கேட்பவரெல்லாம் கேட்கலாம்

| Saturday, July 21, 2018
பேசுபவர் கேட்பவர் இடையில் எப்போது பிரச்சினைகள் இருக்கின்றன. முழுதாய் சொன்னவனும் கிடையாது; முழுதாய் கேட்டவனும் கிடையாது. என்னதான் தீர்வு? இவர்களுக்கிடையே உள்ள தாவாவின் தன்மைதான் என்ன?
இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியில் சேரும் முன் ஒரு வருட பயிற்சியை நடுவண் அரசு முசௌரியில் வழங்குகிறது. அந்தப் பயிற்சி நிலையத்தில் ஆங்கிலமும் தகவல் தொடர்பும் கற்றுத்தந்தவரான பேராசிரியர் Omkar Koul தன்னுடைய Effective Communication Skills என்ற புத்தகத்தில் பேசுபவன் - கேட்பவன் இடையே உள்ள தாவாவின் தன்மை மற்றும் தீர்க்கும் முறைமை பற்றிச் சொல்கிறார்:
[1] Listener has preconceived ideas. கேட்பவன் துவக்கத்திலேயே உரையாடலைப் பற்றி தன்னுடைய சொந்த கருத்துகளை வைத்திருக்கிறான். இதன் அடிப்படையிலேயே பேசுபவரின் கருத்தைக் கேட்பான்.
[2] Listener thinks he knows more than the speaker. பேசுபவரைக் காட்டிலும் சம்பாஷணையின் விடயத்தைப் பற்றி தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறான்.
[3] Listener is worried about something else. பேசுபவர் தொண்டை வறண்டு கத்திக் கொண்டிருக்க, கேட்பவனோ மனைவி கோழிக் குழம்பும் இட்டிலியும் செய்து வைத்து காத்துக் கொண்டிருப்பாளா என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பான்.
[4] Listener is tired or physically uncomfortable. கேட்பவன் அசதியாய் இருக்கிறான்; உரையாடலுக்குத் தேவையான உள்ள உடல் நிலை அவனிடம் இப்போது இல்லை.
[5] Listener is afraid of the speaker, or envious, or prejudiced about him, or just not interested. பல சமயங்களில், அட இவன் நன்றாகப் பேசுகிறானே, எல்லோரும் இவனைப் பாராட்டுவார்களோ, இவன் என்ன பேசிக் கிழிப்பது - இவனை விட நான் நன்றாகப் பேச மாட்டேனா, இவன் சொல்வதை ஒரு வார்த்தை கூட கேட்டுவிடக்கூடாது என்றெல்லாம் கேட்பவன் பொறாமை வயப்படுகிறான்.
[6] Listener is anxious to express his own ideas. பேசுபவன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே கொஞ்சமும் பொறுமையில்லாமல் தானும் பேச வேண்டும் என்று முந்திரிக்கொட்டையைத் தவித்துக்
கொண்டிருக்கிறான் கேட்பவன்.
[7] Speaker mumbles, coughs, etc or has heavy accent. பேசுபவன் முணுமுணுக்கிறான்; இருமுகிறான்; அடித்தொண்டையில் இருந்து தன்னுடைய ஸ்தாயியை எடுக்கிறான். இன்னும் என்னவெல்லாம் தன்னுடைய பேச்சுக்கு குந்தகம் செய்ய முடியுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்கிறான்.
[8] Speaker uses confusing technical jargon. கேட்பவர்கள் நொந்து சாக வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு ஒருவருக்கும் புரியா வண்ணம் வெறும் துறைசார் வார்த்தைகளை மட்டுமே அடித்து விடுகிறான்.
[9] Speaker uses words open to many interpretations. துல்லியமான தகவல் எதுவும் கேட்பவர்களுக்குக் கொடுத்து விடக் கூடாது என்பதில் பேசுபவன் குறிப்பாக இருக்கிறான். ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகளைக் கவனமாக தவிர்த்துவிட்டு, பல பொருள்கள் தரக்கூடிய வார்த்தைகளை வைத்தே விளையாடுவதால், கேட்பவர்கள் 'இவர் எப்போது நிறுத்துவான்' என்று கவலைப்பட்ட வண்ணம் உள்ளனர்.
[10] There is some external noise. பக்கத்தில் மாரியம்மன் பண்டிகைக்காக கம்பத்திற்கு கம்பம் ஒலிபெருக்கிகளைக் கட்டி, கெட்ட கெட்ட வார்த்தைகளாக வரும் புதிய தமிழ்ப் பாட்டுக்களை தூள் பரத்திக் கொண்டு இருக்கிறார்கள். பேசுபவன் வாயசைக்கிறான். ஆனால் கம்பத்தில் ஒலிபெருக்கிதான் கத்துகிறது.
[11] There are interruptions like telephone, etc. பேசுபவன் பேச்சைத் துவக்கியவுடன் கேட்பவனின் மனைவி அலைபேசி லைனில் வந்து, வரும் வழியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பக்கத்து ஓட்டலில் போட்டியும் ரத்தப் பொரியலும் வாங்கியாரச் சொல்லுகிறாள்.
சரி, இந்த காலகாலமான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது எப்படி? அவரே சில வழிமுறைகளை கேட்பவனுக்கு ஆலோசனைகளாகத் தருகிறார்.
[1] Stop talking. You cannot listen if you are talking. நீ பேசுவதை நிறுத்து. அங்கே பார். அவன் பேச ஆரம்பித்து விட்டான். கவனமாகக் கேள்.
[2] Put the speaker at ease. Help a person feel free to talk. This is often called a permissive environment. பேசுபவனுக்கு கொஞ்சம் சௌகரியம் செய்து கொடு. அவன் சகஜமான நிலைக்கு வந்தால் நிறைய தகவல் உனக்குத் தர முடியும். நீ தருகிற அனுமதி அவனுக்கு மிகவும் முக்கியம்.
[3] Show the speaker that you want to listen. Look and act interested. Do not read your papers while someone talks. பேசுபவனைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டிரு. நீ கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் நினைப்பது அவசியம். அவன் பேசிக் கொண்டிருக்கும்போது நீ பேப்பர் படித்துக் கொண்டிருந்தால் நொந்து போய் விடுவான்.
[4] Listen to understand rather to oppose. அவனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கேட்காதே. ஒருவேளை, உனக்கு உதவும் செய்திகளையும் அவன் சொல்லக் கூடும்.
[5] Remove distractions. Don’t doodle, tap or shuffle papers. அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அமைதியான சூழல் நிலவ உதவு. வேறு எந்த ரகளையும் செய்யாதே.
[6] Empathize with speaker. Try to see the other person’s point of view. பேசிக் கொண்டிருப்பவன் மீது அனுதாபப் படு. அவன் ஒருத்தன். நீங்கள் நூறு பேர். நீங்கள் ஏதேனும் குந்தகம் செய்தால் அவன் பாவம், அழுது விடுவான்.
[7] Ask questions. This encourages a talker and shows that you are listening. It helps, to develop a point further. பேசுபவன் சொல்வது ஏதேனும் புரியவில்லை என்றால் ஒரு கேள்வியைப் போடு. சந்தோசப் படுவான். அவன் சொல்வதை நீங்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது அவனுக்குப் பெரிய மரியாதை. நீ கேட்பதைப் பற்றி மேலதிகமான தகவல்களை அவன் சொல்லக் கூடும்.
[8] Listen appropriately. பேசுபவன் சொல்வதை சரியாக அர்த்தப்படுத்திக் கொள். அனர்த்தப்படுத்திக் கொண்டு அவதிப்படாதே.
[9] Check understanding when necessary. பேசுபவன் சொல்வது ஏதாவது புரியவில்லை என்றால், அந்த சூழலில் சாத்தியமாகும் அத்தனை அர்த்தங்களையும் மனதில் ஓட்டிப் பார். தேவைப்பட்டால், பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனிடம் கொஞ்சம் மெதுவாகக் கேள்.
[10] Listen with an open mind. பேசுபவன் சொல்வதை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் கேட்டுக்கொள். நீ நினைப்பதையே பேசுபவனும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதே. உன்னுடைய மனைவி, மகன், மகள் கூட நீ நினைப்பதற்கு எதிராகத்தான் எப்போதும் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில் வை.
[11] Develop your non-verbal listening. பேசுபவன் சொல்வது உனக்குப் புரிகிறது அல்லது புரியவில்லை என்பதற்கேற்ப முகபாவங்களை மாற்றிக் கொண்டிரு. உன் முகத்தைப் பார்த்து அதிகமாகவோ குறைவாகவோ அவன் சொல்லுவான்.
வகுப்பறைகளிலோ, நிறுவனக் கூட்டங்களிலோ, நண்பர்கள் மத்தியிலோ எப்பொழுதும் ஒருவன்(ர்) பேசிக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் முழுவதும் புரிகிறதா? ஏன் கொஞ்சம் பேர் கொட்டாவி விடுகிறார்கள். தகவல் தொடர்பு என்பது மன்மதக் கலையை விட மகோன்னதமானது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். அட, மன்மதக் கலையே கூட ஒரு தகவல் தொடர்புதானே.
பாடுவோர் பாடினால் ஆடுவோர் ஆடலாம்.

0 comments:

Post a Comment