அதிகார அமைப்பு அவருக்கு நஷ்ட ஈடு ஒன்றைத் தருமாறு ஆணையம் கட்டளையிடலாம்.  பொதுவாக இந்தத் தொகையானது ரூபாய் ஐயாயிரம் வரை இருக்கும்.
ஆனால் தனக்கு இழைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் கருதும் அநீதிக்கு பிராயச்சித்தமாக பொதுத் தகவல் அலுவலருக்கு தினந்தோறும் ரூ.250/- வீதம் ரூ.25,000/-க்கு மிகாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று மனுதாரர் ஆணையத்தைக் கோர முடியாது.  பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் கோர முடியாது.  இத்தகைய அபராதமோ, ஒழுங்கு நடவடிக்கைக்கான பரிந்துரையோ பொருத்தம் என்று தாம் கருதுகிற நேர்வுகளில், மேல்முறையீட்டின் தன்மைக்கேற்ற தன்னிச்சையாக ஆணையம் முடிவு செய்வதாகும்.  அபராதம் விதிப்பது என்பது தனியான ஒரு செயல்.  மேல்முறையீட்டுடன் தொடர்பில்லாதது.  ஆணையத்தின் தன்னெழுச்சியான(suo motu) முடிவாகும் அது.

(53)தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவலைப் பெற தகுதியுடையோர் யார்?
இந்த சட்டத்தின் படிக்கு இந்தியக் குடிமகன்கள் யாவரும் தகவலைப் பெற முடியும். இந்தியக் குடிமகன்கள் அல்லாதோர் தகவலைக் கோரிப்பெற முடியாது.  யாரெல்லாம் இந்திய நாட்டு பிரஜைகள் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் படிக்கு முடிவு செய்யப்பட வேண்டியதாகும். மன்றங்களோ (associations), நிறுமங்களோ (companies), அல்லது அறக்கட்டளைகளோ (trusts) குடிமகன்கள் என்ற வரையறைக்குள் வரவில்லை.  இந்தியாவில் துவங்கப்பெற்று நடந்து வரும் அயல் நிறுவனங்களும் 'குடிமகன்' என்ற வரையறையில் இல்லை. இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவலைக் கோரிப்பெறும் உரிமை உண்டு.  இந்தியக் குடிமகன் அல்லாதோர் சார்பாகவும் யாரும் தகவலை இச்சட்டப்படிக்கு கோரிப்பெற  முடியாது. தான் யார் என்று அடையாளப்படுத்துவதற்காக பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை ஒரு மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் நேர்வில், அது செல்லத்தக்க மனு என்றே கொள்ளப்படும்.  ஆனால், ஒரு அரசியல் கட்சியோ, தொழிலாளர் சங்கமோ தன்னால் பிரதிநிதித்துவப்படுகிறது (on behalf of) என்று அறிவித்து தகவலைக் கோரிப்பெற முடியாது.  ஒருவர் தன்னுடைய சொந்த தகுதியில் தகவல்களைக் கோரலாம்.  ஆனால், நிறுவனங்களுக்காக அவர் எந்தவொரு தகவலையும் பொது அதிகார அமைப்புகளிடமிருந்து கோரவியலாது.

(54)தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவல் வழங்கும் பொறுப்புக்கடமை கொண்டவர்கள் யார்?
அனைத்துப் பொது அதிகார அமைப்புகளும் தகவல் வழங்க கடமை கொண்டவர்கள். அரசால் நேரடியாக நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் அனைத்து நிறுவனங்களும் பொது அதிகார அமைப்புகள் ஆகும்.  ஒரு நிறுவனத்தின் எந்த அளவு அரசின் பங்கு / செயற்பாடு இருந்தால் அது பொது அதிகார அமைப்பாகக் கருதப்படலாம் என்பது குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.  ஒரு நிறுவனத்தின் மீது அரசு முற்று முழுவதுமான ஆளுகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.  நிறுவனம் ஒன்றின் மீது நிர்வகிக்க / கண்காணிக்க / ஒழுங்காற்று செய்ய அரசுக்கு கடப்பாடு உள்ளது என்பதே போதுமானது.  அப்படியான அமைப்பு பொது அதிகார அமைப்பு என்றே கருதப்படலாகும்.  அரசின் ஆளுகை மறைமுகமாக இருக்கும் துணை நிறுவனங்கள் கூட பொது அதிகார அமைப்புகள்தான்.
எடுத்துக்காட்டாக, BARC Family Relief Scheme என்பது ஒரு பொது அதிகார அமைப்பாக கருதப்படும்; ஏனென்றால், அது Bhaba Atomic Research Centre என்ற பொது அதிகார அமைப்பின் ஒரு துணை அமைப்பு. IRCON International என்பது ஒரு பொது அதிகார அமைப்பு; ஏனென்றால் அதன் நிர்வாக இயக்குனர்கள் அரசால் நியமிக்கப்படுவது மட்டுமன்றி, அதன் கணக்குகள் இந்திய அரசின் தணிக்கை அலுவலரால் (Comptroller and Auditor General of India) தணிக்கை செய்யப்படுகின்றன. Delhi Development Authoirty என்ற பொது அதிகார அமைப்பு நாற்பது சதவிகித பங்குகளை வைத்திருப்பதால் DISCOMS என்ற நிறுவனமும் பொது அதிகார அமைப்பாக கருதப்படும்.

(55)பொதுத் தகவல் அலுவலர் ஒருவர் வெளியிடக்கூடாத தகவல்கள் எவை?
பொதுத் தகவல் அலுவலர் தன்னிடம் ஆயத்தமாக இருக்கும் தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வெளியிடக்கூடிய, வெளியிட்டாக வேண்டும்.  சில தருணங்களில் அதே பொது அதிகார அமைப்பின் கீழ் பணியாற்றும் மற்ற பொதுத் தகவல் அலுவலர்களிடமிருந்தும் தகவல்களை சேகரித்து மனுதாரர்களுக்கு அவர் வழங்க வேண்டி வரலாம். இருப்பினும், கீழ்க்கண்ட தகவல்கள் வெளியிடப்படக் கூடாதவை:
1. எந்தத் தகவல் வெளியிடுதலால் பொது நன்மைக்கு சாதகமான பலன்கள் ஏற்படாதோ அவற்றை வெளியிட வேண்டியதில்லை.
2. மூன்றாம் நபரின் சம்மதமில்லாமல் அவர் பற்றிய செய்திகள். எந்த செய்திகளை வெளியிட்டால் மூன்றாம் நபரின் புகழ் மற்றும் வணிக நலன்கள் பாதிக்கப்படுமோ அவற்றை வெளியிட முடியாது.
3. நடந்து கொண்டிருக்கும் புலனாய்வுகள், விசாரணைகள், குற்றவியல் வழக்குகளில் நடப்பு நீதிமன்ற விசாரணைகள், ஒழுங்கு நடவடிக்கை செயற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள், இவைகள் முற்று முழுவதுமாக முடியும்வரை வெளியிடப்படக் கூடாதவை.
4. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியின்றி அங்கு நிலுவையில் இருக்கும் எந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது.
5. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் இரண்டாவது அட்டவணையில் காணப்படுகின்ற உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றிய செய்திகள் பொதுவாக வெளியிடப்படக் கூடாதவை.  ஆனால், அப்படி ஒரு செய்தி அந்த நிறுவனங்களைப் பற்றி வெளியிடப்பட்டால் பொது நன்மைக்கு உகந்தது என்ற முடிவுக்கு பொதுத் தகவல் அலுவலர் வருவாரேயானால், அதை வெளியிடலாம். இந்த நிலையில் பொதுத் தகவல் அலுவலர் பல்வேறு விடயங்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுத்தல் அவசியம்.

(56)  பொதுத் தகவல் அலுவலரிடம் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்காமல் தவிர்க்கலாம்?
தான் சார்ந்திருக்கும் பொது அதிகார அமைப்பு பேணி வரும் ஆவணங்களிலிருந்து பொது தகவல் அலுவலர் தகவல் வழங்குகிறார். இந்த நிலையில், கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு கோருவதை மனுதாரர் தவிர்க்கலாம்.
1. பொது அதிகார அமைப்பு பேணி வரும் ஆவணங்களில் எந்த தகவல்கள் இல்லை என்று வினவுதல் தவிர்க்கப்படலாம்.
2. ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டு பொதுவெளியில் காணக்கிடைக்கின்ற தகவலை வழங்கச் சொல்லி கோருவதைத் தவிர்க்கலாம்.
3. பொதுத் தகவல் அலுவலரின் அபிப்பிராயங்களை கேட்பது தவிர்க்கப்படலாம். மேலும், ஏன், எதற்கு, எப்பொழுது, எப்படி, ஆம் / இல்லை போன்ற பொருண்மைகள் கொண்ட கேள்விகளைத் தவிர்க்கலாம்.
4. ஒரு விடயத்தைப் பற்றி பொதுத் தகவல் அலுவலரின் கருத்தைக் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி ஒரு விடயத்தைப் பற்றியதான தனது கருத்தை பொதுத் தகவல் அலுவலர் தெரிவிக்க முடியாது.
5. துறை அலுவலர்களின் தனி மனித அந்தஸ்தை குறைக்கும்படியான கேள்விகள் தவிர்க்கப்படலாம். மூன்றாம் நபரின் தனிப்பட்ட தகவல்கள் கோருவதைத் தவிர்க்கலாம்.
6. பொதுத் தகவல் அலுவலர் வெளியிட்ட ஒரு தகவலைப் பற்றிய தொடர் நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.
7. பொதுத் தகவல் அலுவலரை அறிவுரை தருமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.
8. பல கோப்புகளிலிருந்து தகவல்களை ஒன்றிணைத்துத் தருமாறு கோருவதைத் தவிர்க்கலாம். அல்லது ஒரு தகவலின் சாரத்தை மட்டும் வழங்குமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.

RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் - 3

|

(31) செய்யப்படும் மேல்முறையீட்டைத் தீர்த்து வைக்கும் பொருட்டு தகவல் ஆணையம்  எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?
தகவல் ஆணையமானது மனுதாரர்களின் இரண்டாவது மேல்முறையீடுகளை தொடர்ந்து பெற்று வருகிறது.  இந்த மேல்முறையீடுகளை எவ்வளவு விரைவாகத் தீர்த்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைந்து ஆணையம் செயல்பட்டு வருகிறது.  பெறும் மனுக்களின் காலகிரயப்படி மனுக்கள் ஆணையத்தினால் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படுகின்றன.  தலைமை தகவல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் சில மேல்முறையீடுகள் முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படுவதும் உண்டு.  நிலுவையில் இருக்கும் மேல் முறையீட்டு/மனுக்களின் நிலவரத்தைப் பற்றி ஆணையத்தின் இணையதளம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.  வழக்குகளின் விசாரணை தேதிகள் பற்றிய விவரமும் சம்மந்தப்பட்ட ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம்  செய்யப்படும்.

(32) இரண்டாம் மேல்முறையீட்டைப்  பெற்றுக் கொண்டவுடன் ஆணையம் மேற்கொள்ளும் செயற்பாடுகள்  யாவை ?
ஆணையத்தின் தபால் பிரிவில் (Dak Section)  மேல்முறையீட்டு மனு பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(aமேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக் கொண்டவுடன், ஆணையத்தின் தபால் பிரிவு மனுவிற்கு ஒரு பதிவு எண்ணை வழங்கும்.  மேல்முறையீட்டு  மனு ஆணையத்திடம் நேரடியாக வழங்கப்படும் நேர்வில், அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும்.  பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரிப்புகளின் போது, இந்தப் பதிவு எண்ணைக் குறிப்பிடலாம்.  வழக்கு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், வழக்கு எண் வழங்கப்படும்.
(b) தபால் பிரிவில் பெற்றுக் கொண்ட மனு புதிய மேல்முறையீடாக இருப்பின், ஊசு பிரிவிற்கு மாற்றப்படும்.
(cCR பிரிவில் மனுவின் தன்மை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பரிசீலிக்கப்படும். மேல்முறையீடு முறையாக செய்யப்பட்டிருப்பின் வழக்கு எண் வழங்கப்படும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம்  2005 பிரிவு 18-ன் படியான மனுவாக  இருப்பின், மனுதாரரின் மூல மனு இணைக்கப்பட்டுள்ளதா என்று சோதித்து மனுவை பதிந்து வழக்கு  எண் வழங்கப்படும்.  பிறகு, அதன் வரிசைப்படி விசாரணைக்கு வரும்.
(dவழக்கிற்கு தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல்  இருந்தால், விடுபட்டல்களை சுட்டிக்காட்டி மனுதாரருக்கு மனு திருப்பி அனுப்பப்படும். அதேபோல, மேல்முறையீட்டு மனுவுடன் மூல மனு இணைக்கப்படாவிடில், மனுதாரருக்கு அதை அனுப்பி வைக்கும்படி தபால் வழி  தகவல் அனுப்பப்படும்.
(eஆணையத்தில் ஒரு மனுவானது அகாலமாக பெறப்படும் பொழுது (முதல் மேல்முறையீடு செய்யப்படாமல் நேரடியாக  இரண்டாவது மேல்முறையீட்டை ஆணையத்திடம் செய்திருந்தாலோ, அல்லது முதல் மேல்முறையீட்டிற்கான காலக்கெடுவான 45 நாட்கள் காத்திருக்காமல் கெடு முடிவதற்கு முன்னதாகவே ஆணையத்திடம்  மேல்முறையீடு செய்திருந்தாலோ)  தள்ளுபடி செய்யப்படும்.

(33) ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யப்படுகிறபொழுது  ஏதேனும் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமா ?
செலுத்த வேண்டியதில்லை.

(34) மின்னணு சாதனம் ஏதேனும் வழியாக தகவல் ஆணையத்திடம்  இரண்டாவது மேல்முறையீடையோ, புகாரையோ அளிக்க முடியுமா ?
அளிக்க முடியும். மத்திய தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை www.cic.gov.in என்ற இணையதள முகவரியில் இரண்டாவது மேல்முறையீட்டை/புகாரைப் பதியலாம்.  தகவல் பெறும்  உரிமைச் சட்ட விதிகள்2012-ன் படி இணைக்க வேண்டிய ஆவணங்கள் மனுவுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்.  ஸ்கேன் செய்து அனுப்பப்படும் ஆவணங்களில் மனுதாரர் சான்றொப்பம்  இருக்க வேண்டும். 

(35) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு, புகாருக்கும் (Complaint)  மேல்முறையீட்டிற்கும் (Appeal) இடையில் உள்ள வேறுபாடு யாது?
பொது அதிகார அமைப்பு  ஒன்றின் முதல் மேல் முறையீட்டு அலுவலரின் உத்தரவை  எதிர்த்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(3)-ன் கீழ்  உரிய காலக்கெடுவிற்குள் செய்யப்படுவது இரண்டாம் மேல்முறையீடு(Second Appeal).
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 18-ன் கீழ் ஆணையத்திடம் நேரடியாக தெரிவிக்கும்  புகார்கள் (Complaints) மேல்முறையீடு ஆகா.  இரண்டிற்குமான வேறுபாடு  என்னவென்றால், மேல்முறையீட்டு நேர்வுகளில், உரிய தகவலை வழங்குமாறு பொதுத்தகவல் அலுவலருக்கு ஆணையம்  உத்தரவிட முடியும். புகாரளிக்கப்படுகின்ற நேர்வுகளில், இவ்வாறான உத்தரவுகளை ஆணையம் பிறப்பிக்காது.

(36) இரண்டாம் மேல்முறையீடு  உரிய காலக்கெடுவிற்குள் செய்யப்படாமலிருந்து பின்னர் செய்யப்பட்டால், அப்படி செய்யப்படுகின்ற இரண்டாம் மேல்முறையீட்டுடன் தாமதத்தை மன்னித்தருளுமாரு" (Condone Petition) வேண்டுகோள் செய்யப்பட வேண்டுமா?
ஆமாம்.  அப்படியான மன்னிப்பு வேண்டி பிரத்தியேகமான மனு செய்யப்பட வேண்டும்.

(37) இரண்டாம் மேல்முறையீட்டு காலக்கெடுவான 90 நாட்கள் கழிந்த பிறகும்,  ஆணையம் மேல்முறையீட்டை அனுமதிக்குமா?
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்  இரண்டாம் மேல்முறையீடு செய்யாமல்  இருந்ததற்கான தகுந்த காரணங்கள் மனுதாரரிடம் இருந்தன என்று  ஆணையம் கருதும் பட்சத்தில், காலக்கெடு முடிந்த பிறகும்  இரண்டாம் மேல் முறையீட்டை ஆணையம் அனுமதிக்கும்.

(38) ஆணையத்திடம் புகார் அளிப்பதற்கான காலக்கெடு ஏதும் உண்டா?
இல்லை. இருப்பினும், அளிக்கப்படும் புகாரானது சம்மந்தப்பட்ட விடயம் குறித்த நியாயமான காலக்கெடுவிற்குள் செய்யப்படுதல்  நன்று.

(39) புகார் ஒன்றை நேரடியாக ஆணையத்தில் அளிக்க முடியுமா ? ஆம் எனில், என்னென்ன நேர்வுகளில் நேரடியான புகாரை ஆணையத்திடம் அளிக்க முடியும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 18-ன் படிக்கு ஆணையத்திடம் நேரடியாக புகார்களை (Complaints) அளிக்கலாம்.
(a) பொது அதிகார அமைப்பு ஒன்று இச்சட்டப்படி பொதுத்தகவல் அலுவலரை நியமித்திருக்காத நேர்வுகளிலோ அல்லது துணைப் பொதுத்தகவல் அலுவலர் மனுக்களைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் நேர்விலோ, அல்லது பெற்றுக் கொண்ட மனுக்களை உரிய அலுவலரிடம் சேர்ப்பிக்க அவர் மறுக்கும் நேர்விலோ ஆணையத்திடம் நேரடியான புகாரை மனுதாரர் அளிக்கலாம்.
(b) இச்சட்டப்படி வழங்க வேண்டிய  தகவல்கள் மறுக்கப்படும் நிலையில்
(c)கோரியிருந்த தகவலைப் பற்றிய எவ்வித எதிர்வினையும் பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து  மனுதாரர் பெறாத நிலையில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் வழங்கப் பெறாத நிலையில்
(d)கோரியிருந்த தகவல் வழங்கும் பொருட்டு  தன்னிடமிருந்து நியாயமற்ற தொகை ஒன்று பொதுத்தகவல் அலுவலரால் கோரப்படுகிறது என மனுதாரர் கருதும் நேர்வில்
(eமுறையற்ற, முழுமையற்ற, தவறான, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவல் தனக்கு பொதுத்தகவல் அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் கருதும் நேர்வில்
(f) இச்சட்டப்படிக்கு ஆவணங்களைப் பெறுவதில் அல்லது வேண்டுவதில் உள்ள சிரமங்களின் பொருட்டு மனுதாரர் நேரடியாக சம்பந்தப்பட்ட ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.

(40) ஆணையத்திற்கு அளிக்கப்படும் இரண்டாம் மேல்முறையீடு எத்தனை நகல்களில் செய்யப்பட வேண்டும் ?
ஒரு நகலில் மட்டுமே இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

(41)  இரண்டாம் மேல்முறையீட்டின் போது ஆணையத்திற்கு அளிக்கப்படும் ஆவணங்கள் மேல்முறையிட்டவரால் சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டுமா ?
ஆமாம்.  இச்சமயத்தில் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் மேல்முறையிட்டவரால் சரிபார்க்கப்பட்டு சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.  இந்த இரண்டாவது மேல்முறையீடானது இணையம் வழியே பதியப்படுகிறதென்றால், சம்பந்தப்பட்ட நபரின் சான்றொப்பம் தாங்கிய ஆவணங்கள் மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

(42) இரண்டாவது மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
(i) தகவல் ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீட்டு விண்ணப்பம்.
(ii) தகவல் ஆணையத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பதில் ஏதேனும் இருப்பின் அவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
(iii) முதல்  மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பப்பட்ட மனுவின் நகல்.
(iv)முதல் மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டிருந்தால் அதன் நகல்.
(v)தன்னுடைய கோருதல்களுக்கு பலம் சேர்க்கும் என்று மனுதாரர் கருதும் ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றின் நகல்கள்.
(vi)இரண்டாம் மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களின் உள்ளடக்கப்பட்டியல்(Index).

(43) ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாம் மேல்முறையீட்டுக்கு என தனியான வடிவமைப்பு (Format) உள்ளதா ?
ஆம்.  உள்ளது.
1.  மேல்முறையீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி
2.  மேல்முறையீடு அனுப்பப்படும் தகவல் ஆணையரின் பெயர் மற்றும் முகவரி
3.  ஏற்கனவே தகவல் வழங்கியிருக்கும் தகவல் ஆணையரின் பெயர் மற்றும் முகவரி
4.  முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பெயர் மற்றும் முகவரி
5. விண்ணப்ப விவரங்கள்
6.  எந்த ஆணையை எதிர்த்தாவது இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், அந்த ஆணை எண் மற்றும் விவரம்
7.  மேல்முறையீடு செய்யக் காரணமாய் இருந்துள்ள வழக்கின் தன்மை பற்றிய விவரம்
8.  மனுதாரரின் கோரிக்கை
9.  எதன் அடிப்படையில் கோரிக்கையையும் பரிகாரமும் வேண்டப்படுகிறது
10. மனுதாரர் அளிக்க விரும்பும் வேறு தகவல்கள் (ஏதேனும் இருப்பின்)
11. விவரங்கள் அனைத்தும் என்னால் சரிபார்க்கப்பட்டவை என்று மனுதாரரின் சான்றொப்பம்.

(44) இரண்டாம் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு என்ன ?
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் தகவல் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இரண்டாம் மேல்முறையீட்டை மனுதாரர் செய்ய வேண்டும்.

(45) ஆணையத்திடம் இரண்டாம் மேல்முறையீடு செய்வதற்கு முன், முதல் மேல்முறையீடு செய்திருப்பது அவசியமா ?
ஆமாம்.  முதல் மேல்முறையீடு செய்திருக்காமல் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டால், மேற்படி மனு ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்படும்.

(46)எந்த  சூழலில் ஆணையத்தை இரண்டாம் மேல்முறையீடு பொருட்டு மனுதாரர் அணுகலாம்?
(i) முதல் மேல்முறையீடு செய்து 45 நாட்களுக்குப் பிறகும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து எந்தத் தகவலும் பெறப்படாதிருக்கும் நேர்விலும்
(ii) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(3)-ன் கீழ் முதல் முறையீட்டு அலுவலரின் தகவல் மனுதாரருக்கு திருப்தி தராத நேர்விலும் ஆணையத்தை இரண்டாம் மேல்முறையீட்டின் பொருட்டு அணுகலாம்.

RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் -2

|
(16) இச்சட்டத்தின்படி தகவல் பெறும் வழிமுறை யாது ?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு ஒரு பொது அதிகார அமைப்பிலிருந்து தகவலைப் பெற விரும்பும் இந்தியக் குடிமகன் ஒருவர், சம்மந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் பொதுத் தகவல் அலுவலருக்கு எழுத்து மூலம் ஹிந்தி /ஆங்கிலம் /அப்பிரதேச மொழி ஆகிய ஒன்றில் மனு செய்யலாம்.  விண்ணப்பமானது சுருக்கமானதாகவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ்  மனு அனுப்பும் நேர்வில், இச்சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தையும் மனுதாரர் செலுத்த வேண்டும்.

(17) எந்தப்பொது அதிகார அமைப்புகளுக்கு தகவல் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?
இந்தச்  சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் (Second Schedule)  உள்ள சில உளவுத்துறை/பாதுகாப்பு  நிறுவனங்களுக்கு தகவல் அளிப்பதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, லஞ்சம்/ஊழல் குற்றச்சாட்டுகள், மனித  உரிமை மீறல்கள் போன்றவை குறித்த தகவல் வேண்டலாக இருப்பின், இந்த நிறுவனங்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் தர உட்படுத்தப் பட்டவையே.

(18) தகவல் பெறும் உரிமை என்றால் என்ன ?
பொது அதிகார அமைப்பு  ஒன்றின் வசம் இருக்கும் தகவலை இந்தியக் குடிமகன் ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் கோரிப் பெறுவதற்காக அவருக்கு இருக்கும் உரிமையே தகவல் பெறும் உரிமைஆகும்.
(i) பணி, ஆவணம், பதிவேடுகளைப் பார்வையிடுதல்.
(ii) குறிப்பெடுத்துக் கொள்ளுதல், சான்றொப்பமிட்ட ஆவணங்கள், பதிவேடுகளைப்  பெறுதல்.
(iii) சான்றொப்பமிட்ட மாதிரிகளை (Samples) பெறுதல்.
(iv) குறுந்தகடுகள் (Diskettes), மின்னனு தரவு அட்டைகள் (Floppies),   நாடாக்கள்(Tapes), ஒளி நாடாக்கள் (Video Cassesses) மற்றும் வேறெந்த மின்னனுச் சாதனம் மூலமும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகள், அச்சடித்தப் பிரதிகள் ஆகியவை தகவல்என்பதில் அடங்கும்.  இவற்றை ஒரு இந்தியக் குடிமகன் எந்தப் பொது அதிகார அமைப்பிலிருந்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு கோரிப் பெற முடியும்.

(19) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் யார் தகவலைக் கோரிப்பெற முடியும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 3-ன் படி, இந்தியக் குடிமகன் ஒருவர் இச்சட்டப்படிக்கு தகவலைக் கோரிப்பெற முடியும்.

(20) தான் பிறப்பித்த உத்திரவை தகவல் ஆணையம் மீளாய்வு செய்ய இயலுமா?
முடியாது.

(21) தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதா?
ஆம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(7) -ன் படிக்கு, ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்தக்  கூடியதே.  (Binding).

(22) தகவல் ஆணையத்தின் முடிவு வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எவ்விதம் தெரிவிக்கப்படுகிறது ?
தகவல் ஆணையர் வழக்கை விசாரித்த பிறகு, முறையான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  ஆணையின் அச்சுப்பிரதி ஒன்று தகவல் கோரியவர்/மேல்முறையீட்டாளர் தரப்பிற்கும், பொதுத்தகவல் அலுவலருக்கும் தபால் மூலம் அனுப்பப்படுகிறது.  இதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.  உத்தரவின் நகல் ஆணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

(23) மனுதாரருக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஆணையம் கருதும் நேர்வில் நஷ்டஈடு எதையும் உத்தரவிட முடியுமா?
முடியும்.  பொருத்தமான நேர்வுகளில் மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்க தகவல் ஆணையம் உத்தரவிட முடியும்.

(24) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கான செயற்பாடுகளில் மனுதாரர் /மேல் முறையீட்டாளர் பங்கெடுக்க முடியுமா?முடியாது.

(25)பொதுத்தகவல் அலுவலர்கள் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ளல்களை தகவல் ஆணையம் பரிந்துரைக்க முடியுமா?
முடியும்.  எந்தவிதத் தகுந்த காரணமுமின்றி பொதுத்தகவல் அலுவலர் தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்ற நேர்விலும், பிரிவு 7(1) -ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்கியிருக்கவில்லை என்ற நேர்விலும், தீய எண்ணத்தோடு தகவலை வழங்க பொதுத்தகவல் அலுவலர் மறுத்துள்ளார் என்ற நேர்விலும், வேண்டுமென்றே தவறான, முழுமையற்ற, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கியுள்ளார் என்ற நேர்விலும், வழங்கியிருக்க வேண்டிய  தகவலை பொதுத்தகவல் அலுவலர் வேண்டுமென்றே அழித்துவிட்டார் என்ற நேர்விலும், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக எடுக்கப்பட்ட வேண்டிய துறை நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரைக்கும்.

(26) அபராதம் எதுவும் விதிக்கப்படுவதற்கு முன் பொதுத்தகவல் அலுவலரின் தரப்பை எடுத்துச் சொல்ல  அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
வழங்கப்படும்.  அபராதம் தன் மீது ஏன் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின், எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு பொதுத்தகவல் அலுவலருக்கு ஆணையத்தால் வழங்கப்படும்.

(27)மனுவை/மேல்முறையீட்டை விசாரிக்கும் ஆணையம் தண்டம் எதையும் விதிக்க முடியுமா?
எந்தவிதத் தகுந்த காரணமுமின்றி பொதுத்தகவல் அலுவலர் தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்ற   நேர்விலும், பிரிவு 7(1) -ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்கியிருக்கவில்லை என்ற நேர்விலும், தீய எண்ணத்தோடு தகவலை வழங்க பொதுத்தகவல் அலுவலர் மறுத்துள்ளார் என்ற நேர்விலும், வேண்டுமென்றே தவறான, முழுமையற்ற, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கியுள்ளார் என்ற நேர்விலும்வழங்கியிருக்க வேண்டிய தகவலை பொதுத்தகவல் அலுவலர் வேண்டுமென்றே அழித்துவிட்டார் என்ற நேர்விலும், ஆணையம் தண்டம் விதிக்க முடியும்.   இக்காரணங்களின் பொருட்டு நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூற்று ஐம்பது வீதம் ரூபாய் 25,000-க்கு மிகாமல், (தகுந்த தகவல் தரப்படும் நாள் வரைக்கும்)  தண்டமாக தகவல் ஆணையம் பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக விதிக்கலாம்.

(28) மூன்றாம் நபரால் மந்தணத்தன்மையுடையதுஎன்று கருதப்படும் தகவலை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மனுதாரருக்கு வழங்க முடியுமா?
இப்படியான நேர்வுகளில், மூன்றாம்  நபர் எழுத்து மூலம் தான் சம்மந்தப்பட்ட தகவல் மந்தணத்தன்மை உடையதுஎன அறிக்கை வழங்க வேண்டும்.  மூன்றாம் நபருக்கு ஏற்படக்கூடிய சேதாரங்களை விட, பொது நன்மைக்கு நலம் பயப்பவை அதிகமாக இருப்பதாக பொதுத்தகவல் அலுவலர் கருதினால், அப்படியான தகவல்களை சட்டவிதி முறைகளுக்குட்பட்டு மனுதாரருக்கு வழங்க முடியும்.

(29) கோரப்பட்ட தகவலை மறுத்ததில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பொறுப்பு யாரைச் சேர்ந்தது?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(5) -ன் கீழ், கோரப்பட்ட  தகவலை மறுத்ததில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பொறுப்பு பொதுத்தகவல் அலுவலரையே சாரும்.

(30) தொலைக் காணொலிக் கூட்டங்கள் (Video Conferencing) வழியாக தகவல் ஆணைய விசாரணைகள் நடைபெறலாமா?
நடைபெறலாம்.  இம்மாதிரியான விசாரணைக்கான வசதிகள் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் உள்ள தேசிய தகவல் நிலையத்திலும் (National Informatics Center)  உண்டு.