திண்ணை 5

| Sunday, February 2, 2014
                                     மசாலா தோசை

எதுவுமே காரசாரமாக நுகர்ந்து பழகியிருக்கிறோம் நாம். உணவு, இசை, சினிமா, கதை, பேச்சு என்று எல்லாமே உரைப்போடு இருக்க வேண்டும். இதைதான் 'மசாலாத் தனம்' என்று சொல்கிறார்கள். எழுத்தென்று வரும்போது மசாலாத் தனத்துடன் புத்திசாலித் தனத்தையும் ஒரு சரி விகிதத்தில் கலந்து கொடுத்தவர்கள் பெரிய இலக்கிய பிரபலங்களாக உலா வந்திருக்கிறார்கள். உலகெங்கிலும் நிலை இதுதான். Dan Brown எழுதிய The Da Vinci Code 2003-ல் வெளிவந்து கோடிக்காணக்கான பிரதிகள் விற்று முடிந்து விட்டன. புதிய பதிப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. 1929-ல் வெளிவந்த Faulkner எழுதிய The Sound and The Fury சில நூறு பிரதிகள் விற்கவே பல ஆண்டுகள் பிடித்தன.

தமிழிலும் இதே கதைதான். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' படிக்காத தமிழரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுள் இல்லை என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யலாம். தமிழின் ஆகச் சிறந்த நாவல்களுள் ஒன்றான .நா.சுப்ரமண்யம் அவர்களின் "பொய்த்தேவு" படித்தவர்கள் நம்மில் எத்தனை பேர்? எதை விற்கவும் ஒரு glamor தேவைப் படுகிறது. திரு.சுஜாதா எழுதிய எல்லா நவீனங்களுமே வணிக ரீதியில் வெற்றி அடைந்தவைதாம். ஆனால், ஏன் அசோகமித்திரன் போன்றவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள்? தரமும் இருந்து, வெகு ஜன வெற்றியையும் கைப்பற்றியவர்கள் என்று பார்த்தால், சுந்தர ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். அசோகமித்திரன் அவர்களின் சில படைப்புக்கள் இந்திய இலக்கியத்தில் கடந்த நூற்றாண்டில் வெளி வந்த சிறந்த புதின ஆக்கங்களோடு ஒப்பு நோக்கத் தக்கவை. இவரது 18-வது அட்சக்கோடு, அப்பாவின் சிநேகிதர்கள் போன்ற ஆக்கங்கள் நவீனத் தமிழ் இலக்கியத்தில் தரக் கட்டுப்பாட்டுக் கோலாக இருக்கத் தகுந்தவை. இவரின் இரண்டு கட்டுரைத் தொகுதிகள் அண்மையில் நர்மதா பதிப்பகத்தால் மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. "நினைவோடை" மற்றும் "எவை இழப்புகள்?" எனும் தலைப்பில் உள்ள இவ்விரண்டு தொகுதிகளும் பல சுவையான தகவல்களை, பார்வைகளை, வேறு வேறு விடயங்களைக் குறித்து, கொண்டுள்ளதாக உள்ளன.

'
தட்டையாக எழுதுபவர்' என்ற விமர்சனம் இவரைப் பற்றி உண்டு. அதாவது, எந்த வித ஜோடனைகளும் இல்லாமல் எழுதுவதைக் குறிப்பிடுவதான விமர்சனம் இது. நம்ப முடியாத எளிமை படிப்பதற்கு எந்த வித கவர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை என்பதால் இப்படி சொல்கிறார்கள். ஆனால், இந்த எளிமை கைவருவதற்கு ஆண்டாண்டுகால பயிற்சி வேண்டும். 'நினைவோடையில்' .நா.சு. பற்றி அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்: "ஒருவனை 'மிகவும் கெட்டிக் காரத்தனமாக எழுதுகிறான்' என்பதே அவரைப் பற்றி .நா.சு. அவர்கள் செய்யும் கடுமையான விமர்சனம் ஆகும்." ஜோடனை, புத்திசாலித்தனம், செய் நேர்த்தி என்பதெல்லாம் மிகவும் எளிதாக கைவருபவை. இருப்பதிலேயே கைப்பற்றுவதற்கு கடினமானது 'எளிமை' ஒன்றே. .நா.சு., அசோகமித்திரன் போன்றோர் தங்களது கடுமையான கர்மயோகத்தால் அதை அடைந்து விட்டனர்.

ஆனால், கல்கி, சுஜாதா, பாலகுமாரன் உள்ளிட்டோர் வேறு வகை. காரசாரமான மசாலாக்காரர்கள்!

"
நினைவோடை" மற்றும் "எவை இழப்புகள்?" - அசோகமித்திரன், நர்மதா வெளியீடு, சென்னை, உரூபா 60/- (ஒவ்வொன்றும்).


----

இவர்கள் இருந்தார்கள்

நமது பாடங்கள் அனைத்துமே மனிதர்கள் கொடுத்ததுதான் - புத்தகங்களிருந்து வந்தாலுமே கூட. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த பாடங்களை, தாங்கள் தேர்ச்சியுற்ற பாடங்களை பிறருக்கு கற்றுக் கொடுத்த வண்ணமே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் மட்டும் தாங்கள் இறந்த பின்னும், வாழ்ந்த போது தாங்கள் எடுத்த பாடங்களை, அருவமாக புத்தகங்களின் ஊடே கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நல்லவைகள், கெட்ட விடயங்கள், அருவருப்பானவை, பிரமிப்பானவை - என்று கற்றுக் கொள்ளத்தான் எத்தனை!

ஏதோ ஒரு லட்சியத்துக்காக தாலி கட்டிக் கொண்டவர்கள் கற்றுக் கொள்ளும் மற்றும் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மிகவும் அலாதியானவை. இருட்டுக் குகைக்குள் கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக ஊர்தி ஒன்றை ஓட்டிக் கொண்டு போவது மாதிரி, அவர்கள் தங்களின் லட்சியத்திற்கு வெளியே இருக்கும் எதையும் மறுதலித்து விட்டு, அதிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் அவர்களை சுவாராஸ்யமான மனிதர்கள் ஆக்குகிறதா?

திரு.ஜெயமோகனின் "இவர்கள் இருந்தார்கள்" என்ற புத்தகம் லட்சியத்திற்காக தாலி கட்டிக் கொண்டு அதிலேயே மூழ்கி முத்தெடுக்க ஆசைப்பட்டு, கையில் அகப்பட்ட எதோ ஒன்று முத்தா என்ற ஐயப்பாட்டிலேயே முடிந்து போனவர்களைப் பற்றியது. இவர்கள் பெரியவர்கள். உண்மையில், மகாத்மாக்கள். இவர்களின் இலட்சியங்கள் தோல்வியைத் தழுவியிருப்பதே இவர்கள் மகா புருஷர்கள் என்பதற்கான உதாரணம். மகாத்மாக்கள் வெற்றியடைவதேயில்லை. நூற்றாண்டுகளுக்கான குற்ற உணர்ச்சியை ஒட்டு மொத்த மனித குலத்திடம் தப்பிக்கவே முடியாதபடி தலையில் அடித்துவிட்டு போகிறார்களே, இதுதான் மகாத்மாக்களின் வெற்றி. சோற்று மனிதர்களுக்கும் இவர்களுக்குமான இடைவெளி கடவுளால் கூட நிரப்ப முடியாதது.

நித்ய சைதன்ய யதி, சமுத்திரம்,கே.பி.ஆர்.கோபாலன், கவிஞர் சுரதா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெ.ஹேமச்சந்திரன், பேராசிரியர் ஜேசுதாசன், டாக்டர் அய்யப்ப பணிக்கர், .நா.சு, லாரி பேக்கர், ஆதிமூலம், கந்தர்வன், பி.கே.பாலக்ருஷ்ணன், ஹனீஃபா, ஸ்ரீகண்டன் நாயர், சா.கந்தசாமி, லா..ரா, ராஜமார்த்தாண்டன், வலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன், சி.சு.செல்லப்பா, ஜகன்னாதராஜா, சுகந்தி, சோதிப்பிரகாசம், கீதா ஹிரண்யன் - இந்த 25 இலக்கிய ஆளுமைகள் பூமியை தங்களின் லட்சியங்களால் பாதித்து விட்டு நகர்ந்தவர்கள். ஏதோ ஒன்று இவர்களை தீவிரமாக இயக்கியபடியே இருந்தது.

நெருக்கமாகவோ, அல்லது தெரிந்தவர் என்ற முறையிலோ இந்த பெரும் ஆளுமைகளை அவதானிக்க முடிந்த ஜெயமோகன், அற்புதமான பேனாச் சித்திரங்களை தந்திருக்கிறார். ஜெயமோகனின் உரைநடை மனோகரமாக, ஆளை மயக்கிப் போடும் அளவில் வந்திருக்கிறது இதில்.  ஆனால், புத்தகத்தை முடிக்கும் போது நம்மைத் தாக்கும் அந்த குற்ற உணர்வு, நம்மை எரிக்கவோ புதைக்கவோ செய்யும் வரையில் கூடவே வருவது.

[
நற்றிணைப் பதிப்பகம், உரூபா 160/-]


----


கோமல்
'அறம்' தொகுப்பில் ஜெயமோகன் கோமல் சுவாமிநாதன் அவர்களைப் பற்றி எழுதியுள்ள சிறுகதை [இதை சிறுகதை என்று சொல்லலாமா அல்லது இது ஒரு நினைவுக் கட்டுரையா?] நெகிழ்வானது. அதற்கு முன்னால் இருக்கும் கதை, சாப்பாட்டுக் கடையைப் பற்றியது, தொகுப்பின் மிகச் சிறந்தது. எனக்குத் தெரியும், மிகவும் தாமதமானது இந்த இடுகை. 'அறம்' தொகுப்பைப் படிக்காத நவீன தமிழ் இலக்கிய ஆர்வலர் எவருமிலர் என்ற நிலையில், இதை இடுகையிடுவது எனது அசட்டுத் தைரியம்தான்.

ஆனாலும், படிக்காத ஓரிருவராவது இருக்க மாட்டாரா? அவர், இதைப் பார்த்த பிறகாவது படிக்கத் தொடங்க மாட்டாரா என்ற நப்பாசையும் ஒரு காரணம்.

----
தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா மிகவும் கொச்சையாகப் பேசுகிறார், .வே.ரா. பெரியார் அவர்களை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா என்பதாகவெல்லாம் பேசுகிறார் என்று ஞாநி அண்மையில் தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் வருத்தப் பட்டிருக்கிறார். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், ஹெச்.ராஜாவிடம் ஞாநி வேறு என்ன எதிர்பார்த்தார்?

ஹெச்.ராஜா அவர்கள் அப்படியொன்றும் நம்ப வைத்து மோசடி செய்பவரில்லையே?

----

1 comments:

Kasthuri Rengan said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment