Mimetic Moulds

| Wednesday, February 7, 2018
(தமிழ் கட்டுரை ஒன்றுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டுமா என்ற சந்தேகம் வந்ததும், தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலத் தலைப்பை தமிழ் எழுத்துருவில் வைத்துக் கொள்வது நினைவில் வருவதால் தலைப்பு சரிதான் என்கிற தைரியம். வேண்டுமானால் Mimetic Moulds என்பதை மிமெடிக் மோல்ட்ஸ் என்று வைத்துத் தொலையலாம்.)
சசி தரூர் Mirror Now என்ற தொலைகாட்சி சேனலுக்குக் கொடுத்த செவ்வி ஒன்று இணையத்தில் காணக் கிடைக்கிறது. அண்மையில்தான் இந்தப் பேட்டி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீண்ட நேர்காணல் என்றாலும், ஒரு சில நிமிடங்கள் ரொம்பவும் சுவராஸ்யமாக இருக்கிறது. பேட்டி காண்பவர் ஒரு பெண்மணி. D' Souza என்று அவரது பெயர் முடிகிறது. "நீங்கள் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் கடினமான மற்றும் பொதுவெளியில் பரிச்சயமில்லாத சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள்?" ஒரு புன்னகையுடன் தரூர் சொல்கிறார்: "நீங்கள் சொல்வது போன்று நான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனா என்பது தெரியவில்லை. அப்படியேதும் இருப்பின், அது பிரக்ஞையோடு செய்யப்படுவதல்ல. தம்பட்டம் அடிக்கும் நோக்கத்தோடும் அப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், வாழ்க்கையில் இதுவரை எந்த அகராதியையும் நான் உபயோகித்ததே இல்லை. வளரும் பருவத்தில் தொலைபேசி, அலைபேசி, இணையம் என்று எந்த வசதியும் இல்லாத காரணத்தால் படிப்பது ஒன்றே பொழுதுபோக்காக இருந்தது. என்னை ஒரு தீவிரமான வாசிப்பாளன் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஒரு வார்த்தையை வெவ்வேறு புத்தங்களில் - இடங்களில் படிக்க நேர்ந்தால், அந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என்பதாக யூகித்துக் கொண்டதுதான். என்னிடம் இருப்பதாக நீங்கள் கருதும் வார்த்தைச் சேகரம் - பிரயோகம் இப்படியாக வந்து சேர்ந்ததுதான்."
இதற்குத்தான் படிப்பது. ஒரு வெங்காயமும் படிக்காமல் - அதுவும் அந்நிய பாஷை ஒன்றில் - வார்த்தைச் சேகரம் எங்கிருந்து வரும்? ஒருவருடைய vocabulary மோசம் என்றால் diction படுமோசமாகத்தான் இருக்கும்.
முகநூலில் இருக்கும் ஒரு பொது வியாதி என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு identity தேவைப்படுகிறது. Sharing என்பதெல்லாம் ஒரு கருமமும் கிடையாது. 'எனக்குத் தெரிந்திருக்கிறது பார்' - என்ற அறிவித்தல்தான். அல்லது 'நான் என்னவெல்லாம் செய்கிறேன் பார்' - என்ற காண்பித்தல்தான். இந்த இரண்டுமே ஒரு identity பொருட்டுத்தான். விலக்காக சில பெரியவர்கள் - நிரம்பப் படித்தவர்கள் - அறிஞர்கள் தங்களது எண்ணங்களை, - பத்திரிகைகள் தணிக்கை செய்துதான் வெளியிடும் என்பதால் - முகநூல் மற்றும் இதர வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். பிரமிக்க வைக்கும் பல கட்டுரைகளை கடந்த சில ஆண்டுகளாக முகநூல் அல்லது வலைப்பூக்களில்தான் நான் வாசிக்கிறேன். The Illustrated Weekly of India, Sunday, India Today, Frontline, The Hindu போன்ற சஞ்சிகைகள், நாளிதழ்கள் ஒரு இருபது / முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்து வந்தனவோ அதை இப்போது இணையம் செய்து வருகிறது. இன்னும் வீரியமாக என்று கூட சொல்லலாம்.
ஆனால், இன்னொன்றைச் சொல்ல வேண்டும். இணையத்தில் பொருட்படுத்தத்தக்க வகையில் எழுதும் எல்லாப் பெரியவர்களிடமும் ஒரு பொதுக் குணாதிசயம் உண்டு. இவர்கள் அனைவருமே தீவிரமான புத்தக வாசிப்பாளராக இருக்கிறார்கள். இணைய எழுத்து - வாசிப்பது மற்றும் எழுதுவது - என்பது தீவிர புத்தக வாசிப்பிற்குப் பின்தான் அர்த்தமுள்ளதாகிறது. மற்றபடி memes / ஜோக்குகள் இதை ரசிக்கும் கூட்டம் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியமில்லை. Memes என்று பேசும்பொழுது மருத்துவர் ஷாலினி "பொன்மாலைப் பொழுது" நிகழ்வில் ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது. அதையும் இணையத்தில்தான் பார்த்தேன். YouTube-ல் இருக்கிறது. வாசிப்பு - விஷய தேடல் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய பொழிவாக ஷாலினியின் பிரசங்கத்தைப் பரிந்துரைப்பேன். Genetic - Mimetic என்பதற்கான உறவையும் வேறுபாட்டையும் இவைகள் நமது அறிவுப்பரப்பில் செய்துவரும் ஆளுமையையும் பற்றி பெட்ரோலில் தீப்பந்தம் ஒன்றை விட்டெறியும் பாவனையில் பேசுகிறார்.
மற்றபடி, விட்ட இடத்திற்கே வருவதென்றால், அந்நிய பாஷைக்கு மட்டுமல்ல, சொந்த மொழியிலேயே ஒருவரின் vocabulary ஜாஸ்தியாக வேண்டுமென்றால் வாசிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. இதில் subsidy / discount என்ற பேச்சுக்கே இடமில்லை.

0 comments:

Post a Comment