உயிர் காப்பான் தோழன்

| Tuesday, December 16, 2014
இன்று தமிழ் ஹிந்துவில் காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் கட்டுரை வந்திருக்கிறது. பதிப்பக துறையில் அண்மைக்காலங்களில் நடந்துள்ள மாற்றங்களைப் பற்றி எழுதியுள்ளார். படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதற்கு இளைய வயதினர் காரணமில்லை; அவர்களைப் பயிற்றுவிக்கும் நிலையில் உள்ள பெற்றோர், பள்ளி, சமூகம் ஆகியவையே காரணம் என்றும், பதிப்பக துறை வளர்ச்சியே கண்டுள்ளதாகவும் நம்புகிறார். 
 
  எனக்கென்ன தோன்றுகிறதென்றால், பெற்றோர், பள்ளி மற்றும் சமூகம் காரணம் இல்லை; டாக்டராகவோ, பொறியாளராகவோ மகனோ மகளோ உருவாகாவிட்டால் எதிர்காலமே இல்லை என்று நம்ப வைத்திருக்கிற 1991-லிருந்து இந்தியாவில் நிலைத்துவிட்ட முதலாளித்துவ பொருளாதார அடுக்கு முறைதான் காரணம். கதைப் புத்தகங்கள் படிக்கும் நேரம் என்பது, ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவதை குறைத்துவிடக் கூடும். மிகு மதிப்பெண்கள் அற்ற ப்ளஸ் டூ மதிப்பெண் அட்டை நரகத்தின் பாஸ்போர்ட். ஆகவே, தேர்வுப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாணவனோ, பெற்றோரோ விரும்புவதில்லை. 

ஏனோ எழுபதுகள் ஞாபகத்திற்குள் நுழைகின்றன. பெருங்குடிகாரன் ஒருவன் 24 மணி நேரமும் போதையில் மூழ்கியிருப்பதுபோல, எதையாவது எப்போதும் படித்துக் கொண்டிருப்போம். சனி, ஞாயிறுகளில் காலையிலேயே நண்பனின் வீட்டிற்குச் சென்று கதைப் புத்தகங்கள் மாற்றிக் கொள்வோம். எனது நண்பனின் அம்மா ஒருமுறை கோபித்துக் கொண்டது கூட நினைவுக்கு வருகிறது. "புத்தகங்களை இவ்வளவு சீக்கிரம் நீ படித்து விட்டால், அடுத்தடுத்து உனக்காக நாங்கள் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்க முடியாது" என்று கோபித்துக் கொண்டு, வழக்கமாக செய்வது போல, சாப்பிட அழைக்காமலேயே உள்ளடுக்கிற்குள் போய் விட்டார்கள். 

அருகிலிருந்த எல்லா அரசு நூலகங்களிலும் உறுப்பினராக இருந்தாலும், அங்கிருந்த புத்தகங்களில் ஒரு சில மட்டும்தான் படிக்க முடிபவையாக இருந்தன. மாவட்ட நூலகத்தில் உறுப்பினராக முப்பது ரூபாய் வீட்டில் கேட்கப் போய், அத்தனை பெரிய தொகை இவன் எப்படி இந்த வயசிலேயே கேட்கிறான் என்று கோபித்துக் கொண்ட அப்பா எனது நண்பர்களிடம் எனது சமீபத்திய பழக்க வழக்கங்களை விசாரித்ததும், மாவட்ட நூலகத்திற்கு தானே நேராய் சென்று ஒரு அட்டைக்கு பத்து ரூபாய் வீதம் மூன்று அட்டைகள் ஒரு உறுப்பினருக்கு வழங்குவது அங்கு நடைமுறை என்று தெரிந்து கொண்டு, முனகிக் கொண்டே ஒரு மாதம் கழித்து முப்பது ரூபாய் கொடுத்ததும், மீண்டும் வாழ விரும்பும் வாழ்க்கையாக கண்முன் நிற்கிறது. 

இங்கிலீஷ் படிக்கத் தெரியாத வயசிலும், எனது ஆதர்சமான திரு.டிவிஎஸ் போலவே கையில் இங்கிலீஷ் புத்தகம் வைத்திருப்பதற்காக மாவட்ட நூலகத்தில் இங்கிலீஷ் புத்தகங்களாகவே எடுத்து எப்போதும் பலர் பார்க்க தூக்கிக் கொண்டு அலைந்த வருடங்கள்தான் எவ்வளவு இனிமையானவை! பிறகு, அந்தப் புத்தகங்களில் இருந்த போட்டோக்களையும் படங்களையும் பார்க்க ஆரம்பித்து, caption-களைப் படிக்க முடிந்து, பின்பு புத்தகங்களையும் படிக்கத் தொடங்கி, அடுத்தடுத்த வருடங்களில் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வாசிப்பதே வாழ்க்கையாகிப் போன விந்தை ஒரு bildungsroman புதினத்திற்கு இணையானது. 

எனது வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த கட்டங்களில், விரக்தி விளிம்பைத் தாண்டி என்னைத் தள்ள இருந்த நேரங்களில், உறவுகள் என்னைத் துயரத்தின் புயல்கண்ணில் வீசித் தள்ளியிருந்த காலங்களில், யாருமேயற்ற அனாதையாக நான் உணர்ந்திருந்த பொழுதுகளில், என்னை தத்தெடுத்துக் கொண்டு தாயாக சீராட்டி மீண்டும் பழைய உற்சாகத்தோடு மீட்டுக் கொண்டு வந்தது வாசிப்புப் பழக்கம்தான். கொடும் பசியாயிருந்த சிசு பல நாட்களுக்குப் பிறகு பால் மிகுந்த தாயின் முலைகளுக்குத் திரும்பியதைப் போல, வெறி பிடித்து பித்தாக மாதக் கணக்கில் படித்திருந்து, நேர இருந்த மனச் சிதைவில் இருந்து என்னை காப்பாற்றிக் கொண்டது, பார்த்து முடித்த துணிகரமான ஒரு ஹாலிவுட் சினிமா போலவே, மனக் கிணற்றின் ஆழத்திலிருந்து மெல்லத் ததும்பி மேலே வருகிறது. 

இதை எழுதுகின்ற இந்த நொடியில் நினைக்கிறேன். படிக்கும் பழக்கம் மட்டும் இருந்திராவிட்டால், குடிகாரனாகவோ ஏன் தற்கொலைக்கோ கூட முயன்றிருப்பேன், அந்த திகில் சூழ்ந்த நாட்களில். எனக்கும் வாசிப்புக்கும் உள்ள உறவு, பார்த்தனுக்கும் அவனுடைய சாரதிக்கும் இடையில் இருந்தது என்னவோ அதுவேதான்!

0 comments:

Post a Comment