குடி அரசும் பெரியாரும்

| Wednesday, February 7, 2018
எஸ்.வி.ராஜதுரை மற்றும் வ.கீதா இருவரும் பலகாலம் உழைத்து உருவாக்கிய "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற புத்தகத்தை சரியாக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்கியிருக்கிறேன். குடியரசு தினமாகிய இன்று (26-1-2018) இந்தப் புத்தகத்தை படிக்கத் துவங்குவதை விட, பொருத்தமான காரியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதற்கான காரணங்களை பெரியாரே எனக்குத் தந்திருக்கிறார்.
"ஏகாதிபத்திய ஆதரவாளர், சந்தர்ப்பவாதி, பிழைப்புவாதி, தன்னை உயர்த்திக் கொள்வதற்காக பொதுவுடைமை பேசிவிட்டு ஒடுக்குமுறை வந்தபோது ஓடிப் போன கோழை, தலித் விரோதி, சாதி இந்துக்களுக்காக மட்டுமே பாடுபட்டவர், தமிழகத் தரகு முதலாளிகளின் சேவகர், தெலுங்கு முதலாளிகளின் நலன்களுக்காக தமிழ் தேசியத்தைச் சிதைத்து திராவிட மாயையை உருவாக்கியவர், வறட்டுப் பொருள்முதல்வாதி, இயக்க மறுப்பியல் சிந்தனையாளர், கால வழக்கொழிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பகுத்தறிவு வாதி, மேம்போக்கான சீர்திருத்தவாதி, பூர்ஷ்வா ஜனநாயகவாதி என்று கூடச் சொல்லப்படுவதற்குத் தகுதியற்றவர், பார்ப்பனரல்லாத நிலப்பிரபுக்களுடன் கொஞ்சிக் குலவியவர் - இப்படிப் பல்வேறு வகையான தாக்குதல்கள் - பெரியார் உயிரோடிருந்த போதும் சரி, அவரது மறைவுக்குப் பிறகும் சரி - தொடர்ந்து நீடிக்கின்றன."
"கூடவே இத்தகைய தாக்குதல்களுக்கு ஆக்கபூர்வமாகவும் ஆற்றல் மிக்க வகையிலும் முகங்கொடுத்து அவற்றுக்குப் பதிலளிக்கக்கூடிய சக்திகளும் வளரத்தான் செய்கின்றன. ஏறத்தாழ அறுபதாண்டுக் காலப் பொது வாழ்வில் பெரியார் எழுதியவற்றையும் பேசியவற்றையும் கோட்பாட்டு வகையான முறைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காத்திரமான அறிவார்ந்த பணியை நிறப்பிரிகை தோழர்கள் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேலுசாமி ஆகியோர் செய்துள்ளனர். அவர்களுக்கு நிகராக ராஜன் குறையும் தனது அறிவுப் பணியை செய்துள்ளார். பெரியாரை ஆக்கபூர்வமாகப் பார்க்கும் சிந்தனையாளர்களில் முனைவர் ராஜ் கௌதமன், கருணா மனோகரன், முனைவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், முனைவர் ஆனந்தி, விடுதலை ராசேந்திரன், ஓவியா, கவிதாசரண், கவிஞர் இன்குலாப், குடந்தை ஜெயபாலன், கு.வே.கி.ஆசான், வாலாஜா வல்லவன் எனப் பலர் இன்று தமிழ்ச் சிந்தனைக் களத்தில் நிற்கின்றனர். இவர்களிற் பலர் பெரியாரின் பெயருடன் தொடர்புடைய எந்த அமைப்புகளுக்கும் தொடர்பற்றவர்கள் என்பது, பெரியாரின் சிந்தனை மிக விரிந்த தளத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கான அடையாளமேயாகும். இச் சிதனையாளர்கள் தவிர மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற மார்க்சிய - லெனினிய இயக்கம் சார்ந்த அமைப்புகளும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியும் சில தலித் அமைப்புகளும் பெரியாரை மிக உடன்பாட்டு வகையில் அணுகுவதையும் நாம் காண்கிறோம்"
இப்படியாக தங்களது முன்னுரையில் எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் பெரியாரைப் பற்றிய இன்று வரையில் அவரது எதிரிகளுக்கு இருந்துவரும் விமரிசனங்களையும், அவைகளுக்கும் அவர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக பெரியாரியலை போற்றி வளர்த்துவரும் சான்றோர்களின் கருத்துக்களையும் நமக்கு முன்னிலைப் படுத்தி தங்களது மிகப்பெரிய நூலொன்றை (800 பக்கங்களுக்கும் அதிகமாக) துவங்குகின்றனர்.
இதைப் படிக்கத் துவங்குவதைப் போல பொருத்தமான செயல் இன்று வேறெதுவும் இருக்க முடியாது. பத்மாவதி ரிலீசாக முடியாது, மடத்துக் காரர்கள் தேசிய மொழி ஒன்றின் வாழ்த்து இசைக்கப் படும் பொழுது முறைப்படியான வணக்கம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, வரலாற்று / புராண மாந்தர்களைப் பற்றிய ஒருவரது கருத்துக்களைப் பொதுவெளியில் வைக்க முடியாது, ஹஜ் யாத்திரை மான்யங்கள் நிறுத்தப்பட்டது, ரேஷன் கடையில் ஏழைகள் கூட எதுவும் வாங்க முடியாத நிலை, மக்களின் நிதிநிலை என்னவென்பதைப் பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது, பார்ப்பனியத்தின் மேலெழுச்சி என்பதான இந்தச் சூழலில், என்னை மீண்டும் கூர் தீட்டிக் கொள்ள இந்தப் புத்தகத்தை மீண்டும் படிக்கத் துவங்குவதைவிடவும் வேறென்ன நற்காரியம் இருக்க முடியும்?
"பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" - எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா. என்னிடம் இருப்பது முதல் பதிப்பு. 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. உரூபா 250/-. கோவை விடியல் பதிப்பகம்.
இன்னும் சில பதிப்புக்களைக் கண்டிருக்கும் இந்தப் புத்தகம் என்பது எனது யூகம். யார் பெரியார், இவைகளுக்காக பெரியார் அறுபது ஆண்டுகள் இடைவிடாமல் பொதுவெளியில் நின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழர் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அவரை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும் "யார் இந்த மனுஷர்?" என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
2018-ம் வருடத்திய குடியரசு தினத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிய வண்ணம் இருக்கின்ற பொழுது, எனக்கு இந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியில் இருந்து எடுக்கத் தோன்றியதற்கும், காலையிலிருந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதற்கும் இந்தச் சிறு கட்டுரையின் ஐந்தாவது பத்தியில் இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும்தானே?

0 comments:

Post a Comment