எம்ஜியார் – ஜெயலலிதா : தொடரும் ஒற்றுமை

| Sunday, October 30, 2016


(A.R.வேங்கடசலபதி Madras Institute of Development Studies பேராசிரியர்.  முதுகலைப் பட்டம் வரலாற்றில் பெற்றவர்.  புது தில்லி ஜவஹர்லால் நேரு சர்வகலா சாலையில் முனைவர் பட்டத்தை “Social History of Tamil Publishing” என்ற தலைப்பில் முடித்தவர்.  இவரது “நாவலும் வாசிப்பும்” மற்றும் “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” போன்ற புத்தகங்கள் அபுதின வகைமையில் முக்கியமானவை.  இலக்கியத் திறனாய்வு, கர்த்தாக்களைப் பற்றிய ஆய்வுகள், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.  ஆழமான அரசியல் நோக்கர்.  2016 அக்டோபர் 10-ந்தேதி The Wire இணையப் பத்திரிகையில் வேங்கடசலபதி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.  தமிழில்: முனைவர் மு.பிரபு)  

1984-ம் ஆண்டு எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நலத்தைப் பற்றிய செய்திகள் ஊடகங்களுக்கு அரிதாகவே தரப்பட்டன.  தற்போது ஜெயலலிதாவின் விஷயத்திலும் அப்படியேதான்.  தமிழக முதல்வரைப் பற்றி அப்போலோ தெரிவிக்கும் உடல்நல அறிக்கைகளை ஒரு பள்ளிக்கூட பையன் கூட நம்பமாட்டான்.

சக நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்ஜியார் 12-1-1967 அன்று சுடப்பட்ட போது, நான் அம்மாவின் வயிற்றில் இருந்தேன்.  அதற்குப் பதினேழு வருடங்கள் கழித்து எம்ஜியார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பொழுது, பள்ளிப் படிப்பை முடித்திருந்தேன்.  எம்ஜியார் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில்தான் ஜெயலலிதா இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  வெறும் காலண்டர் காட்டும் தற்செயல்களுக்கு மேலே இதில் பல பொருத்தங்கள் இருக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, எம்ஜியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் ஆவண விவரங்களின் படி, அவரின் வயது 68.  தற்போது ஜெயலலிதா அம்மையாருக்கும் அதே வயதுதான்.  சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் எம்ஜியார்.  அக்டோபர் 31, 1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை சில மாதங்களுக்கு முன்னாலேயே நடத்தத் தீர்மானித்தார் ராஜீவ் காந்தி. அப்போது தமிழகக் காங்கிரசின் கூட்டாளி எம்ஜியாரின் அதிமுக.

அது காட்சி ஊடகம் பிரபலமாகாத காலம்.  செய்தி ஊடகங்களின் வாயை அரசு எளிதில் அடைத்து விட முடிந்தது.  அன்றைய சுகாதார அமைச்சர் HV ஹண்டே அவர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகள் உண்மையைத் தவிர வேறு எல்லாவற்றையும் பேசின. அந்த ஹண்டே இப்போது பிஜேபி உறுப்பினர்.  ஒரு மருத்துவரும் கூட. ஹண்டேவின் பத்திரிகைச் செய்திகளை அவரது கட்சிக்காரர்களே நம்பவில்லை. எம்ஜியாரின் இளமைக்கால நண்பரும் அரசியல் எதிரியுமான முத்துவேல் கருணாநிதி “ஹண்டே புளுகு, அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு” என்று தனக்கேயுரிய எதுகை மோனையில் சொல்லி தமிழ் மீது தனக்கிருக்கும் செல்வாக்கை இன்னொரு முறை நிலை நாட்டினார்.

அன்றைய நிலையில், எம்ஜியாரின் மனைவியார் ஜானகி ராமச்சந்திரன் தாமாக எதுவும் செய்ய முடியாத நிலை.  அவரும் கட்சியும் இராம.வீரப்பனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர்.  இராம வீரப்பன் எம்ஜியாரை கதாநாயகனாக வைத்து சில படங்களைத் தயாரித்தவர்; ஸ்டுடியோ முதலாளி; தவிரவும், எம்ஜியாரின் அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பிலிருந்த அமைச்சர்.  அன்று நடந்தவைக்கெல்லாம் காங்கிரஸ் கூட்டாளி.  அமெரிக்காவில் இருந்த இந்திய தூதர் புரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்று, நோய்ப் படுக்கையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு எம்ஜியார் செய்த மனுத்தாக்கலை சாத்தியப்படுத்தினார் என்று சொல்லப்பட்டதை அடிப்படை அறிவு மட்டுமே இருந்தவர்கள் கூட நம்பவில்லை.   நல்லவேளையாக அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் இல்லை.  இந்திய சாட்சியச் சட்டம் 1872 பற்றி பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  (இப்போதும் தெரியாது என்பது வேறு விஷயம்.)  இன்றைய தேதி வரை எம்ஜியார் மனுத் தாக்கல் செய்ததின் சம்பந்தமான எந்தப் பொது ஆவணங்களையும் யாரும் பார்த்ததாக செய்தி இல்லை.  இந்திரா காந்தியின் கொலையும் எம்ஜியாரின் உடல்நலமின்மையும் காங்கிரஸ் – அதிமுக கூட்டணிக்கு முன்னுவமை இல்லாத வெற்றியைத் தேடிக் கொடுத்தன.  எம்ஜியார் சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு திரும்பி வரும் வரையில், ‘முதலமைச்சர் – பொறுப்பு’ என்னும் பதவியில் யாரும் அமர்த்தப்படவில்லை.  அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்ஜியார் ராஜ்பவனுக்கு சென்று “பிரமாணம் எடுத்துக்கொண்டதை” தூர்தர்ஷனோ இந்திய செய்திப்படக் கழகமோ காட்சிப்படுத்தவில்லை என்பது நிச்சயமாக தற்செயலான காரியம் அல்ல.

1987 கிறிஸ்துமஸ் முதல் நாள் வரை எம்ஜியார் முதலமைச்சராக இருந்தார்.  1984-லிருந்து 1987 வரையிலான காலம் சுதந்திரத்திற்குப் பிறகான தமிழக அரசியலில் இருண்ட காலம் என்று அரசியல் நோக்காளர்கள் பலரால் வர்ணிக்கப்படுகிறது.  இந்தக் கால கட்டத்தில் எம்ஜியார் அருகிலேயே ஜெயலலிதா அனுமதிக்கப்படவில்லை.  இராம வீரப்பனைப் பிடிக்காத சில அதிருப்தியாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவளித்து வந்தார்கள்.  கொடுமுடியாக, எம்ஜியாரின் சவ வண்டியில் ஏற முயன்ற செல்வி.ஜெயலலிதா சின்னப் பையன் ஒருவனால் கீழே பலவந்தமாக தள்ளப்பட்டு அதன் உதவியால் அடுத்தநாள் தலைப்புச் செய்தியானார்.

எம்ஜியாரின் மறைவுக்குப் பின்னான மாதங்களில் காங்கிரஸ் தமிழக அரசியலில் தனக்கான மறுமலர்ச்சிக்காக கடும் முயற்சி எடுத்தது. 1988-ம் ஆண்டில் மட்டும் ராஜீவ் காந்தி 17 முறைகள் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்தார்.  மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்ட தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், காங்கிரசின் முயற்சிகளுக்கு தன்னாலானது அனைத்தையும் பாராட்டும்படிக்கு செய்து காந்தி குடும்பத்திற்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். 1989-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.  ஏன் போட்டியிட்டோம் என்றானது தனிக்கதை. ஆனால், எம்ஜியாரின் அரசியல் வாரிசு ஜானகி அம்மையார் அல்ல, ஜெயலலிதாதான் என்று முடிவானது அந்தத் தேர்தலில்தான்.  1991 சட்டசபைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்தேறிய ராஜீவ்காந்தி கொலையின் மொத்த அனுகூலத்தையும் பெற்ற ஜெயலலிதா முதல்வரானது மட்டுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்தையும் ஸ்திரப்படுத்தினார்.  ஆட்சிக்கு வந்தவுடன், எம்ஜியாரைப் பற்றிய நினைவுகளை பொது நினைவிலிருந்து அகற்றும்படிக்கான அனைத்துக் காரியங்களும் முதல்வரின் ஆசிர்வாதத்தோடு நடந்தன.  சிக்கலான சமயங்களில் மட்டும் எம்ஜியாரின் பெயரும் உருவமும் ஆபத்வாந்தனாக பயன்படுத்தப்பட்டன.

கார்ல் மார்க்சின் புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “எல்லா வரலாற்று உண்மைகளும் நாயகர்களும் இரண்டு முறை தோன்றுகிறார்கள்.”  அவர் சொல்லாமல் விட்டது: “அவர்கள் முதன்முறை துன்பவியல் சம்பவங்களோடு தொடர்புடையவர்களாகவும் இரண்டாவது முறை கேலிக்கூத்தான சம்பவங்களோடு தொடர்புடையவர்களாகவும் தோன்றுகிறார்கள்.”  

அதுவரை தமிழ்நாட்டில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எம்ஜியார் என்றால், ஜெயலலிதாவிற்கும் சிறப்பான பெருமைகள் இருக்கத்தான் செய்கின்றன.  எம்ஜியாரை விட அதிக காலம் முதலமைச்சராக நீடிப்பவர் என்பது மட்டுமன்றி, அதிமுகவின் ஓட்டு வங்கியை எப்போதையும் விட, எம்ஜியாரையும் விடவும், பெருமளவு அதிகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.   

2014ம் ஆண்டின் இறுதியில் பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்தே உடல்நலம் சுகவீனப்பட்டுத்தான் இயங்கி வந்தார் முதல்வர்.  அவரது தோற்றமே உடல்நலமின்மையைக் காட்டிக்கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.  அண்மைப் பொதுத்தேர்தலின் போது கூட அவர் வழக்கமான உற்சாகத்துடன் காணப்படவில்லை.  பொது வெளியில் தோன்ற நேரும்போதெல்லாம் சகஜமாக காணப்பட வேண்டி பெரும் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.  அவரின் சுகவீனத்தை மறைக்க அதிகப்படியாக மெனக்கெட்டு செய்யும் ஒப்பனைகள் தேவைப்பட்டது ஒருபுறமிருக்க, அவரது நடமாடும் இயலாமையை மறைக்க விசேஷமான ஏற்பாடுகள் வேண்டியதாயிற்று.  கொடநாடுப் பயணங்கள் அதிகப்பட்டும் நீண்டும் போயின.

1984-ல் எம்ஜியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஊடகங்களுக்கு அவரைப் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்தன.  அதைப்போலவேதான் இப்போதும்.  சொல்லப்போனால், 1984 பரவாயில்லை என்பதே உண்மை.  தற்போதைய அப்போலோ மருத்துவ அறிக்கைகளை துவக்கப்பள்ளி மாணவன் கூட நம்பமாட்டான்.  நடுவண் அரசு அமைச்சர்கள், தமிழக ஆளுநர் உள்ளிட்ட எவரும் இதுவரை ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்பது அவர் சசிகலா மற்றும் குடும்பத்தினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதைத் தெளிவாக்குகிறது.

அரசு இயந்திரம் முழுவதும் செயலற்றுப் போன நிலையிலும், பொறுப்பு முதமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல் அதிமுகவில் எழவில்லை.  எம்ஜியார் அப்போலோவில் இருந்தபோது காங்கிரஸ் நடுவண் அரசு எப்படி மௌனம் காத்ததோ அப்படியே பிஜேபி மத்திய அரசும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது.  எம்ஜியாருக்குப் பிறகு தங்களுக்கு மீண்டும் ஒரு எதிர்காலம் தமிழ்நாட்டில் இருக்குமா என்று காங்கிரஸ் அன்று கணக்குப் போட்டதைப் போலவே, இன்று பிஜேபியும் வெவ்வேறு கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கலாம்.  காவேரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கிட உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அக்டோபர் 3-ந்தேதி பிஜேபி உச்சநீதி மன்றத்தில் பிரமாணம் வழியே சொன்னது நமது ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.  விரைவில் கர்நாடகம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் இக்கட்டான இந்தத் தருணத்தில் யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் பிஜேபிக்கு.

இன்னுமொருவர் இதையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.  கடந்த எண்பது வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலில் அவரின் தடம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.  முத்துவேல் கருணாநிதி.  1977 மற்றும் 1980 படுதோல்விகளுக்குப் பிறகு, 1984 தேர்தலை ரொம்பவும் நம்பிக்கொண்டிருந்தார்.  இந்திரா காந்தியின் கொலையும் எம்ஜியாரின் நோய்மையும் முக-வின் கனவைக் குலைத்தன.  ஆனால் எம்ஜியாரின் மறைவிற்குப் பிந்தைய இந்த முப்பது ஆண்டுகளில் கருணாநிதி இரண்டு முறை முழுமையாக ஆட்சிப் பீடத்தில் இருந்திருக்கிறார்.  இன்னொரு முறைக்கு ஆயத்தமாக இருக்கிறார்.  ஜெயலலிதா சினிமாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது முக தமிழ்நாட்டின் முதலமைச்சர்.  இவருக்கெதிராக தாம் அரசியல் செய்ய வேண்டி வரும் என்பதை நிச்சயம் முத்துவேல் கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார்.  ஆனால் இப்போது நிலைமை வேறு.  ஜெயலலிதாவை எதிர்த்து கட்சிக்கு வெளியே அரசியல் செய்து வந்தாலும், கட்சிக்கு உள்ளே தனது மகன் ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம்.  இருந்தாலும், ஆட்சிப்பீடம் இன்னொரு முறை கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது முக-விற்குத் தெரியும். 

நாம் இங்கு பார்த்தவைகளைத் தவிர வேறு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும்.  அவைகளை காலம் நமக்குக் காட்டலாம்.

0 comments:

Post a Comment