இரவுப் பாடகன்

| Thursday, January 1, 2015

திசம்பர்  சரி பகுதிக்குப் பின்சென்னையில் பத்து நாட்களுக்கு மேலாக தங்க வேண்டியதாகப் போயிற்று.   ஒதுக்கப்பட்டிருந்த அறையில் என்னுடன் தங்கியவன் புதிதாக திருமணமான தம்பியொருவன்சேலத்துக்காரனும் கூட. இரவு நேரங்களில் அவன் மனைவியுடன் சம்பாஷிப்பது  ஒரு நாற்பது வயதுக்காரன் தாங்க முடியாததுகாதல் பேசுவதிலும் ஊடல் கொள்வதிலும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டபடி இருந்தான்.   பக்கத்து படுக்கைக்காரனின் தூக்கம் கெடுவதிலோ, அந்தரங்கம் அடுத்தவனின் காதில் படுவதையோ பற்றி எந்தவித சொரணையும் இல்லை அவனிடம்ஆசை வெட்கமறிவதில்லைஇல்லையா?     

இந்த சோதனையான இரவுகளின் தொடர்ச்சியாகத்தான் திசம்பர் 31 ன் இரவு   வந்ததுஎட்டு  மணி சுமாருக்கு  அலைபேசியில் ஆரம்பித்த காதல் பனிரெண்டு  மணிக்கு சற்று முன்னதாக பெரும் சண்டையாக மாறிப்போனதுரெக்கையை மாட்டிக்கொண்டு  அரை மணி நேரத்தில் சேலம் தன்னால் வர முடியும் என்றெல்லாம் சொன்னதை அவன் மனைவி நம்பியிருக்க வேண்டும்ஏனென்றால் அதற்குப் பிறகு பத்து பதினைந்து பறவைகளின் பெயர்களை திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.   "நான் தண்ணியடிக்கவில்லை, வேண்டுமானால் சாயந்திரம் சரக்கு வாங்கிய டாஸ்மாக் கடைக்காரனையே கேட்டுக்கொள்" என்பதையெல்லாம் அவன் மனைவி நம்பியபடியே அலைபேசியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்
  
நடுநிசிக்கு முன்னா ல் சண்டை முற்றி பேச்சு முறிந்து அழுதுகொண்டே கீழே உட்கார்ந்த அவன், இரவு ஒருமணிக்கு என்னை எழுப்பி ஒரு காகிதத்தை காண்பித்தான்தான்  அப்போதுதான் எழுதிய வரிகள் இவை என்றும், இவையெல்லாம் கவிதையா என்றும் கேட்டான்


படித்தவை கவிதையா என்று சரியாகத் தெரியவில்லை.   ஆனால், அவன் விடியும் வரை  அழுதுகொண்டேயிருந்தது  தெரியும்.   

[1] புதுவருடக் கூச்சல்கள்
எல்லாம்
ஓய்ந்த பின் நிசியில்
என்  தூரத்து மௌனம்
உன்னை வருடுமே,
எந்த முகச் சுழிப்பால்
தடுப்பாய் நீ?

[2] மார்கழியின்
மழையும் இரவும்
சேலத்து சுரமாய்
ஜன்னலுக்குள்,
சென்னையில்.


[3] தூரத்து படுக்கையில்
தொலைத்த உன் ஸ்பரிசம்
தகிக்கிறது அனலாய்;
பிரிந்த என் நினைவு
அங்கே
உன் போர்வையாய்.


[4] சேலத்து புன்னகையில்
தொலைந்து போன
நினைவை,
சென்னையின்
 இரவில் தேடும் நான்
காதலின்  குழந்தையா
வேதனையின் மீதியா?

[5] எல்லாக் கடவுள்களாலும்
சபிக்கப்பட்டவனை
புன்னகையால்
ஆசிர்வதித்தவளே,
பிரிவு பூதங்கள்
பயமுறுத்தும் இந்த இரவில்
எந்த தேவதையாய்
நிற்பாய்
என் வாசலில்?

[6] ஏழையின்  தரித்திரமாய்
நீளும் சாலை;
துரியனின் சபையில்
தீராத சேலை;
ரேஷன் கடை க்யூவில்
குருட்டுக் கிழவி;
கோடையின் சாரலுக்காய்
திறந்திருக்கும் குளம்;
முடியாத இரவின்
 துவக்கத்தில் நான்.

[7] பேருந்துகளே இயங்காத
இரவு;
அரவமற்ற நிறுத்தத்தில்
ஒற்றையாய் நான்;
காதலின் ஊருக்கு
கூட்டிச் செல்ல
எந்தக் குதிரையில்
வருவாய் நீ?



[8] சரவணபவன்
இட்டிலிக்குத்
தொட்டுக்கொள்ள முடியாத
உன் புன்னகை,
தொண்டையில்
விக்கலாய்.   

  

0 comments:

Post a Comment