ஆதவனின் காகிதமலர்கள்

| Thursday, September 14, 2017
தமிழ் புனைவுலகம், குறிப்பாக நாவல் உலகம், பாரியமான சோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறது என்று சொல்ல முடியாது.  வடிவத்தைப் பொறுத்த வரையில், சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே. சில குறிப்புகள் இன்று வரையிலும் சொல்லத்தக்க படைப்பாக இருக்கிறது.  இதையொட்டி வேறு சில நாவல்களும் வந்திருக்கின்றன.  சாரு நிவேதிதாவின் ஓரிரு நாவல்களை சொல்லலாம்.  கருத்துலகைப் பொறுத்தவரை, தமிழ் நாவல் உலகம் சம்பிரதாயமான விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாகவே உள்ளது.  பல நாவல்களின் சாரமாக வறுமையும் அதன் கொடுமையும் இருந்திருக்கின்றன.  அடுத்ததாக கற்பு.  இது கொடுமையிலும் கொடுமை.  கற்பும் தாலியும் இங்கே கேவலப்பட்டுள்ளது போல, இந்திய துணைக்கண்டத்தின் வேறு எந்த பிராந்திய இலக்கியத்திலாவது நடந்திருக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது.  இருக்காது என்றுதான் நினைக்கிறேன். 

புரட்சியான படைப்புகள் வந்திருக்கின்றனவா என்றால், நாவலைப் பொறுத்தவரை, ஜெயகாந்தனைத்தான் சொல்ல வேண்டும்.  ஜி.நாகராஜனும் நினைவுக்கு வருகிறார்.  முக்கியமாக வண்ணநிலவனையும் அவரது கடல்புரத்தில் நாவலையும் சொல்ல வேண்டும்.  கற்பு என்ற கருத்தாக்கம் இவர்களது படைப்புக்களில், தமிழ் சம்பிரதாய விழுமியங்களில் சொல்லப்படுவதை முற்றிலும் நிராகரித்து, அடித்து நொறுக்கப் படுகிறது.  இதை சுக்கு நூறாக்குபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு அல்லது மேல்வர்க்கங்கள்தான். பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்திடம் கற்பு, இன்று வரைக்குமே, சிக்கி அல்லாடுகிறது.  ஜெயகாந்தன் இந்த வர்க்கத்திடையே ஊறிப்போயிருக்கும் முட்டாள்தனமான கற்பு சார்ந்த பாரம்பரிய விழுமியத்தை கேலியும் கையில் சாட்டையுமாக வெளுத்து வாங்குகிறார். 

கலாச்சார வெளியில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த கற்பு சமாச்சாரத்தை உடைத்து உள்ளே ஒன்றுமேயில்லை என்று காண்பித்தாலும், அவர் பெயரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் - அவர்கள் கூட்டத்தில் இருந்த படைப்பாளிகள் - கற்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூக்கிப் பிடித்தார்கள்.  மனோகராவில் மனோகரன் தனது அன்னையின் கற்பை ரொம்பவும் சிலாகிக்கிறான்.  அன்னையின் கற்பைப் பற்றி தன்னுடைய அப்பா சேதாரமாக ஒரு வார்த்தையை சொல்லிவிட்டதால், தன்னைக் கட்டியிருந்த சங்கிலியை உதறிவிட்டு பக்கத்தலிருந்தவரிடம் வாளைப் பெற்று அவரைக் கொல்ல முன்னேறுகிறான்.  எங்கிருந்தோ அன்னையே ஓடி வந்து வேண்டாம் மனோகரா, அவரை விட்டுவிடு என்று ஆணையிட்டு அவருக்கு உயிர்ப் பிச்சை தருகிறாள். பெரியார் இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.  சீடர்களே துரோகம் செய்கிறார்கள்.  ஈரோட்டுக்காரர் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" நம்பவே முடியாத ஒரு புத்தகம்.  வெளிவந்த காலத்தில், உலக அளவிலேயே சர்ச்சையைத் துவக்கியிருக்கக் கூடிய புத்தகம் அது.  ஆனால், பெரிய அளவில் தமிழ் கூறும் நல்லுலகில் சர்ச்சை எதனையும் அந்தப் புத்தகம் ஏற்படுத்தவில்லை என்பதில் நிறைய செய்திகள் இருக்கின்றன.  என்னுடைய தோழிகளிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்.  மிரண்டு அரண்டு போயிருக்கிறார்கள்.  படித்துவிட்டு இன்றுவரை என்னிடம் பேசாமல் இருக்கும் தோழி அடங்கலாக, நிறைய பெண்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கிறது.  நூற்றாண்டுகளாக உறைந்து போயிருக்கும் கருத்தாக்கத்தின் சக்தியை என்னவென்று சொல்வது?

விஷயத்திற்கு வருகிறேன்.  இந்த நிலையில், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், வண்ணநிலவன் ஆகியோரோடு இன்னும் இருவரைப் பற்றி சொல்ல வேண்டும்.  முதலாமவர், ஒப்பீட்டளவில், கொஞ்சம் பிரபலமானவர்.  தில்லி சர்வகலா சாலையின் மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், கணையாழியின் மேனாள் ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி.  இவரின் பல நாவல்களில் கற்பு, அதன் சம்பிரதாயமான நிலையில் இருந்து பார்க்குமிடத்து, பலத்த சேதாரத்திற்கு ஆளாகியிருக்கிறது.  நிலமென்னும் நல்லாள், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, தீவுகள் போன்ற பல படைப்புகளில் வரும் பெண் மாந்தருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தமக்குப் பிடித்த ஆண்களுடன் தாம் விரும்பும் மாதிரியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.  தி.ஜானகிராமனை இந்த பட்டியலில் கொண்டு வர முடியாது. அவர் பெண்களை சக்தி வழிபாடு செய்பவர்.  லிபிடோ மிகுந்திருக்கும் பெண்கள் அவரது ஒவ்வொரு நாவலிலும்  வந்தாலும், அசாதரணமானவர்களாகவே அவர்கள் வருகிறார்கள்.  பாபு காதலில் விழுந்த யமுனா, அம்மிணி யாவரும் பெரும் தேவதையாக அவர்களின் ஆண்களால் வழிபடப் படுகிறார்கள். இந்திரா பார்த்தசாரதியின் பெண்கள் நம்மைச் சுற்றி எங்கும், மத்திய வர்க்கத்தில், இருப்பவர்கள்.  கற்பை உதறி எழுவதுடன், அதனை எதிர்த்தும் ஆண்களுடன் பெரும் விவாதம் செய்பவர்கள். ஆண்கள் அதிர்ந்து நிற்பதை ரசிப்பவர்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆட்படாதவர்கள்.  காலங்காலமான வலிமையான சங்கிலிகளை சிலிர்த்து எழுந்து உதறி முன்னே நடப்பவர்கள்.  எதைப் பற்றியும் சொந்த கருத்துக்களை வளர்த்துக் கொண்டவர்கள்.  அவர்களின் உறவுகளில் ரகசியம் என்று எதுவுமில்லை.  விக்கித்து நிற்கும் ஆண்களின் மேல் எந்த பரிதாபமும் படாமல், அவர்களின் நிழலையும் விலக்கி செல்பவர்கள்.  இந்திரா பார்த்தசாரதி தன்னுடைய வீரியமான இப்படியான நாவல்களை எழுபதுகளில் எழுதியிருக்கிறார்.

இபா தில்லியில் வசித்தவர்.  அது ஒரு வித சௌகரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கலாம். மனிதனின் அகப் போராட்டங்கள் இவரது நாவல்களின் முத்திரையான பண்பு.  கூர்மையான கத்தி போன்ற வசனங்களைத்தான் இவரது மாந்தர்கள் பேசிகிறார்கள்.  முட்டாள்கள் என்று எவருமில்லை.  விழுமியங்களுக்கு இடையில் பெரும் போராட்டம் தொடர்ந்து நடந்தவாறு இருக்கிறது.  இபா தில்லியில் வசித்த காலத்தில் இன்னொருவரும் அங்கே இருந்திருக்கிறார்.  ஆதவன்.  "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு இன்றளவும் பேசப்படுவது.  தில்லி மாநகரத்தில் வசிக்கும் உயர்தட்டு / நடுத்தர வர்க்க தமிழர்களின், குறிப்பாக பிராமணர்களின், பகல்வேஷங்கள் மற்றும் இரவு வேஷங்களைப் பற்றிப் பேசுகின்றன இவரது கதைகள்.  உண்மையில், கதைக்க இவரிடம் ஒன்றுமில்லை. ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து வேஷம்போட்டு பின் மரித்த மனிதர்களின் வாழ்க்கைகள்தான் அவை.  இவரின் "காகிதமலர்கள்" என்ற நாவலைப் பற்றி யாரோ எழுதி எப்போதோ படித்திருக்கிறேன்.  இந்த வருட ஈரோட்டு புத்தகக் காட்சியில் இந்த நாவலை காலச்சுவடு கடையில் பார்த்ததும், வாங்கி வந்து விட்டேன்.  காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசையில் மறுபதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். சுமார் நானூறு பக்கங்கள் கொண்டது.  ஒரே மூச்சில் படிக்க முடிந்தது.  படிக்கப் படிக்க மூச்சு அடைத்துக் கொண்டது.  எளிதாக சொல்லி விட முடியும்.  இபா-வின் நாவல்களை விட பல மடங்கு தைரியம் கொண்ட எழுத்து.  தாலியே தேவை இல்லாமல் தம்பதிகள் இருக்கிறார்கள்.  தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாக அவர்கள் விவாதித்தவாறே இருக்கிறார்கள்.  பெண்கள் இயல்பாக சிகரெட்டும் மதுவும் சுகிக்கிறார்கள்.  மனைவி ஒரு இளைஞனால் கவரப்பட்டிருப்பதை அவள் கணவன் கவனப்படுத்தாமல் கடக்கிறான். அரசுச் செயலாளர் பதவில் இருக்கும் கணவனின் பதவி உயர்விற்கு மனைவி தன்னால் ஆன கைங்கர்யங்களைச் செய்கிறாள்.  மந்திரிக்கு மனைவியைப் பிடிப்பதால், தனக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று கணவனுக்கு நிச்சயமாகத் தெரிகிறது.  தான் அப்படி இருப்பது மனைவிக்கு பிடிக்கிறது என்பதுதான் கவனப்படுத்த வேண்டியது.  மூன்று பிள்ளைகள், கணவன் என்ற கூட்டத்தில் காணாமல் போக அவள் தயாரில்லை.  காதலியின் பேச்சு சுவாராஸ்யமில்லாமல் போனதால், சினிமாவிற்குப் போன இடத்தில் பக்கத்து சீட்டில் இருப்பவன் தன்னிடம் ஓரினச் சேர்க்கைக்கு முயலும் போது, சரி போனால் போகட்டும் என்று ஒத்துக் கொள்ளும் கல்லூரி மாணவனை எந்தவித அசூசையில்லாமல் சம்பிரதாயமான வாசகன் கூட  எதிர்கொள்ள முடிவது ஆதவனின் சாகசம்தான். லஞ்சம் வாங்க வக்கில்லாத தன்னுடைய அப்பாவிடம் எந்தவித மரியாதையும் இல்லை மகனுக்கு.  அவருடைய உயர் அதிகாரி லஞ்சம் வாங்குவதால் அவர் இவனுக்கு ஆதர்சமாகப் போகிறார்.  அவருக்கு தன்னுடைய அப்பா தெரிந்தோ தெரியாமலோ உதவுவதால், அவர் வீட்டில் உள்ள ஆடம்பரமான பொருட்கள் அனைத்தும் தனக்கும் சொந்தமானவை என்று நினைக்கிறான். நண்பனின் வீட்டிற்கு வரும் இளைஞன் அவனுடைய அம்மாவை பெரும் அழகியாக நினைப்பது மட்டுமன்றி அவளிடம் தனக்கு கிடைக்கவிருக்கிற பாலுறவை நோக்கி இயல்பாக முன்னேறுகிறான்,  மருமகளின் மேக்அப் அறிவையும், காரோட்டும் திறனையும், சிகரெட் பிடிக்கும் மிடுக்கையும் கண்டு வியந்து அவற்றை பெரும் விருப்பத்துடன் மாமியார் பயில்கிறாள். கூட்டத்தில் நடப்பதே பெண்களை இடிப்பதற்குத்தான் என்பது மட்டுமன்றி அந்தப் பெண்களும் கூட்டத்தில் இதற்குத்தான் நடக்கிறார்கள் என்று நம்பும் இளைஞன் இந்த நாவலில் நடந்து கொண்டே  இருக்கிறான். 

ஒவ்வொரு கதை மாந்தரின் மனதிற்குள்ளும் நுழையும் ஆதவன் அவர்களின் அகச்சிந்தனையை வாசகனுக்கு தந்தவாறே இருக்கிறார்.  ஒவ்வொரு வாக்கியத்திலும் அதிர்ச்சி இருக்கிறது.  அனைத்து தமிழ் கலாச்சார விழுமியங்களும் கேலி செய்யப்படுகிறது.  எதிர்க்கலாச்சாரத்தை மேற்கொள்ளுபவர்களிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது முக்கியம்.  அவற்றை தங்கள் இயல்பாகக் கொண்டவர்கள்.  ஆச்சாரம் சிலரால் பின்பற்றப் படுவதிலும் உள்ள அரசியல் சொல்லப்படுகிறது. வீட்டில் நடக்கும் பண்டிகைகளைக் கூட கணவனின் பதவி உயர்வுக்கான அச்சாரமாக மாற்றப்படுகிறது மனைவியால்.  இவளின் தயவால் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்று இயலாமையில் கணவன் ஆத்திரப்பட்டாலும், அடுத்த நிமிடம் தன்னுடைய சுபாவமான "லௌகீக மனிதம்" என்ற நிலைக்கு நழுவுகிறான். இங்கே எவனுக்கும் வாசமில்லை.  ஒவ்வொருவனும் மலர்கள் போல தெரிகிறான்.  மானங்கெட்டவன்.  தான் காகிதமலர் என்று தெரியாதவன்.  அல்லது தெரிந்திருந்தாலும் கொடியில் பூத்திருக்கும் அன்றைய மலர் போல வேஷம் போட முடிந்தவன்.

ஆதவன் தன்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் சிருங்கேரியில் ஆற்று சுழலில் சிக்கி உயிர் விட்டார் என்று நாவலின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நாவல் உலகிற்கு கடுமையான நட்டம்.  சந்தேகமேயில்லை.  இவ்வளவு பெரிய திறமையை இந்த உலகால் தாங்க முடியவில்லை.  மேதைகளுள் மேதைகள் நீண்ட ஆயுள் பெற்றிருப்பதில்லை.  அப்படித்தான் ஆதவனின் முடிவை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.                   

0 comments:

Post a Comment