கண்டதை சொல்பவர்

| Tuesday, May 22, 2018
பொன்மாலைப் பொழுது பொழிவுகளில் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் பொழிவை நேற்று கேட்க வாய்த்தது. மிகவும் முக்கியத்துவம் கொண்டதான பொழிவு. இலக்கியத்தின் ஆதி நாட்கள் தொட்டு அது எப்படிப் படைக்கப்படுகிறது, படைப்பாளியின் அப்போதைய மனநிலை என்னவாக இருந்திருக்கும், எது படைப்பிற்கான கருவாக கர்த்தாவின் மனதில் சூழ் கொள்கிறது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் படைப்பு - படைப்பாளி - படைப்புலகு தொடர்பாக எழுப்பப்பட்டும், சொல்லப்பட்டும் வருகிறது. இவைகள் அனைத்துமே உண்மை அல்லது கூட்டி குறைத்து சொல்லப்படுபவை. இருப்பினும் இத்தகைய கேள்விகள் அவசியமானவை. படைப்பாளிகள் தங்களது படைப்பு மனம், கரு, எழுத்து, செய்திறன் போன்றவற்றை சொல்லிக்கொண்டே இருப்பது இலக்கியத்திற்கு அவசியமானது. இந்த வகையில், தன்னுடைய ஏழு நாவல்களைப் பற்றியும், தான் எழுத்துக்காரராக உருவாகக் காரணமாக இருந்த சூழல்கள் குறித்தும், தன்னுடைய நாவல்களுக்காக தான் செய்ய வேண்டியிருந்தன எவை என்பன குறித்தும் தமிழ்ச்செல்வி அவர்கள் மிகவும் தட்டையான தொனியில், ஏற்ற இறக்கம் எதுவுமற்ற நேர்கோட்டுக் குரலில், அதே சமயம் கேட்பவர் அசரும்படியான விதத்தில் எழுபத்தைந்து நிமிடங்கள் நம்முடன் அசாவுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனம் மிதமிஞ்சிக் கிடைத்து வந்த கிராமமொன்றில் தன்னுடைய பால்யத்தைக் கழித்தவர், அந்த நிலவெளி கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து அருகிலிருக்கும் கடல் உப்பு நிலத்திலேறி முழுவதும் உவர்ப்பெடுத்து வேளாண்மைக்கு ஒவ்வாததாக மாறிய வருடங்களில் விவசாய மக்கள் வாழ்வாதாரம் தேடி நகர்ந்து கடலோடிகளாக மாறிய அவலத்தை நெஞ்சு முழுவதும் தேக்கிக் கொண்டுள்ளவராகவே தன்னை வெளிப்படுத்துகிறார். கடலோடிகள், கீதாரிகள், குடிகாரக் கணவனால் வாழ்வு நொடித்து குழந்தைகளுடன் உயிர் வாழ தொழில் நகரத்திற்கு குடிபெயரும் பெண், கற்பு என்பதாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்றிற்கு எந்தப் பொருளும் இல்லாத வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட பெண் போன்றவைகள் இவரின் நாவல்களுக்கான ஆதாரங்களாக இருக்கின்றன. மிகு கற்பனை எதுவும் தன்னுடைய நாவல்களில் இல்லை என்றும், டி.ராஜேந்தர் போல அல்லது மேடைகளில் கேட்போரை மயக்கும் நாவன்மை கொண்டோரைப் போன்ற எந்த வித மொழிநடையும் தன்னிடம் எப்போதும் கூடி வரவில்லை என்றும், தொடக்கக் கல்வி ஆசிரியராகவே முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதால் குழந்தைகளின் மொழியே தன்னுடைய மொழியாகவும் மாறியிருக்கலாம் என்று தன்னுடைய யூகத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச்செல்வி, தன்னுடைய நாவல்களுக்காக - அவைகளின் உயிரோட்டத்திற்காக செய்ய வேண்டியிருந்த களப்பயணங்கள் பற்றியும் தொடர்பான இன்னபிற ஆயத்தங்களைப் பற்றியும் இயல்பாகப் பேசுவது, எழுத்தில் ஆர்வமிருக்கும் அனைவருக்கும் தம்மை உருவாக்கிக் கொள்ள தேவையானது.
இப்படியான காத்திரமான எழுத்துக்காரர் ஒருவருக்கும் அவர் பணிபுரியும் அரசு அமைப்பிற்கும் ஏதேனும் உரசல்கள் - முறுகல் நிலைகள் ஏற்பட்டிருந்திருக்க வேண்டுமே என்று அவர் பேசிக்கொண்டு வரும்பொழுது நினைத்துக் கொண்டிருந்தேன். அவரது பொழிவின் இறுதி நிமிடங்களில் இதற்கு விடை கிடைத்தது. அவரது துறையின் உயர் அலுவலர்களோடு மோதல் முற்றி பணித்துறப்பு செய்ததாகவும், பிறகு மீண்டும் பணியில் இணைந்ததாகவும் பொழிவினூடே தெரிவிக்கிறார். எனக்குக் கொஞ்சமும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இப்படியான படைப்பு மனம் கொண்டவர்கள் காட்டு யானையைப் போன்றவர்கள். அதிகாரம் தன்னுடைய மூக்கைத் தொட எத்தனிக்கும் போது, தொடும் கையை திருகிப் போடுபவர்கள். தமிழ்ச்செல்வி அவர்களை அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தி வரும் தொடர் பொழிவிற்காக அழைத்ததற்காகவே பள்ளிக் கல்வித்துறை செயலரை பாராட்ட வேண்டும். இதற்கு முன்பும் கூட, அமைப்பிற்கு எதிர்நிலைக் கருத்து கொண்டவர்களையும், பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்களையும் இந்த நூலகம் 'பொன்மாலைப் பொழிவிற்காக' அழைத்துள்ளது, இந்தப் பொழிவு வரிசை தமிழ் அறிவுலகத்தின் - இலக்கியவுலகத்தின் வீச்சான இயக்கமொன்றாக மாற சாத்தியம் கொண்டது என்பதை அறிவிப்பதாகவே உள்ளது.
இன்னொன்றை சொல்ல வேண்டும். தமிழ்ச்செல்வி அவர்களின் பொழிவின் போது அரங்கில் கூட்டமே இல்லை. மிகச் சிலர்தான் இருந்தார்கள். பொழிவாளர் இதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் இந்தப் பொழிவிற்காக வந்திருந்த பொழுது, அரங்கு நிரம்பி வழிந்தது. தமிழ்ச்செல்வியின் பொழிவு அதைவிட பல மடங்கு விஷய கனமான ஒன்று. ஆனால், முப்பது பேர்களுக்கு மேல் அரங்கில் இருந்திருக்க மாட்டார்கள். பொன்மாலைப் பொழுது பொழிவுகளைப் பற்றி சமூக வலைத்தளங்களில், மற்றும் அதிக செலவு பிடிக்காதபடிக்கு எப்படியெல்லாம் விளம்பரப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன். இன்னொன்றும் உண்டு. நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய நன்கு பயிற்சி பெற்றவர்களை - முடியுமென்றால் தொழில்முறை ஒளிப்பதிவாளர்களைக் கூட பயன்படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் ஒருவரை விட்டுவிட்டு கேமரா வேறு எங்கோ அலைகிறது. பொழிவாளரையும் பொழிவையும் நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவர் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு செல்வார்.
இன்னுமொரு செய்தியோடு இந்தப் பத்தியை முடிக்கிறேன். சு.தமிழ்ச்செல்வி அவர்கள் கவிஞர் கரிகாலன் அவர்களின் வாழ்க்கை துணையர். விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்து வருகின்றனர் இந்தத் தம்பதியர். என்னுடைய உறவினர் ஒருவரும் அதே பகுதியில் வசிக்கிறார். அடுத்த முறை அவரைப் பார்க்கும் பொழுது கேட்க வேண்டும். "நீங்கள் எழுத்தாளர் சு.தமிழ்செல்வி அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா, பேசியிருக்கிறீர்களா?"

"அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?"

| Monday, May 21, 2018

"அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?"
பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் எழுதி இரண்டாம் பதிப்பாக தற்பொழுது வந்துள்ள "இதுதான் ராமராஜ்யம்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவின் காணொலியைப் பார்க்க வாய்த்தது. தனக்குப் பின்னால் பெரியாரிய சிந்தனைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டவர்களாகத் தான் கருதும் மூன்று இளைஞர்களை மேடைக்கு அழைத்திருப்பதாகக் கூறிய சுபவீ அவர்கள், தற்போதைய தேவையாக இப்படியான சித்தாந்த புலமை பெற்றவர்களே தேவை என்றார். மருத்துவர் தாயன்பன், பேராசிரியர் சுந்தரவல்லி மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் தலா ஐம்பது நிமிடங்கள் பேசினார்கள்.
இப்போதுதான் முதன்முதலாக மருத்துவர் தாயன்பன் பேசிக் கேட்கிறேன். அவர் தரும் சிந்தனைகளின் கனத்தில் மண்டை சூடேறுகிறது. மிகவும் பரவலாக கற்றுத் தேர்ந்திருப்பது அன்னாரின் சரளமான மேற்கோள்களில் தெரிகிறது. கொஞ்சமும் அலட்டல் இல்லாத பேச்சு. சாதீயத்தை வேரருப்பதின் மூலம்தான் பெரியாரும் அம்பேத்கரும் எதற்காக தங்களின் வாழ்நாள் முழுவதும் உழைத்து வந்தனரோ அதை எட்ட முடியும் என்றார். தமிழர் என்று கொடி பிடிப்பதை விட, திராவிடர் என்றே நம்மை கருதிக் கொள்ள வேண்டும் என்கிறார். ஏனென்றால், திராவிடர் என்கிற பொழுது, சொன்னவன் ஆரியன் இல்லை என்று அர்த்தம். "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்ற கலைஞரின் பராசக்தி வசனத்திற்கு தாயன்பன் கொடுக்கும் விளக்கத்தில் மெய் சிலிர்க்கிறது. அம்பாள் எப்பொழுதுமே பேச மாட்டாள். பேச வேண்டி வந்தால், சாதிகள் இல்லை என்று சொல்ல வேண்டி வரும்; பிராமணர்கள் உசத்தி இல்லை என்று சொல்ல வேண்டி வரும்; பெண்கள் இரண்டாந்தர பிரஜைகள் இல்லை என்று சொல்ல வேண்டி வரும். மேற்படியான காரணங்களால், எந்தக் காலத்திலும் அம்பாள் பேசவே மாட்டாள்.
இந்த காணொலியைத் தொடர்ந்து YouTube-ல் தாயன்பனைத் தேடினேன். மேலும் இரண்டு கிடைத்தன. அவைகளையும் பார்த்து முடித்த நேரத்தில், அவரைப் பற்றிய, அவரது வாசிப்பைப் பற்றிய, அன்னாரின் கருத்துத் தெளிவைப் பற்றிய வியப்பு பிரமிப்பாக மாறியிருந்தது.
திராவிட - திராவிடர் அரசியலைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்கள் இப்படி எங்கிருந்தாவது தொடங்கித்தான் ஆக வேண்டும்.
-------------------------
அன்பின் மொழி
இருபதாண்டுகள் இருக்குமா? இன்னும் அதிகமாக இருக்கும். "மகேந்திரன் பைத்தியம்" பிடித்துத் திரிந்த நாட்கள் அவை. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, நண்டு போன்ற படங்களை திரும்பத் திரும்பப் பார்ப்பதுதான் வேலை. பொழுதுபோக்குவதற்காக இல்லை. மகேந்திரனை பொழுது போக்குவதற்காகவெல்லாம் பார்க்க முடியாது. வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இவருக்கென பொழுது ஒதுக்கித்தான் பார்க்க வேண்டும். அந்தக் காலங்களில் கல்லூரி என்பதால் பொழுது நிறைய கைவசம் இருந்தது. நண்பர்களைக் கூட்டிக் கொண்டு, அவர்களில் பலர் மகேந்திரனை வெறுத்ததற்கே காரணம் நான்தான், எத்தனை மேட்டினிகள் போயிருப்பேன்!
அந்த நாளைய மற்ற இயக்குனர்களோடு ஒப்பிடும்போது, மகேந்திரன் படங்கள் ரொம்பவும் soft-ஆக இருப்பதாக நான் நினைப்பதுண்டு. சத்தம் அதிகமிருக்காது. பின்னாளில் படமெடுக்க வந்த மணிரத்தினம் படங்கள் மாதிரி காமிரா இரைச்சலாக இருக்காது. சமகாலத்தவரான பாலுமகேந்திரா படங்கள் மாதிரி தேவையில்லாமல் அழகியலில் தோய்த்தெடுத்த சட்டங்கள் இருக்காது. அம்மணமாக - இதுவெல்லாம் நடந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும் என்பது மாதிரி இருக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை. கமலஹாசனை மகேந்திரன் தன்னுடைய எந்தப் படத்திலும் பயன்படுத்தவில்லை. கமலஹாசன் படச்சட்டத்தை இரைச்சலாக்கி விடுவார். தன்னைத் துருத்திக்கொள்ள வேண்டி தன்னுடைய சொந்த புத்திசாலித்தனம் - கடன் வாங்கியது என்று நிறைய சேர்த்தி ஒரு மாதிரி colorful-லாக காட்சிப்படுத்துவார். மகேந்திரனுக்கு இது ஆகவே ஆகாது. இந்தக் காரணமாகத்தான் இருக்க வேண்டும். இது நான் யூகிப்பது. தவறாகவும் இருக்கலாம். என்னவோ, மகேந்திரன் படைப்புலகில் கமலஹாசனுக்கு இடமேயில்லை. Camera consciousness கொஞ்சமும் இல்லாத சாமிக்கண்ணு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சரத்பாபு, ரஜனிகாந்த், அசுவினி போன்ற நடிகர்களை அதிகமாக உபயோகித்திருக்கிறார். தேவையைத் தாண்டி அதிக புத்திசாலித்தனத்தைக் காட்டிவிடும் சுஹாசினியைக் கூட அறிமுகம் செய்த படத்தைத் தவிர வேறு எந்த தன்னுடைய படைப்பிலும் அவர் பயன்படுத்தவில்லை.
நண்பன் ஒருவன் கொண்டு வந்து கொடுத்த நண்டு படத்தின் சிடி கொஞ்ச நாட்களாக பார்க்காமலேயே கிடந்தது. நேற்றிரவு, ஒரு sudden impulse காரணமாக படத்தைத் துவங்கி ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன். சிவசங்கரியின் கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் மற்றும் இயக்கவும் செய்திருக்கிறார். முதல்முறை பார்த்த போது என்ன உணர்வுகளால் பீடிக்கப்பட்டேனோ அதே போன்ற தீவிரமான உணர்வழுத்தத்திற்கு இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஆட்பட வேண்டியிருந்தது.
லக்னோவிலிருந்து கதாநாயகன் தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக மெட்ராசில் வேலை வாங்கிக் கொண்டு குடிபெயர்கிறான். ஒண்டிக் குடித்தனம். தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருத்தியும் அந்த குடித்தன வளாகத்தில் இருப்பதால் அவளுடைய குடும்பத்துடன் உறவு கொண்டாட ஆரம்பித்து, அவளைக் காதலித்து திருமணம் செய்து, பெற்றோருடன் ஒட்ட முயன்று தோற்று, வருந்தி நோயுற்று குழந்தையுடன் மனைவியை விதிவசம் விட்டுவிட்டு மரித்துப் போகிறான். மகனுக்காக ஏங்கி ரயில் நிலையத்திலேயே செத்துப் போகிறாள் அவனுடைய அம்மா. திமிர் பிடித்து அலையும் அப்பாவிற்கு அவனுடைய சாவும் மனநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனுடைய மனைவி குழந்தையுடன் ஒரு நீண்ட தனித்த நினைவே துணையான வாழ்க்கை ஒன்றிற்கு ஆயத்தமாகிறாள்.
மனிதர்கள் எப்படிப் பிறந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள். அப்படியே மரிக்கிறார்கள். அன்பு காட்டத் தெரிந்தவன் அதை மட்டுமே செய்கிறான். வெறுப்பு சுலபமாக எவனுக்கு வருமோ அதை அவன் குறைவில்லாமல் தெரியப்படுத்துகிறான். அன்பானவனுக்கு வெறுக்கத் தெரிவதில்லை; வெறுப்பதில் திருப்தியுறும் ஒருவனுக்கு அன்பின் மொழி புரிவதேயில்லை.
மகேந்திரன் தற்போது படங்கள் இயக்குவதில்லை என்பது அவர் மானிடத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத அநீதி.

---------------

"Absence of a system is still a system"
நீதியரசர் செலமேஸ்வர் ஓய்வு பெற்றிருக்கிறார். அன்னாரைப் பற்றி இன்றைய (21-5-2018) தமிழ் ஹிந்து நடுப்பக்கத்தில் சிறப்பான கட்டுரை ஒன்று பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு கலகக்குரல் எழுப்பி வருபவர்கள் வெளியே இருந்து அப்படியான எதிர்ப்பை தோற்றுவிப்பவர்களின் பங்களிப்பிற்கு கொஞ்சமும் குறையாத வண்ணம், சொல்லப்போனால் மிகவும் அதிகமாகவும் ஆபத்துகள் நிரம்பியதாகவுமான பங்காற்றலை, செய்து வருபவர்கள். அமைப்பின் சௌகர்யத்தோடு அதனுடைய சேவையைத் துய்க்க வருபவர்களிடமே அதன் குறைகளையும் கேடுகளையும் விளக்கி நீர்த்ததை சீராக்கும் பொருட்டு தன்னாலான மேலாக்கங்களை முன்னெடுப்பவர்கள். மேனாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அப்படியானவர். அண்மைக்கால காட்டாக நீதியரசர் கே.சந்துரு அவர்களைச் சுட்ட முடியும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களைப் பற்றிய காட்டமான ஆனால் நாகரீகமான விமரிசனங்களை மூன்று சக நீதியரசர்களோடு முன்வைத்த நாள் முதல் ஓய்வு பெற்ற நாள் ஈறாக செலமேஸ்வருக்கு எந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும் ஒதுக்கப்படவில்லை என்ற போதும், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய பணிக்கடமைகளை செம்மையாக ஆற்றி வந்தவர். சர்வ வல்லமை வாய்ந்த அமைப்போடு மோதும் மனத்திண்மை வாய்ந்த மனிதர்கள் நமக்கானப் பாடங்களாகவே வாழ்கிறார்கள். ஆனால் அதே சமயம், அமைப்பிடம் இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு அதனோடு மோதும் மாற்று அதிகார அமைப்புக்களிடம் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படியானவர்கள் அமைப்புக்களை விட ஆபத்தானவர்கள். இவர்களிடமிருந்து இதுவரை நான் கவனமாக விலகியே வந்திருக்கிறேன். பிறந்த நாட்டை விட்டு வேறு அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தந்த பிறகு, வெகுமதியாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத் தலைமையில் நீடிக்காமல், மீண்டும் வேறொரு அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராட வேண்டி நகர்ந்தவனின் வாழ்வு "அதிகார அமைப்பு - மாற்று அதிகார அமைப்பு" என்ற சமன்பாட்டைப் பற்றிய பல்வேறு சூட்சுமங்களை நமக்கு சொல்லிய வண்ணம் இருக்கிறது.
நீதியரசர் செலமேஸ்வர் பற்றிய இன்னொரு செய்தியும் சிறப்பானது. பணி ஓய்விற்குப் பிறகு அரசு வழங்கும் வேறு எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பணியிலிருக்கும் போதே அறிவித்தவர். எத்தனையோ நீதியரசர்கள் பணி ஓய்விற்குப் பிறகு மாநில ஆளுநர் போன்ற அரசியல் பதிவிகளை 'அலங்கரித்துள்ளனர்'. செலமேஸ்வர் அப்படியான அலங்கோலங்களை நிராகரித்தவர். அமைப்பின் அங்கமாக இருக்கும்போதே அதன் சீர்கேடுகளைப் பொதுவெளியில் பகிரங்கமாக விவாதித்தவர். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மனிதர்களின் மேன்மைக்காக காலம் தனக்கு வழங்கிய அதிகாரத்தை உயர் மடைமாற்றம் செய்தவர். பண்பாளர்.
அமைப்பும் அதன் alter ego-வான மாற்று அமைப்பும் கற்றுக்கொள்ள செலமேஸ்வர் அவர்களிடம் நிறைய இருக்கிறது. கற்றுக்கொள்ளாமல் போனாலும், காலம் செலமேஸ்வர்களை நமக்கு பரிசளித்துக் கொண்டே இருக்கும். அமைப்பும் அதன் alter ego-வான மாற்று அமைப்பும் அயர்ந்து தளரும் வரை.

அந்தத் துண்டு யாருடையது?

| Wednesday, May 16, 2018
ஊடகவியலாளர் அன்பர் ஒருவருக்கு பொது நண்பர் ஒருவரால் அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். தமிழக அரசியல் வரலாறு குறித்து தனது சிரத்தையான வாசிப்பின் மூலம் தனித்த பார்வை ஒன்றை வளர்த்திருந்தார். நான் இதுவரை படித்திராத சில நூற்களையும் அவருடன் கூடி வந்த சம்பாஷணையின் வழி தெரிந்து கொண்டேன். திராவிட இயக்கத்தின் பங்களிப்பு யாராலும் குறைத்து மதிப்பிட வழியே இல்லை என்றவர், பெரியார் கடைநிலை சாதியினருக்காக தீவிரமாக தொண்டாற்றவில்லை என்றார். இப்படியான கருத்து தமிழ் அறிவுலகில் நிறைய பேர்களிடம் இருக்கிறது. அதற்கான சமாதானங்கள், சாட்சியங்கள் அவர்களிடம் இருக்கலாம். இதன் நேரெதிர் கருத்திற்கு எனது வாசிப்பின் வழியே நான் வந்தடைந்திருக்கிறேன். இருப்பினும் நண்பரின் வாசிப்பின் தீவிரம் என்னைக் கவர்ந்தது. கடைநிலை சாதியினர் உள்ளிட்ட மக்களுக்கு, பிராமணர்களுக்கு எப்போதோ சாத்தியப்பட்ட, கல்வியறிவு சென்று சேர வேண்டும் என்பதற்காக பெரியாரும் அவர் சார்ந்திருந்த - துவங்கிய இயக்கங்களும் பெருந்தொண்டு செய்திருப்பதை மறக்க முடியாது என்றவர், திராவிட இயக்கங்களின் பெருந்தோல்வியாக "மக்களை அரசியல்படுத்தத் தவறியதுதான்" என்றார்.
எனக்கும் இது நிறைய முறைகள் மனதில் தோன்றியிருக்கிற கருத்தான படியால், அவர் தொடர்ந்து பேசுவதற்கான இரண்டொரு கேள்விகளை முன் வைத்து கவனித்தேன். கேரளாவில் கம்யூனிச இயக்கங்களும் சரி, காங்கிரசுமே சரி, மக்களை தொடர்ந்து அரசியல்படுத்தி வந்ததால்தான், ஒப்பீட்டு அளவில் அரசியல் நெறிபிறழ்வுகள் அங்கு குறைவு என்றும், political conscientiousness கொண்ட மக்களிடம் அரசியல்வாதிகள் குப்பை கொட்டுவது கடினமான காரியம் என்றும், கிராமங்கள் தோறும் படிப்பகங்கள் துவங்கிய ஒரு இயக்கம் மக்களை அரசியல்படுத்தத் தவறியது மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறு என்றும் மிகுந்த ஆதங்கத்தோடும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசினார்.
இதை முழுவதுமாக என்னால் ஒப்புக்கொள்ள முடியும். திராவிடர் கழகமும், அதன் கட்சி அரசியல் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் மக்களை அரசியல்படுத்தவில்லை. இந்தியாவில் வேறு எங்கேயும் விட, தமிழ்நாட்டில்தான் போராட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக ஒரு செய்தித்தாளில் சில தினங்களுக்கு முன்னால் படித்தது நினைவுக்கு வந்தது. இந்தப் போராட்டங்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து மக்கள் 'அரசியல்படுத்தப்பட்டு விட்டார்கள்' என்று கூறி விட முடியாது. கட்சிகள் போராட்டங்களை அறிவிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் தானாக சேர்ந்த கூட்டம், வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட கூட்டம் எல்லாம் சேர்ந்து பெரிய போராட்ட பிம்பம் ஒன்று எதையும் நம்பும் மனிதக் கண்களுக்கு முன்னால் ஊடக கேமராக்கள் வழி கட்டமைக்கப்படுகிறது. போராட்டங்களிலும், உன்னாவிரதங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் சரிபாதி சாமான்யருக்கு எதற்காக அந்த நிகழ்வு என்பதே தெரியாது. அப்படியானால், எது அரசியல்படுத்தப்படுதல்? ஆட்டோக்காரர் சவாரி ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் கேட்கும் பொழுது, அதைத் தர முடியாது என்றும், உடனடியாக அதை அந்த இடத்து பொதுப் பிரச்சினையாக்கி இருபது முப்பது பேரை கூவி அழைத்து ஆட்டோக்காரரை சரியான சவாரிக் கட்டணத்திற்கு ஒருவர் கட்டாயப்படுத்துகிறார் என்றால், அவர் அரசியல்படுத்தப்பட்டு விட்டார் என்று அர்த்தம்.
Political Conscientiousness மக்களிடையே குறைவாக இருக்கும் சமூகங்களில், எதையும் விதி - கடவுள் என்று சுமையை மாற்றி இறக்கும் பண்பு மிகுதியாக இருக்கும். மலையாளி ஒருவர் அமைப்பை எதிர்த்து கேள்விகள் கேட்கிறார் என்றால், அரசியல்படுத்தப்பட்ட மனிதர் அதைத்தான் செய்வார். அதை மட்டுமே அவர் செய்ய முடியும். இது மட்டுமன்றி, நிறைய இளைஞர்களுக்கு மேலைத்தேய கம்யூனிஸ்டு இயக்கங்களைப் பற்றிய அறிவும், கம்யூனிச சித்தாந்த தெளிவும் இருப்பதை கேரளாவில் நான் பணிபுரிந்த வருடங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அங்கு DC Books என்ற புத்தகக்கடை இல்லாத ஊரே இல்லை. கொச்சி பல்கலைக் கழக வளாகத்திலும் ஒரு கடை உண்டு. சாயந்திர வேளைகளில் அங்கு போய் உள்ளே உலவிக் கொண்டிருப்பதுண்டு. சிறிய கடை என்றாலும் கனமான ஒன்று. அங்கிருக்கும் பையன் சொல்லுவான். அவர்களுடைய மற்ற கிளைகளில் புதினங்கள் கணிசமான அளவில் விற்பதாகவும், இந்தக் கடையில் மட்டும் புதினங்களே விற்பனையாவதில்லை என்றும், non-fiction மட்டுமே விற்றுத் தீர்கின்றன என்றும் விசனப்படுவான். அங்கே சர்வகலா சாலை மாணவர்களின் தரம் அப்படி இருக்கிறது என்றால், இங்கே அதைப் போன்ற உயர் கல்விச் சாலைகளை சுற்றியும் கோனார் நோட்ஸ் போன்ற தெளிவுரைப் புத்தகங்கள் விற்கும் கடைகள் ஏராளம். தமிழர்கள் அரசியல்படுத்தப் படவில்லை என்பதற்கு இது ஒரு தூலமான சாட்சியம்.
இருக்கட்டும். சொல்ல வந்தது ஒரு பொழிவைப் பற்றி. அண்மையில் சென்னை பச்சையப்பர் கல்லூரி பேராசிரியர் சுப.வீரபாண்டியனை அழைத்து "திராவிட இயக்க வரலாறு - ஒரு பார்வை" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற அழைத்து, அவரும் உலக அளவில் சமூகப் புரட்சிகள் செய்த இயக்கங்களின் வரலாறு, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை 'தென்னிந்தியர் நலவாழ்வு சங்கம்' தொடங்கி திராவிடர் கழகம் வரையிலான கறுப்புச் சட்டையினரின் வரலாறு ஆகியவற்றை கொடுக்கப்பட்ட கால அளவிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பேசினார். இந்தக் காணொளி YouTube-ல் கிடைக்கிறது. திருவாளர் எல்லிஸ் தொடங்கி அருட்தந்தை கால்டுவெல் வழியாக ராமசாமி நாயக்கர் வரை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் எத்தனையோ பெருமக்கள் செய்த எண்ணவொண்ணா தியாகங்களின் மூலமாகப் பெற்றுத் தந்த உரிமைகளை ருசித்துக் கொண்டிருப்பவர்களே "திராவிட இயக்கங்கள் என்ன செய்து கிழித்தன?" என்று கேட்பது கொடுமையிலும் கொடுமை. மக்களை அரசியல்படுத்தத் தவறியதன் விலையை திராவிட இயக்கங்கள் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மீண்டும் சாதிய - மதவாத இயக்கங்களுக்கு நாடெங்கிலும் செல்வாக்கு மேலோங்கிக்கொண்டு வருவது கர்நாடகா தேர்தல் முடிவிலும் இன்னொரு முறை பதிவாகியிருக்கிறது.
பேராசிரியர் தன் உரையினூடே ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். கானாடுகாத்தான் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு விழாவில் நாகஸ்வரம் வாசித்த கலைஞர் ஒருவர் வியர்வையை துண்டால் துடைத்துவிட்டு மறதியாக தோளில் போட்டுக்கொண்டு விட, 'பெரிய' சாதியினர் கொதித்தெழுந்துவிட்டனர். ஆனால், அங்கிருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி அந்த நாகஸ்வரக் கலைஞரை 'துண்டு உன் தோளிலேயே இருக்கட்டும்' என்று கறாராக சொல்லிவிட, அடுத்த நாள் ராமசாமி நாயக்கரிடம் பஞ்சாயத்து போயிருக்கிறது. அய்யா இரண்டே கேள்விகளில் தாவாவைத் தீர்த்து விட்டார். "அந்தத் துண்டு யாருடையது?" மற்றும் "அந்த நாகஸ்வரக் கலைஞர் யாருடைய தோளிலே அந்தத் துண்டை போட்டார்?"
பெரியாரைப் போன்றவர்கள் சுயம்புவாகவே தங்களை அரசியல்படுத்திக் கொண்டவர்கள். நம்மைப் போன்றவர்களுக்கு யாராவது வந்து அரசியல்படுத்த வேண்டும். அப்படியான சேவையை செய்ய கல்வி நிறுவனங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டு. ஆனால், பொறியியல் - மருத்துவக் கல்லூரிகளுக்கு மந்தைகளைத் தயாரித்துத் தரும் உற்பத்திக்கூடங்களாக பள்ளிக்கூடங்கள் எப்போதோ, சரியாகச் சொன்னால் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, மாற்றப்பட்டு விட்டன. மார்க் வாங்க வைப்பவனே சிறந்த ஆசிரியன் என்று முத்திரை மாற்றமுடியாத படி குத்தப்பட்டு விட்டது. இப்போது தமிழ்நாட்டு அரசே, NEET மற்றும் இன்னபிற தேர்வுகளுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்ய வியக்கும்படியான முன்னெடுப்புகள் செய்கிறது. கல்லூரிகளிலும் இதே நிலைதான். மார்க் மட்டுமே இங்கே ஒருவனைத் தீர்மானிக்கும் என்றால், பெரியார் சிலை உடைந்தே தீரும். யாரும் மாட்டுக்கறி சாப்பிட முடியாது. பிற மதத்தினர் துரத்தப்பட்டே ஓடுவர். செருப்புத் தைப்பவன் மகனுக்கு செருப்பத் தைக்க கற்றுக்கொடுக்க அமைப்புகளே ஏற்பாடு செய்யும்.
இந்த நிலையில்தான் பச்சையப்பர் கல்லூரி பொழிவு முக்கியத்துவம் பெறுகிறது. பேராசியரே சொல்வது போல, திராவிட இயக்க வரலாற்றை மட்டுமல்ல, காங்கிரஸ் - கம்யூனிஸ்டு - ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களின் வரலாறுகளையும் சித்தாங்களையும் பற்றி மாணவர்களிடம் உரையாட அவற்றில் பாண்டித்தியம் பெற்ற கற்றோரை அழைத்து மாணவர்களிடம் பேச வைக்க வேண்டிய அரும்பணியை கல்வி நிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இதைச் செய்தன. இப்போது அரசுக் கலைக் கல்லூரிகளில் கூட வேலைநிறுத்தம் நடப்பதில்லை. இது மிகவும் கவலை தரும் விஷயம். வேலைநிறுத்தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் பழைய பொய்கள். கேரளாவில் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன. ஒரு கிராமத்தில், டவுனில், நகரின் சில பகுதிகளில் என்று வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் உருப்படாமல் போய்விட்டார்களா? படிக்கவில்லையா? வீடு கட்டவில்லையா? கலியாணம் செய்யவில்லையா? 'அரசியல்படுத்தப் பட்டவனுக்கு' தான் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும்; அடுத்தவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்கிறான் என்பதும் தெரியும்.
ஆக, கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் யாரைத் தயாரிக்க வேண்டும் என்றால், political conscientiousness மிகுந்த குடிமகன்களை. தாங்கள் யாராக இருந்தோம் என்ற வரலாறு தெரிந்தவர்களை. வரலாறு தெரிந்தவன்தான் வரலாறு படைக்க முடியும். இதைச் சொன்னவர் அம்பேத்கர். இவரை, பெரியாரை படிக்காமல் ஒருவன் என்ன கிழிக்க முடியும்? கொஞ்ச பேர் NEET எழுதலாம்; JEE எழுதலாம்; மருத்துவன் - எஞ்சினியர் ஆகலாம். மீதிப்பேர் நாசமாகப் போகலாம்.