மிலேச்சனான ஐந்தாம் ஜார்ஜ்

| Thursday, September 14, 2017


"ஆஷ் அடிச்சுவட்டில் - அறிஞர்கள் ஆளுமைகள்" என்ற தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  RW ஆஷ், பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், ஜி யு போப், உ வே சாமிநாத ஐயர், ம வீ இராமானுஜலு நாயுடு, டி வி சாம்பசிவம் பிள்ளை, ஏ கே செட்டியார் , ரா அ பத்மநாபன், ஸி எஸ் சுப்பிரமணியம், எரிக் ஹாப்ஸ்பாம் மற்றும் தே வீரராகவன் ஆகியோரைப் பற்றிய வாழ்வும் அவர்தம் அளப்பற்கரிய பணியும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கவனத்திற்கு வந்துள்ளன. இவரின் பிற நூல்களைப் போலவே, இதுவும் எளிதாக கடந்து போக முடியுமான ஒன்றல்ல. திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் ஆஷ் துரையைப் பற்றிய இதுவரையில் பொதுவெளியில் படிக்கக் கிடைக்காத பல சுவாராஸ்யமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் சலபதி. மட்டுமன்றி, ஆஷ் துரையின் கொலையாளியான வாஞ்சி அய்யரின் கடைசிக் கடிதமும் படிக்கக் கிடைக்கிறது.
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.  அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை. இப்படிக்கு, R.வாஞ்சி அய்யர் R. Vanchi Aiyar of Shencotta."
இது படிக்க அச்சத்தைத் தருவதாக உள்ளது. சனாதன தர்மம் ஆங்கிலேயர்களால் துவம்சம் செய்யப்பட்டு வருவதாகவும், கோமாமிசம் தின்னுபவர்கள் மிலேச்சர்கள் என்றும், அப்படி தின்னக்கூடியவன் என்பதால் ஜார்ஜ் பஞ்சமனைக் கொல்லுவதற்கான ஏற்பாடுகளை மதராசிகள் செய்துகொண்டுள்ளனர் என்றும் வாஞ்சி அய்யர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார்.  வாஞ்சி அய்யர் தேசாபிமானி என்பதில் சந்தேகமில்லை; அப்படியே, அய்யர் சனாதன தர்மத்தைப் பேணி வந்தவர் என்பதிலும் சந்தேகமில்லை.  சனாதன தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, மனிதர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வேற்றுமை பாராட்டி வந்தவர்களின் கைகளில் இந்துஸ்தானம் தற்சமயம் போய்விட்டிருந்தாலும், சுதந்திரத்திற்குப் பின் முதல் ஐம்பதாண்டுகளாவது மிதவாதிகளின் கைகளில் இருந்ததே என்பது ரொம்பவும் ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாகும். துன்ப நாளிது, துக்க நாளிது என்ற விடுதலை நாளை அறிவிக்க ஈரோட்டுக்காரருக்கு நிறைய காரணங்கள் இருந்தன என்பதும் தெளிவு.
இந்தக் கோவையின் நான்காவது கட்டுரை உ வே சாமிநாத ஐயரைப் பற்றியதாகும். அய்யரின் கடைசி இரண்டு தசாப்தங்களில் பல நூறு கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கிறார்.  அதுவரை ஐயரவர்கள் எழுதிவந்த உரைநடைப் பாணியில் அல்லாமல், புதுமையாக உரைநடையில் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக கடைசி இருபது ஆண்டுகளில் ஐயரவர்கள் எழுதி வந்தது ஆயிரக்கணக்கில் புது வாசகர்களை அவருக்கு கொண்டு வந்து சேர்த்தது.  ஆனால், இது விஷயத்தில் புதிய கண்ணோட்டம் ஒன்றை ஆ.இரா.வேங்கடாசலபதி எழுத்து சாட்சியங்களின் வழியாக நம் கருத்தின் முன் வைக்கிறார்.  கலைமகள் ஆசிரியரும் அய்யரின் பக்தருமான கி வா ஜகன்னாத அய்யரின் உரைநடையே அதுவென்றும், சாமிநாத ஐயர் சொல்ல, கி வா ஜ கேட்டு தன்னுடைய பாணியில் எழுதி செப்பம் செய்து, ஐயரவர்களிடம் படித்துக் காட்டி, ஐயரவர்கள் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு பத்திரிக்கை காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்டவை அந்தக் கட்டுரைகள் என்று, இது சம்பந்தமாக அன்று முக்கியஸ்தர்களிடையே நடந்து வந்த கடிதாசிப் போக்குவரத்துகளை சாட்சியங்களாகக் கொண்டு நிறுவ முயல்கிறார் சலபதி.
"...உ.வே.சா. சொன்ன தகவல்கள் கி.வா.ஜ.கையால் எழுதப் பெற்று, பின்னர் அய்யரின் திருத்தங்கள் சொல்லப்பட்ட செம்மையான வடிவமே அச்சேறியிருக்கின்றது என்பது உறுதிப் படுகிறது.  பதினைந்தாண்டு கால இடைவெளியில் எழுதப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் ஒரே சீராக அமைந்துள்ளது அவற்றை இயக்கிய உ.வே.சாமிநாதையர் என்ற பேராளுமையின் புலமையும் அனுபவமும் என்ற விசையே ஆகும் என்று கொள்ளலாம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் நீங்கலாகப் பிற கட்டுரைகள் எல்லாவற்றின் நீர்மையும் அமைதியும் ஒன்றே என்பதும் வெள்ளிடைமலை.  கி.வா.ஜகன்னாதன் அவருடைய நெடிய இலக்கிய வாழ்க்கையில் எத்தனையோ கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். அவை உ.வே.சா.வினுடைய படைப்புகளுக்கு ஈடாகும் என்று ஒருவரும் கருதியதில்லை."
ஆ.இரா.வேங்கடாசலபதி நிறுவ முயல்வதை அறிஞர்கள் மறுக்கலாம்.  இது சர்ச்சைக்குரிய விடயம் என்பதிலோ, இப்படியான பரபரப்பு ஒரு வழியாகத் தீர்மானம் ஆவதற்கு இன்னும் நிறைய தரவுகளும் முடிபுகளும் தேவைப்படுகின்றன என்பதிலோ ஐயமில்லை.
ஆ.இரா.வே-வின் இன்ன பிற நூல்களைப் போலவே இதுவும் சூடான ஆய்வு நூல் என்பதிலும் கொஞ்சமும் ஐயமில்லை.
("ஆஷ் அடிச்சுவட்டில் - அறிஞர்கள் ஆளுமைகள்", ஆ.இரா.வேங்கடாசலபதி. காலச்சுவடு, 2016, உரூபா 225/-)


0 comments:

Post a Comment