சேட்டன் பகத்தும் பாதிக் காதலியும்

| Thursday, December 11, 2014

படித்து முடித்தாகி விட்டது. இவரின் முந்தைய ஐந்து புதினங்களை விடவும் அதிகமான சினிமாத்தனங்களோடு உள்ளது. பீகார் மாநிலத்தின் டம்ரான் தாலுக்காவில் உள்ளூர் அரச குடும்பத்து பையன் கூடைப்பந்து விளையாட்டில் மாநில அணியில் விளையாடியதால் தில்லியில் உள்ள St Stephen's கல்லூரியில் சேர வருகிறான். Sports Quota-வில் மட்டும்தான் ஆங்கிலம் தெரியாத மாதவ் ஜா போன்றோர் இந்தக் கல்லூரியில் இடம் .பிடிக்க முடியும். அப்பா இறந்து விட்ட பிறகு, ராஜாங்கத்தையும் செல்வாக்கையும் இழந்து நிற்கும் மாதவ் ஜாவின் குடும்பத்தில் மிஞ்சியது அம்மாவும் அவள் நடத்தி வரும் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றும்தான்.
கல்லூரியில் ரியா சோமானி என்ற பெண்னை சந்திக்கிறான். அவளும் sports quota. ஆனால், தில்லியின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். ரியா ஏற்கனவே அப்பாவால் பாலியல் தொந்தரவுக்குள்ளானவள். அந்தக் காயம் இன்னும் ஆறாமலே இருக்கிறது. கூடைப்பந்து மாதவ் - ரியாவை நண்பர்களாக்குகிறது. ஆங்கிலம் தெரியாததாலும்,கல்லூரியில் அனைவரும் ஆங்கிலம் பேசுவதாலும் மாதவ் ஜா தான் தாழ்மைப்பட்டதாக உணர்கிறான். நாளடைவில் ரியா மேல் காதலாகிப் போக, அதை தெரிவிக்கையில் ரியா உதாசீனப்படுத்துகிறாள். பின், பணக்கார ரோஹைனை கல்யாணம் செய்துகொண்டு லண்டன் போகிறாள்.
காதலில் தோற்றுப் போய் தன்னுடைய கிராமத்திற்கு வரும் மாதவ் தாயுடன் சேர்ந்துகொண்டு அவள் நடத்தி வரும் பள்ளியை மேம்படுத்தும் வழிகளில் இறங்குகிறான். Microsoft அதிபர் Bill Gates அவர்களுடைய தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைக்க ஒரே ஒரு வழி - அவரை தன்னுடைய பள்ளிக்கூடத்திற்கு கூட்டிவந்து அவரிடம் விளக்கி உதவி பெறுவதுதான். Bill Gates இந்தியா வருகிறார். மாதவ் நன்றாக ஆங்கிலத்தில் பேசும் பொருட்டு
பாட்னாவிற்கு சென்று ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் பொழுது, அங்கு ரியாவை மீண்டும் சந்திக்கிறான். இடைப்பட்ட மூன்றாண்டுகளில் லண்டன் போய், ரோஹனிடம் உதை வாங்கி , விவாகரத்து பெற்று, பெற்றோர்களிடம் தங்காமல், தானாகவே பணியில் சேர்ந்து பாட்னா வருகிறாள் ரியா.
Bill Gates முன்னிலையில் ஆங்கிலம் பேச வேண்டியிருப்பதால், மாதவ் ஜாவிற்கு உதவுகிறாள் ரியா. இடையில் இரண்டு முறை அவளுக்கு முத்தம் கொடுக்க முயன்று, ரொம்பவும் திருப்தியாக கொடுக்க முடியாத நிலை. மாதவின் அம்மா ராணி சாஹிபா ரியா விவாகரத்தானவள் என்றும், தன்னுடைய மகன் அவள் மேல் கிறக்கம் கொண்டு திரிகிறான் என்றும் தெரிந்து கொண்டு, ரியாவிடம் தன்னுடைய மகனை விட்டுவிடு என்று எச்சரிக்கிறாள். மனம் கசந்த ரியா, வேலையை ராஜினமா செய்துவிட்டு, சாகக்கிடக்கும் அப்பா எழுதிவைத்த சொத்தை பணமாக மாற்றிக்கொண்டு, பாடகியாக வாழ்க்கை நடத்த New York போகிறாள். ஆனால், அதற்குள் தனக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்று ஜாவிற்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, மறைந்து விடுகிறாள்.

நடுவில் Chetan Bhagat அவர்களைச் சந்திக்கும் ஜா,அவரிடம் கொடுக்கும் ரியாவின் குறிப்புக்கள் மூலமாக அவளின் திட்டத்தை தெரிந்து கொள்கிறான். New York சென்று மூன்று மாதங்கள் அலைந்து, ஊர் திரும்பும் இரவில் திடீரென்று அவள் பாடும் இரவு விடுதியைத் தெரிந்து கொண்டு, ஆறு கிலோமீட்டர்கள் ஓடி, அவள் பாடிக்கொண்டிருக்கும்போது அவள் முன் நிற்கிறான்.
மூன்று வருடங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை. டம்ரான் பள்ளிக்கூடம் உலகம் போற்றும் அளவில் நடந்து வருகிறது. ராணி சாஹிபா தன் பேரனோடு விளையாடுகிறாள். கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டு, அதைத் திறந்து வைக்க Chetan Bhagat வருகிறார்.
(இதுதான் கதை. டைரடக்டர்களே ..டைரடக்டர்களே .. உங்களுக்காகவே எழுதப்பட்ட இந்தக் கதையை உங்களில் யார் முதலில் காப்பியடிக்கப் போகீறீர்கள்? Chetan Bhagat கோர்ட்டுக்குப் போவார். ஆனால், அதற்கு முன்பாகவே உங்களில் யாராவது, இந்தக் கதையை உங்களிடமிருந்துதான் Chetan Bhagat காப்பியடித்து எழுதியிருக்கிறார் என்று ரிட் பெட்டிஷன் ஒன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் பதிந்து வையுங்கள்!
ஒரிஜினலான கதை என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அது Chetan Bhagat-ற்கும் தெரியாதா என்ன?
----
10-12-2014

அதை படிக்கவே கூடாதென்று நினைத்திருந்தேன். சிரங்கு பிடித்தவனின் பிடிவாதம் எத்தனை நாளைக்கு? அந்தப் புத்தகத்தைப் பற்றிய பல review-க்களைப் படித்தபிறகு, அதில் ஒன்றுமே இல்லை என்று விளங்கிப் போனதால் இவரின் முந்தைய நாவல்களைப் போல உடனடியாக படிக்கவும் தோன்றவில்லை. தவிர, இவரின் எழுத்துக்களின் pattern முழுவதும் demystify ஆகிவிட்டது. இவரின் நாவல்கள் படிக்கப் படிக்கவே ஒரு stylistic analysis செய்ய இடம் தருமளவிற்கு எளிதாகவும், எதிர்பார்த்த வண்ணமுமாகவே உள்ளன. முதல்இரண்டு நாவல்களைத் தவிர அடுத்த நான்கும் திரைப்படங்களுக்கான screenplay-களாக செய்யப்பட்டவை என்பதில் எனக்கு எந்த சந்கேகமும் எப்பொழுதும் இல்லை. மிஞ்சிய புத்தகங்களையும் ஹிந்தி சினிமாக்காரர்கள் தலையில் கட்ட முடியாவிட்டால், இவரின் IIM புத்தி மிகவும் ஏமாற்றமடையும்.
Half Girlfriend முன்னுரையையும் முதல் அத்தியாயத்தையும் எட்டு நிமிடங்களுக்குள் சின்னப்பையன் ஒருவன் நண்பர்களோடு பேசிக்கொண்டே சிறுநீர் கழிப்பதுபோல சுலபமாக படிக்க முடிந்ததில் எனக்கு ஏமாற்றம்தான். ஆனால் Chetan Bhagat இதையெல்லாம் அறிந்திருக்கிறார். தன்னை யாரும் பெரிதாக எண்ணிவிட வேண்டாம், நான் ஒரு வணிக மேலாண்மையாளராக இருந்து எழுத வந்திருக்கிறேன், எழுத்து வணிக நோக்கம் கொண்டே செய்யப்படுகிறது, இதில் எனக்கு உதவ ஒரு அணியையே உருவாக்கி வைத்திருக்கிறேன், புதிதாக ஆங்கிலம் படிக்க வந்தவர்கள், முதல் தலைமுறை ஊரக மாணவர்கள், பெரிய பெரிய ஆங்கில நாவல்கள் படிக்க விரும்பி சோம்பல் மற்றும் இயலாமை காரணமாக முடியாமல் போனவர்கள் ஆகியோருக்குத்தான் எழுதுகிறேன் என்பதையெல்லாம் முற்றாக அறிந்திருப்பவர்.
இன்னும் ஒரு நாளைக்குள் ஒரு சின்னப்பையன் வீட்டுப்பாடம் எழுதும் நேரத்தில் படிக்க முடியும் இந்தப் புத்தகத்தை. படித்துவிட்டு சொல்கிறேன்: நான் மேலே சொன்னதெல்லாம் இந்த முறையும் சரியா என்று!
----
06-12-2014
இன்று தமிழ் தி ஹிந்துவில் குப்புசாமி அவர்கள் எழுதிவரும் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய தொடர் அத்தியாயம் அற்புதமாக வந்திருக்கிறது. ஜெயகாந்தன் அவர்கள் மரணத்தை நோக்கும் விதம் குறித்து, கூடவே இருந்து அவதானித்த குப்புசாமி அவர்கள் ரம்மியமான தமிழில் எழுதியுள்ளார்.
தான் மறக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் அனைவருக்கும் உண்டு. அதுதான் மரணபயத்தையே உண்டாக்குகிறது. மரணத்திற்கு முன்பாக, தன்னை மனிதகுலமே எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நல்லதையோ கெட்டதையோ மனுசப்பயல் தொடர்ந்து கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வருகிறான்.
கிரஹாம் பெல்லுக்கு டெலிபோன். ஷாஜகானுக்கு தாஜ்மஹால். ஹிட்லருக்கு ஹோலோகாஸ்ட். பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு ஏழு பிள்ளைகள்.
எழுதுவதற்கான நோக்கமும் வேறில்லை!
----
06-12-2014
இன்று ஆங்கில தி ஹிந்துவில் ஆனந்த் பார்த்தசாரதி அவர்கள் எழுதியுள்ள கிருஷ்ண ஐயரைப் பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. முப்பத்தைந்து வருடங்களாக அந்த தினசரியில் அய்யர் அவர்கள் வெவ்வேறு விடயங்களைப் பற்றி எழுதி வந்தார்கள். ஆனால், அந்தப் பெரியவருக்கு பொருத்தமாக விலாவாரியான அஞ்சலிக் கட்டுரை ஒன்று தி ஹிந்து வெளியிடவில்லையே என்ற வருத்தத்தை ஓரளவு இந்தக் கட்டுரை போக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அய்யரிடம் நான் கண்டுணர்ந்த விழுமியங்களையே ஆனந்த் பார்த்தசாரதி அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறபோது சந்தோஷமும் வருத்தமும் வருகிறது.
அய்யர் அவர்கள் இறந்திருக்க வேண்டாம். அவரின் தீர்ப்புரைகள், நூல்கள், கட்டுரைகள் மூலமாக அவர் ஜீவித்திருப்பார் என்றாலுங்கூட, ஸ்தூலமாக அவர் இறந்திருக்க வேண்டாம்.
ஒருவேளை அவர் இறக்கவில்லையோ என்னவோ!
----

0 comments:

Post a Comment