தாட் பூட் தஞ்சாவூர்

| Thursday, September 14, 2017
இந்தியா மக்கள் தொகையைப் பொறுத்தவரை உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்பதாக இருந்து வந்திருக்கிறது. அமெரிக்காவைப் போல நவீன தொழிற்நுட்பங்களை செரித்துக் கொண்ட ஜனநாயகமாக அண்மைக்காலம் வரை இந்தியா இல்லை. படிப்பறிவு இல்லை என்பதுதான் காரணம். கேரளாவைப் பொறுத்த வரையிலும் கூட, நூறு சதவிகித படிப்பறிவு என்பதெல்லாம் மக்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் என்பதுதான்.  டிஜிட்டல் லிட்டரசி என்பதற்கெல்லாம் நகர்ந்துவிட்ட ஜனநாயகங்கள் உண்டு.  நவோம் சோம்ஸ்கி "conceptual engineering" மற்றும் "media conspiracy" என்பதாகப் பேசுவது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் உண்மைதான்.  தங்கள் கட்சியில் உள்ள கோஸ்ட் ரைட்டர்ஸ் உதவியுடன் தொடர்ந்து பொதுவெளியில் அறிவுஜீவித்தனமாக கருத்துக்களை தூவிக் கொண்டே வருதல் அங்கெல்லாம் நூதனமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிப் பத்திரிகைகள் உண்டு; கட்சி தொலைக்காட்சி சேனல்கள் உண்டு. கட்சி ஆதரவு பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - பிரமுகர்கள் உண்டு. அறிவுஜீவிகளைப் போன்ற தோற்றத்துடன் ஒரு கட்சி சார்ந்த - ஆட்சி சார்ந்த நிலைப்பாடுகளை எல்லாவிதத்திலும் ஆராய்ந்து நடுநிலையில் நின்று "எழுதும்" hired writers இன்று முகநூல், இணையம், வாட்ஸ்அப் போன்றவைகளில் பல்கிப் பெருகி விட்டார்கள்.  இதை அனைத்தையும் நம்பி மற்றவர்களுக்கு கண்மூடித்தனமாக அனுப்பிக்கொண்டே "அறிவுஜோதியில்" தம்மை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள் / நடுவயதுக்காரர்கள் கோடிக்கணக்கில் முளைத்து விட்டார்கள். 

நீட் வேண்டாம் என்ற நிலையை ஆதரிக்கும் பல கட்டுரைகளை நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிக் கொண்டிருந்தார்.  திடீரென்று இன்று காலை நீட் வேண்டும் என்பதாக எழுதப்பட்டிருந்த கட்டுரையை அவர் அனுப்பி வைத்ததோடு அல்லாமல், "இதை விளங்கிக் கொள்ளாதவன் இருக்கும் வரை இந்த நாட்டை திருத்த முடியாது" என்ற ஒரு தனிக் குறிப்பும் இருந்ததைப் பார்த்ததும் ஆச்சர்யமாகி அவரை அழைத்து, "எப்படி உங்க நிலைப்பாடு மாறலாம்? நீட் வேண்டாம் என்பதாக பல்வேறு கட்டுரைகள் - செய்திகளைப் நாமிருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஒருவருக்கொருவர் அனுப்பி வந்திருக்கிறோம்.  உங்களுடைய நிலைப்பாடு எப்படி தலைகீழாக மாறியது?" என்று கேட்டேன்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  "நீட் வேண்டாம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும்" என்றவரிடம், இன்று காலை அவர் அனுப்பிய கட்டுரையை மீண்டும் படிக்க சொன்னதும், கொஞ்ச நேரம் கழித்து அலைபேசியில் அழைத்து சொன்னார். "மன்னிக்கவும், நான் அதை சரியாகப் படிக்கவில்லை. நீண்ட கட்டுரை என்பதாலும், இரண்டொரு பத்திகள் படிக்க அறிவுஜீவித்தனமாக இருந்ததாலும் நமது நிலைப்பாடுதான் அதிலும் எதிரொலித்திருக்கிறது என்று நம்பி அனுப்பி விட்டேன்."

இந்தத் தவறை நாம் அடிக்கடி செய்கிறோம்.  நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் அரசியல் என்றால் என்னவென்று தெரியும்.  அரசியல் இல்லாதவனே இல்லை.  தன்னிடம் அரசியல் இல்லை என்று நம்புவன் அறிவிலி. தமிழ்நாட்டில் எண்பது விழுக்காட்டிற்கும் மேலானவர்களிடம் political conscientiousness இல்லை என்பது எனது எண்ணம்.  political sensitivity - political stand ஒவ்வொருவரிடம் இருப்பது மிகவும் அவசியம்.  கட்சி சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலுமே தவறில்லை.  கட்சி சார்ந்த நிலைப்பாடு ஒருவரிடம் இருக்கிறதென்றால் ஒவ்வொரு விடயத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.  கட்சியின் தத்துவங்களைக் கற்றுத் தெளிந்திருத்தல் இன்றியமையாதது. அமெரிக்காவில் ஒவ்வொரு நடிகரிடமும் கட்சி அரசியல் நிலைப்பாடு உண்டு.  இங்கிருக்கும் கமலஹாசன் - ரஜினிகாந்த் போன்று விளக்கெண்ணெய் அரசியலை அவர்கள் செய்வது இல்லை.  பாஜக-வின் தத்துவங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களைக் கூட மதிக்கத் தயார்; தனக்கு வரும் எந்த செய்தியையும் கட்டுரையையும் படிக்காமல், வந்தவுடனேயே தான் மிகப்பெரிய செய்தியை மற்றவருக்கு படிக்கத் தருகிறோம் என்ற மிதப்பில் அவைகளை அனுப்பும் நபர்களின் மீது அருவருப்பும் வெறுப்பும் அலைஅலையாக வருகிறது.

இப்பொழுது ரிப்பப்ளிக் என்ற செய்தி தொலைக்காட்சியை துவக்கியிருக்கும் அர்னப் கோஸ்வாமியை அவர் NDTV 24x7-ல் செய்தி வாசிப்பாளராக இருந்த போதிலிருந்தே தெரியும்.  மிகவும் அமைதியாக வந்து செய்தியை வாசித்து விட்டு விருந்தினரை புன்சிரிப்புடன் இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டு எழுந்து போய்விடுவார்.  அண்ணாச்சி Times Now சேனலில் வரத்தொடங்கிய பிறகு, ஒன்பது மணிக்கு மேல் அந்த சேனலை பார்க்கக் கூடியதில்லை.  விருந்தினரை அழைத்து செருப்பில் அடிக்காத குறையாய் அவர்களைப் பார்த்து நாயாகக் குரைத்து media trial நடத்தி நடைப்பிணமாய் அனுப்பி வைப்பார்.  நண்பர்களுடன் இருக்கும் போது, திடீரென்று திரையில் தோன்றும் அர்னப் கோஸ்வாமியை உடனே அணைத்து விடும்படி கறாராக சொல்லிவிடுவேன். எனக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததற்கும் அர்னப் கோஸ்வாமிக்கும் நேரடியான சம்பந்தம் உண்டு. இப்பொழுது கூட அவரின் படத்தை பார்க்க நேரும்போதெல்லாம் படபடப்பு வருகிறது.  இப்படியான நபரைக் கூட மன்னித்து விடுவேன்; ஆனால், தனக்கு உள்வருகின்ற எதையும் படிக்காமல் பிறருக்கு அனுப்பி வைக்கும் பிரகஸ்பதிகளை மன்னிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. வளர்த்தெடுக்கக் கூடியதா அந்த வகை ஆற்றல் என்பதும் தெரியவில்லை.

இவரைப் போலவே, பாஜக சார்பாக இரவு வேளைகளில் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தோன்றும் ஒவ்வொருவரும் எனக்கு அருவருப்பை தந்த வண்ணமே இருக்கிறார்கள்.  இருப்பினும், அவர்களுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு.  என்னுடைய அரசியலுக்கு மாற்றாக வேறொரு அரசியல் நிலைப்பாடு அவர்களிடம் இருப்பதை தெளிவாகவும் உரக்கவும் என்னிடம் அவர்கள் சொல்லியவாறே இருக்கிறார்கள்.  அவர்களை புறந்தள்ளுவது எளிது.  ஆனால், வந்ததையெல்லாம் அனுப்பி வைக்கும் அண்ணாச்சிகளைப் புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கிறது.  இப்படியெல்லாம் என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது: "இந்த மாதிரியான கட்டுரையை எல்லாம் என்னுடைய மனைவிக்கு அனுப்பி வைத்தால்தான் நான் விஷயம் தெரிந்தவன் என்று அவள் நம்புவாள்."

இந்த சூழலில், போலி அறிவுஜீவிகளின் கட்டுரைகளின் நோக்கம் எளிதில் நிறைவேறி விடுகிறது. தற்கொலை செய்துகொண்ட பெண்ணை முன் வைத்து, பாஜக, அதிமுக சில்லுகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மருத்துவர் கிருஷ்ணசாமி கட்சி, பாமக இன்னபிற கட்சிகளின் திரைமறைவு அறிவுஜீவிகள் தங்களின் கருத்தை  பொதுவெளியில் நடுவுநிலைமை கருத்தாக பொழிந்து கொண்டேயிருக்கிறார்கள்.  எனக்கு இந்த ஆசாமிகளைப் பற்றி பொருட்படுத்த எதுவுமில்லை. தனக்கென்று ஒரு அரசியல் வைத்திருப்பவனை இந்த போலி ஞானஸ்தர்கள் எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், எது தனக்கு அனுப்பப்பட்டாலும், எதைப் படிக்க நேர்ந்தாலும் அது உண்மை எனக் கருதி அடுத்தவருக்கும் அனுப்பும் வாட்ஸ்அப் - முகநூல் வாசிகளைப் பற்றிய கவலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.  மிகவும் நுண்ணிய அளவில் நடக்கும் பிரச்சாரம் இது.  அர்ஜுன் சம்பத் அவர்கள் சாதிக்கு எதிரானவர் என்றும், சாதிக் கட்சி நடத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றும் ஒரு கட்டுரை எனக்கு சமீபத்தில் அனுப்பப் பட்டிருந்தது.  அதி கொடுமையாக, ஒரு புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டிருந்தது. வாங்குகிற காசுக்கு இந்த திரைமறைவு எழுத்தாளர்கள் குறைவில்லாமல் வேலை செய்கிறார்கள்.  எந்தப் பொய்யையும் இங்கே படிப்பவனின் மண்டைக்குள் ஏற்ற முடிகிறது என்பது நமது கல்வி அமைப்பையே கேவலப்படுத்துவதாக இல்லையா? 

எனக்கு என்ன ஆசையென்றால், தமிழ் சூழலை நன்கு விளங்கிக் கொண்ட, நவோம் சோம்ஸ்கி போன்ற, மூன்று நான்கு பேர்களுக்கான தேவை இங்கிருப்பதால், அவர்களை நாம் கூடிய விரைவில் உருவாக்க வேண்டும் என்பதுதான். அமெரிக்க அரசை எதிர்த்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார் சோம்ஸ்கி.  ஆனால், "அமெரிக்காவின் பொக்கிஷம் சோம்ஸ்கி" என்று சொல்கிறது அமெரிக்க அரசு.  அவர் போல ஒருவர் இங்கிருக்கும் நேர்வில், அவரை 'பொக்கிஷம்' என்று சொல்வாரா மாண்பமை எடப்பாடி பழனிசாமி அவர்கள்?     

0 comments:

Post a Comment