நகரும் எழுத்து

| Friday, February 27, 2015
'குறுக்குவெட்டுகள்' 
அசோகமித்திரனின் 'குறுக்குவெட்டுகள்' எனும் கட்டுரைத் தொகுப்பை நேற்று படிக்க முடிந்தது. மிகவும் அண்மையில் வெளியாகியுள்ள இந்த தொகுப்பில் ஆசிரியர் மூன்று தலைப்புக்களின் அடிப்படையில் ஐம்பத்தாறு கட்டுரைகள் எழுதியுள்ளார். எல்லாமே பல இதழ்களில் 2006க்குப் பிறகு வெளியானவை. முதல் தலைப்பு 'இயல் இசை நாடகம் சினிமாவும்'. அடுத்தது 'ஆடிய ஆட்டமென்ன?' கடைசியாக 'சில நூல்கள்'. 85 அகவைகள் பூர்த்தி செய்துள்ள அசோகமித்திரன் அவர்கள் தனது பதின்மத்தில் ஹைதராபாத்தில் தீவிரமாக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நாற்பதுகளில் தொடங்கி அறுபதுகள் வரையிலான கிரிக்கெட் புள்ளி விவரங்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. அப்புறம், தேவ் ஆனந்த் பற்றிய கட்டுரை அபாரமாக வந்திருக்கிறது. இரண்டொரு செவ்விகளும் உள்ளன. ஒரு விட்டேத்தியான படைப்பு மொழி இவருக்கு இயல்பாகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து, இதன் அடிப்படையில் இவருக்கு மிக அருகில் வருபவர் வண்ணநிலவன் மட்டும்தான். இவர்களது வாழ்க்கையில் இதற்கு விடை இருக்கலாம். ஒரு மிகத் தேர்ச்சியான biographer இதன் மர்மத்தை அவிழ்த்துவிட முடியும். இந்த புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள் தர ஆசை.

[1] "ஒரு புத்தகத்தை ஒருவர் படித்து ரசிக்க அதற்கெனப் படிப்பு, பயிற்சி எல்லாம் தேவை. ஆனால், ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க ஒருவர் எந்தப் பள்ளிக்கும் போய்ப் படிக்க வேண்டாம். ஒரு சாதாரண மூட்டை தூக்கிப் பிழைக்கும் தொழிலாளி கூட திரைப்பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். உண்மையில் அந்த அனுபவத்தின் உச்சத்தை அடைய படிப்பு, பயிற்சி, சமூக வாழ்க்கைப் பண்பு எல்லாம் தடைகளாகக் கூட அமைகின்றன."

[2] "வரலாறு ஒரு சமயத்தில் ஒரு வீரனுக்குத்தான் வணக்கம் செய்கிறது."

[3] "ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?"
இருக்கலாம். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. அந்த வேர் அறுந்துபோய் விட்டது. இப்போது புதிதாக வேர்கள் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது. சில சமயம் பிடிப்பதில்லை."

[4] "சிலர் ரொமாண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய இயல்பில் எங்காவது ரொமாண்டிசிஸம் இருக்கும்."
[நற்றிணைப் பதிப்பக வெளியீடு, உரூபா 150/-]
----


எஸ்தர்
வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' படித்த கையோடு அவரின் சிறுகதை தொகுப்பான 'எஸ்தர்' படிக்க ஆரம்பித்து கீழே வைக்க முடியாமல் ஒரே இரவில் முடித்தாகி விட்டது. சில சமயங்களில் உடம்புக்கு சொகமில்லாமல் போவது எவ்வளவு நல்லது!
 
வண்ணநிலவன் வாழ்க்கையின் கறுமையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். நடுத்தரக் குடும்பத்துக்காரனின் வறுமை ஏழையின் வறுமையைவிட கேவலமானது. ஏழையிடம் மறைக்க எதுவுமில்லை. ஆனால், நடுத்தரக் குடும்பத்துக்காரன் தன்னுடைய வறுமையை மறைத்தாக வேண்டும். வறுமையை மறைக்கிற பொறுப்பு வறுமையை விட கேவலமானது. கிட்டத்தட்ட இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் வறுமை ஊடுபாவாக இழைந்துள்ளது.
 
வறுமைக்கு அடுத்தபடியாக, வண்ணநிலவன் அவர்களை எது பாதிக்கிறது? ஒவ்வொருவனும் ஒவ்வொருவளும் தான் கல்யாணம் முடிக்க முடியாதவர்களையே நினைத்துக் கொண்டு, புருஷனோடோ மனைவியோடோ குடும்பம் நடத்துகிறார்கள். நிறைவேறாத காதலின் அவலம் நிறைந்தவைகள் இந்தக் கதைகள். நிறைய கணவன்களும் மனைவிகளும் அவர்களின் துணைகளின் முன்னாள் அன்பர்களைப் புரிந்தவாறே, மிச்சமிருக்கும் குடும்ப வாழ்க்கையை அன்பைக் கொண்டு நிரப்ப முயன்ற வண்ணம் உள்ளார்கள். நமது அன்பானவர்களின் காதல் நம்முடையதும் அல்லவா!

வண்ணநிலவன் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானவர். என்னைக் கேட்டால், ஜெயகாந்தனுக்கு நிகரானவர். தன்னை முன்னிருத்திக் கொள்ள தெரியாதவர். ஆனால், காலம் அதைச் செய்யும். இவரிடமும் அசோகமித்திரனிடமும் ஒரு தட்டையான மொழி - ஆங்கிலத்தில் objective அல்லது indifferent என்று சொல்லலாம் - வசப்பட்டிருக்கிறது. இது இவர்களை காலத்தைக் கடந்த உரைநடைக்கு சொந்தமானவர்களாக ஆக்கியிருக்கிறது.

இந்த தொகுப்பில் 'எஸ்தர்' சிறுகதை மிகவும் முக்கியமானது. இந்தக் கதையில் சம்பந்தப்பட்டுள்ளது கருணைக்கொலையா? படித்துவிட்டு சொல்லுங்கள்!
['எஸ்தர்' - வண்ணநிலவன், நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு, உரூபா 90/-]
----

'இன்றைய காந்தி'
ஜெயமோகன் அவர்களின் 'இன்றைய காந்தி' படித்துக் கொண்டிருக்கிறேன். அளவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய புத்தகம். காந்திய இலக்கியம் பல்லாயிரம் புத்தகங்களால் ஆனது. இந்திய மொழிகள் அனைத்திலும் எழுதப்பட்டு பல கோடி மக்களால் வாசிக்கப் பெற்றுவரும் காந்திய இலக்கியம், ஆங்கிலத்தில் மிகவும் சிறப்பாக கடந்த ஒரு நூற்றாண்டாக எழுதப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற தொழில்முறை Biographers தவிர, காந்தி என்ற ஆளுமையால் கவரப்பட்டு தங்கள் நாட்டை விட்டு, அவருடனேயே தங்கி அவரை கூர்மையாக அவதானித்து எழுதியவர்களைத் தவிர, அவரின் கொள்கைகள், போராட்டங்கள், வாழ்க்கை. குடும்பம், அரசியல், பின்பற்றிய மருத்துவ முறைமைகள், ஆன்மீகம், உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டாகி விட்ட நிலையில், ஜெயமோகன் காந்தியைப் பற்றி இடதுசாரிகள், மற்றும் தலித்தியர்கள் எழுதிவரும் விமரிசனங்களுக்கு பதிலாக தன்னுடைய புத்தகத்தை வடிவமைத்துள்ளார் என்று முதல் இருநூறு பக்கங்கள் படித்துள்ள நிலையில் தெரிகிறது.
 
ஜெயமோகன் காந்தியைப் பற்றி எழுதியுள்ளதைத்தான் படித்திருக்க முடியும். காந்தியை நேராக அவதானித்திருக்க முடியாது. காந்திக்குப் பிறகான இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். காந்தியைப் பற்றி மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதியுள்ளதில் சிறப்பான சில நூற்களைப் படித்துள்ளார் என்பதும், சில காந்தியர்களிடம் தீவிரமான விவாதங்களை நடத்தியுள்ளார் என்பதும், காந்தியத்தை தன்னுடைய உள்ளம் ஆன்மா சார்ந்து புரிந்துகொள்ள முயன்றுள்ளார் என்பதையும் ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.
 
படித்த வரையில் ஒன்று சொல்ல முடியும். கீழே வைக்க முடியாத நடை. தமிழ் உரைநடையில் ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளுமை. விவாதத்தை அடுக்கும் முறை படிப்பவரை ஜெயமோகனின் கருத்துக்களோடு ஒத்துக் கொள்ள வைக்கும். கவனமாகப் படிக்க வேண்டும் இந்த காரணத்தாலேயே. இன்னொரு குறையும் உண்டு. தன்னால் ஒரு பெரிய ஆய்வும், களங்களுக்குச் சென்று முதல் நிலை தரவுகளை எடுக்கவும் ஆர்வம் இல்லை என்றும், தன்னுடைய புத்தகம் தன்னுடைய உள்ளுணர்வாலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கும் ஜெயமோகன், மேற்கோள் காட்டியிருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே உள்ளுணர்வை ஜாக்கிரதையாகத் தவிர்த்து, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியுள்ளனர் என்பதை நம்மால் கவனிக்கத் தவற முடியாமல் போவதுதான் ஜெயமோகனின் பலவீனமா?
----

PROTOCOLS
செர்கி நிகல்ஸ் என்ற ரஷ்ய பாதிரி 1905-ல் வெளியிட்ட PROTOCOLS என்ற நூலை வாசித்து வருகிறேன். சோவியத் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட புத்தகம் என்று தெரிகிறது. யூதர்களின் தாரக மந்திரம் என்று இதைச் சொல்ல முடியும். யூதர்களில் ஒரு ரகசிய பிரிவினர் உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதை விலாவரியாக பேசுகிறது. இதை ஹிட்லர் படித்திருக்க வேண்டும். "யூதர்கள் அல்லாதவர்களை" ஒழித்துக்கட்ட முனையும் இந்த சதி வேலை அவருக்கு யூத இன வெறுப்பை அளித்திருக்க முடியும். எனக்கு என்ன அதிசயம் என்றால், இந்த புத்தகத்தின் நிகழ்கால பொருத்தம்.
 
உண்மையிலேயே நான் அதிர்ச்சியில் உறைகிறேன்! இனம், மொழி, நிறம், சாதி போன்ற வேறுபாடுகள் போலியானவை என்ற அறிவு இருந்தாலும் கூட, இப்படிக்கூட மனிதர்கள் சிந்தித்து உள்ளனர் என்ற உண்மை ஜீரணிக்க கடினமானதுதான்.
----

0 comments:

Post a Comment