சினிமாவின் சிவாஜி

| Thursday, July 30, 2015
சினிமாவின் சிவாஜி
மிகை நாடும் கலை - காலச்சுவடு பத்திரிகையில் சினிமா சம்பந்தமாக வெளியான கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகத்தார். அனைத்து கட்டுரைகளுமே வாசிக்கத் தக்கவையாக உள்ளன. சிவாஜி அவர்களின் நினைவுக் கட்டுரையாக அம்ஷன் குமார் எழுதியுள்ள குறிப்புகள் நடு நிலையோடும் மிகுந்த ஆய்வோடும் எழுதப்பட்டுள்ளது. சிவாஜி அவர்களின் நடிப்பு மிகை வகையைச் சார்ந்தது - அவரின் நாடக அனுபவத்தால் விளைந்தது என்று பரவலாக நம்பப்பட்டு வருவதை அம்ஷன் குமார் மறுக்கிறார். மிகை சார் நடிப்புக்கும் சிவாஜியின் நாடக அனுபவத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று சொல்லும் அவர், டி.கே.பகவதி, முத்துராமன், கருணாநிதி (தி.மு.க. தலைவர் அல்ல), பாலையா, ரங்காராவ் போன்றோரும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்களின் நடிப்பு மிகை சார் வகையைச் சார்ந்தது அல்லவே; ஆகையால் சிவாஜி அவர்கள் தானாகவே மற்றவர்களை அவதானித்து, தான் ஏற்கும் பாத்திரங்களுக்குள் புகாமல் அவைகளை தன்னை விட மேலாக மிகவும் உயர்த்திப் பிடித்திருக்கிறார் என்று சொல்வது ஒரு புதிய வியாக்கியானமாக உள்ளது. பத்திற்கும் மேற்பட்ட நடிப்பு வகைகளை தன்னுடைய பாத்திரங்களில் சிவாஜி வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லும் அம்ஷன் குமார், தமிழில் மற்ற நடிகர்களை விட இவர் எவ்வளவோ கற்பனா சக்தி மிகுந்தவர் என்றும் மதிப்பிடுகிறார்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் மேட்டுக்குடி கலைகளும் சினிமாவும் என்ற கட்டுரை அவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஞாநி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரை ஏற்கனவே எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறந்தபோது கொண்டுவரப்பட்ட ஒரு நினைவுத் தொகுப்பிலும் வெளிவந்துள்ளது. ஆரம்ப வருடங்களில் சினிமா என்பது மேட்டுக்குடி வர்க்கத்தால் கேலியுடன் ஒதுக்கப்பட்டே இருந்தது. அதில் பங்கேடுத்தவர்கள் மேட்டுக்குடியினரால் "கூத்தாடிகள்" என்று கிண்டல் செய்யப்பட்ட நாடகக் கொட்டாய் காரர்களும், தெருக்கூத்தாடிகளும்தான். அதில் உள்ள வியாபார வாய்ப்புக்களை தெரிந்துகொண்ட பின்னரே மேட்டுக்குடியினர் சினிமாவில் நுழைந்தனர் என்றும் சொல்கிறார் பாண்டியன். பாண்டியனின் "இருவர்" சினிமா பற்றிய கட்டுரை திராவிட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிட அரசியலின் முக்கியஸ்தர்கள் இரண்டு பேர்களை பற்றி, தேசியத்திற்கு வால் பிடிக்கும் மணிரத்னம் எப்படி சித்தரித்துள்ளார் என்று அரசியல் விமரிசன நோக்கோடு எழுதப்பட்டுள்ள கட்டுரை.
 
இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்றோரால் எழுதப்பட்டவை. சேரனின் "சொல்ல மறந்த கதை"யைப் பற்றிய கட்டுரையும் சுவையானதே. சென்னை நகர சினிமாக் கொட்டகைகளின் ஆதிகால வரலாறு மேல்நாட்டவர் ஒருவரால் நுண்ணியமாக ஆராயப்பட்டு எழுதப்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது.
 
சினிமா ஒரு பண்பாட்டின், மொழியின், இனத்தின் ஆவணம்தான். சந்தேகமேயில்லை.
 
[மிகை நாடும் கலை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்]
----

வாயை மூடிப் பேசவும்
கடந்த சில தசாப்தங்களிலேயே அண்மைக்காலத்தில்தான் கருத்துச் சுதந்திரம் மிகவும் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. சில கட்சிகளுக்கு, சில இயக்கங்களுக்கு, சில சமூகப் பிரிவினருக்கு நம்முடைய கருத்து ஏற்புடையதாக இருக்குமா என்று பலமுறை சிந்தித்து விட்டு, பிறகே அதை பதிவேற்றமோ, பிரசுரமோ செய்ய வேண்டி உள்ளது. இதில் ஒருவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பிறகு தன்னையே நொந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.
 
MISA காலத்தில் இந்தப் பத்திரிகை தணிக்கை முறை வெளிப்படையாக அமுலில் இருந்தது. ஆகையால் நமது கருத்து வெளிடப்படும் முன்னரே, தணிக்கைக்காக அமர்த்தப்பட்டோர் அதைப் படிப்பார்கள். ஆட்சேபம் சொல்வார்கள். அவர்கள் சொல்கிறபடி செய்தியை / கருத்தை கத்தரித்தோ மாற்றியோ விட்டால், பிரச்சினை அத்தோடு விட்டது. ஆனால் இன்றைய நிலை வேறு. FB உள்ளிட்ட சமூகத் தளங்களில் தம்முடைய கருத்தை வெளியிடுவோர் முதன் முறையாக வெகுஜன வாசிப்பிற்குள் வருகின்றனர். இவர்களது கருத்தை சமூக நிலை அறிந்து பக்குவப்படுத்தக் கூடிய editors சௌகர்யம் இவர்களுக்கு இல்லை. அந்தந்த நேர உணர்வின் வெளிப்பாடாக இவர்களது கருத்து அமைந்து விடுவதால், கருத்துக் காவலர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். வேறு எந்த வேலையையும் பார்க்காமல் யார் எந்த கருத்தை சொல்கின்றனர், அதில் ஆட்சேபம் சொல்ல என்ன உள்ளது, எப்படி பிரச்சினையை ஆரம்பிக்கலாம் என்று உற்று நோக்கிய வண்ணம் ஊருக்கு நூறு பேர் குறைந்த பட்சம் இருப்பதாகத் தெரிகிறது. Big brother is watching us, 24 x 7. 

பிரச்சினை என்று வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விடுவது நல்லது. உருவ பொம்மையை எரிப்பதை எல்லாம் பெரிது படுத்த வேண்டியதில்லை. வீட்டில் பெட்ரோல் குண்டு எறியப்படுவதற்கு முன்போ, வீட்டையோ ஆபீசையோ களேபரம் செய்வதற்கு முன்போ, நிபந்தனையற்ற மன்னிப்பும், கையெடுத்து கும்பிட்டவாறு ஒரு போட்டோவும் தயாராக இருப்பது FB உள்ளிட்ட தளங்களில் கருத்து சொல்லும் அனைவரிடமும் இருப்பது நல்லது.
 
நான் ரெடி, நீங்கள் ரெடியா?
----

WELL DONE MR.THAROOR!
BRITAIN OWES REPARATIONS என்ற தலைப்பில் சொற்போர் ஆக்ஸ்போர்ட் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றதின் காணொளி YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் பிரமுகரும் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.சசிதரூர் பதினைந்து நிமிடங்கள் பிரித்தானிய காலனியாதிக்கம் அவர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம் விளைவித்த கொடுமைகளையும் சுரண்டல்களையும் பற்றியும், முக்கியமாக பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றியும் உணர்ச்சி பொங்க அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். அவருடைய சொல்தேர்வு அபாரமாகவும் நம்பமுடியாததாகவும் உள்ளது. மேடைப் பேச்சில் அவருக்கு இருக்கும் அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 
இவர் ஐ.நா.விலேயே இருந்திருக்கலாம். இந்தியா வராமலேயே இருந்திருக்கலாம். வந்த பிறகு அரசியலில் சேராமல் இருந்திருக்கலாம். INDIA: FROM MIDNIGHT TO MILLENNIUM போன்ற புத்தகங்களை மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்திருக்கலாம். அமைச்சராக மறுத்திருக்கலாம். IPL அணி எதுவும் வாங்காமல் இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் சிலரை வாழ்க்கையில் சந்திக்காமலாவது இருந்திருக்கலாம்.
 
எங்கேயோ இருந்திருக்க வேண்டியவர்!
----

தோல்வி என்னும் சாகசம்

| Sunday, July 26, 2015
தோல்வி என்னும் சாகசம்

மனுசப்பயல் அதை விட்டு எங்கு நகர்ந்தாலும் மீண்டும் நதிக்கரைக்குத் திரும்ப வேண்டியதுதான்.  குழந்தையின் முகம் தாயின் மார்பை நோக்கித் திரும்புவதைப் போல.  பெரிய மனுஷ நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரையிலே பிறந்தது என்பதைப் போலவே, மஹா காவ்யங்கள், இலக்கியப் படைப்புக்கள் எல்லாவற்றுக்குமே நதியோடோ கடலோடோ சம்பந்தம் பலமாகவே உள்ளது.  நான் படித்த வரையில் இப்படித்தான்.  ஒருவேளை வேறு மாதிரி இருந்தால் மற்றவர்கள் அதை எழுத்தில் தங்கள் பக்கத்து நியாயத்தோடு சொல்ல வேண்டும்.  எனக்கு தமிழில் உடனடியாக ஞாபகம் வருவது தி.ஜானகிராமனின் மோகமுள்.  பாபுவையும், யமுனாவையும், ரங்கண்ணாவையும் போல காவிரியும் அல்லவா ஒரு கதாபாத்திரம் அதில்!  ரயில் மாதிரியேதான் நதியும்.  எல்லா உன்னதங்களுக்கும் கேவலங்களுக்கும் மௌன சாட்சியாகி, தான் யார் பக்கம் என்பதைச் சொல்லாமலேயே காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலும் நதியும் இன்னும் பார்க்கப் போவது எத்தனை எத்தனையோ!


இப்பொழுதுதான் “கம்பா நதி” படித்து முடித்தேன்.  வண்ணநிலவன் எழுதியது.  இவரது ‘கடல்புரத்தில்’ பற்றி ஏகப்பட்ட பேர் எக்கச் சக்கமாக சொல்லியாகி விட்டது.  கம்பா நதியைப் படித்தபோது, கூடவே இந்துமத்தின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது.  சாதாரண மனிதர்கள் தங்களது ஆசைகளை அபிலாஷைகளை எப்படிக் குடும்பத்திற்காகவும் மற்றும் தான் சார்ந்தோ தன்னைச் சார்ந்தோ நிற்கும் மனிதர்களுக்காகவும் மாற்றிக் கொள்ள நேர்கிறது என்பதையும், எங்கேயோ எப்படியோ இருக்க ஆசைப்படும் மனிதன் தரையில் விழுந்து அடிபட்டு, மீண்டும் எழ முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு நாளடைவில் புழுவாக உருமாற்றம் பெற்று சாக்கடையில் சார்ந்துண்ணியாய் உழன்று, நேரம் வந்ததும் இடத்தைக் காலி செய்து நகர்கிறான் என்பதை இந்துமதி தன்னுடைய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் சென்னையைப் பின்புலமாகக் கொண்டு இயல்பாக சொல்லியிருப்பார்.  1987 வாக்கில் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் இதை தொடராகவும் செய்தது.  ரகுவரனும் ஊட்டி ராகினியும் நடித்திருந்ததாக நினவு.

கம்பா நதியின் கதையும் இதுதான்.  ஆனால் இந்துமதி தொடமுடியாத உயரத்தில் நின்று இதே விஷயத்தை நுண்ணியமாகவும், ஒரு அபூர்வமான விட்டேத்தி தனம் நாவல் முழுக்க விரவி இருக்குமாறும் செய்திருப்பது வண்ணநிலவனின் கலைத் தேர்ச்சிதான். திருநெல்வேலிப் பிள்ளைமார் குடும்ப உறவுகள், வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதை, சுய லாபத்துக்காக தன் நிலையிலிருந்து இறங்க கொஞ்சமும் தயங்காமை, சின்னப் பிள்ளைகளின் நிறைவேறவே முடியாத அ-யதார்த்த ஆசைகள், அவைகளை நிர்த்தாட்சண்யமாக காலில் போட்டு மிதிக்கும் நிதர்சனங்கள் - மிகவும் இயல்பாக அவர்களின் மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது.  பாப்பையாதான் ஒருவேளை வண்ணநிலவனோ? தமிழ்ப் புதின இலக்கியத்தில் நடுத்தரக் குடும்பத்து இயலாமையில் உழலும் பிரதிநிதியாக பாப்பையாவைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் இவ்வளவு கச்சிதமாகப் பொருந்த முடியாது.  பாப்பையாவிற்கும் கோமதிக்கும் கல்யாணம் முடிந்திருக்கலாம்.  ஆனால் ஆகவில்லை.  அதற்கென்ன போச்சு?  ஆசைகளை நிறைவேற்றத் தெரியாவிட்டாலும் நிராசைகளை ஜீரணம் செய்யும் சக்தி அவர்களிடம் கொஞ்சமாகவா இருக்கிறது?  கோமதியும் பாப்பையாவும் அந்த நெல்லை சாலையில் நடந்து செல்வதையும், கோமதி அதி நுட்பமான காரணங்களுக்காய் அழுவதையும், ஒரு தேர்ந்த பிரெஞ்சு இயக்குனர் சரியான உணர்வு வெளிப்பாட்டுடன் சினிமாவில் கொண்டு வர முடியும்.

இதில் வரும் சிவகாமி ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் நாயகிதான்.  இரண்டாந் தாரத்தோடு கெடுவாழ்வு நடத்தி வரும் அப்பன் சங்கரன் பிள்ளையால் குடும்பம் கரையேறப் போவதில்லை என்று எப்போதோ கண்டு கொண்டவள் சிவகாமி.  அனைவரின் மீதும் கரிசனமும் ததும்பும் அன்பும் கொண்ட சிவகாமிகள் எழுபதுகளில் தெருவிற்கு ஓரிருவராவது இருந்தனர்.  இவர்கள் தலையெடுத்துத்தான் குடும்பங்கள் உருப்பட்டன.  தங்கைகள் கலியாணம் செய்யவும், தம்பிகள் படித்து வேலைக்குப் போகவும் சிவகாமிகள் முதிர்கன்னிகளாய் நீடித்ததால் மட்டுமே முடிந்தது.  இப்பொழுதும் எழுபதுகளின் சிவகாமி அக்காக்களை ரோட்டில் ‘சிவகாமிப் பாட்டிகளாக’ பார்க்க நேரும் அவலமான நேரங்களில் மனது சோர்ந்து போகிறது.  ஆனாலும் அவர்கள் புன்னகைத்த படியே நகர்கிறார்கள்.  சிவகாமிகளுக்கு அழத் தெரியாது போலும்!

‘கம்பா நதி’ தமிழ்ப் புதின வரலாற்றில் முக்கியமானது.  வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ போலவே.  வண்ணநிலவன் எழுத்து என்ற வானப் பரப்பில் எங்கோ உசரத்தில் ராஜாளிப் பறவையைப் போல பறக்கிறார்.  அண்ணாந்து பார்த்து கழுத்து வலிக்கிறது. 

[கம்பா நதி, வண்ணநிலவன், நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு, சென்னை, நவம்பர் 2012, உரூபா 90/-]
----
விளையாட்டின் விதிகள்
இன்றைய [ஜூன் 24, 2015] தமிழ் தி ஹிந்துவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மனோன்மணியம் சுந்தரனார் சர்வகலா சாலை துணை வேந்தர் வே.வசந்தி தேவி அவர்களின் கட்டுரை இந்தியக் கல்வி முறை எப்படி நூதனமாகவும், நுண்ணியமாகவும் வர்க்க வேறுபாட்டை பேணிக் காத்து வருகிறது என்பதையும், எழுபதுகளுக்கு முன்பு வரை அரசுப் பள்ளிகள் சமூகத்தின் அனைவரும் வந்து சேரும் சங்கமமாக இருந்தது - எழுபதுகளின் இறுதியில் இந்த நிலை மாறி பொருளாதார ரீதியில் கடை நிலையர் மற்றும் ஜாதிய அமைப்பில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனத்தோர் ஆகியோர் மட்டுமே தங்கிப் பயிலும் இடமாக மாறிப் போனதற்கு பின்னால் உள்ள macro conspiracy பற்றி திராவகம் ததும்பும் மொழியில் சொல்கிறது.
 
ஆங்கிலக் கல்வி முறை பற்றி சில முக்யமான யோசனைகளை தெரிவித்துள்ளார் வசந்தி தேவி அவர்கள். ஆங்கிலக் கல்வி 'எலிட்' பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்துகிறார். ஆங்கிலம் second language-ஆக கற்றுத் தரப்படும் எந்த நாடுகளிலும் அதற்கென நியமிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், அந்த மொழியை first language-ஆக கற்றுத் தரும் ஆசிரியர்களின் தரத்தை விட, ஒப்பீட்டளவில், குறைந்துதான் இருக்கும் என்று தெளிவு படுத்தும் வசந்தி தேவி அவர்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கு தரப்படும் நியாயப்படுத்த முடியாத முக்கியத்துவமானது ஆதிக்க சாதியினர் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் ஆகியோர் சேர்ந்து செய்யும் சதி என்றும் சொல்கிறார். 
 
"விளையாட்டின் விதிகளை தீர்மானிப்பவன் நீயாக இருந்தால் எந்த விளையாட்டிலும் ஜெயித்து விடலாம், ஜோயி!" என்ற கார்ட்டூன் வசனத்தை மேற்கோள் காட்டும் வசந்தி தேவி, இந்தியக் கல்வி முறை என்ற விளையாட்டின் விதிமுறைகள் "ஆதிக்க சாதி & ஆளும் வர்க்கம்" ஆகியோரால் தீர்மானிக்கப் படுவதால் ஜெயிப்பவர்கள் அவர்களின் வாரிசுகள் மட்டும்தான் என்கிறார்.
 
பின், வேறெதற்கு அரசுப் பள்ளிகள்? காட்டும் இடத்தில் கையெழுத்து இடத் தெரிந்த கூலிகள் மற்றும் நவீன அடிமைகள் ஒரு நாட்டின் மேல்தட்டு மக்கள் சுகமாக வாழ இன்றியமையாதவர்கள். அந்தக் கூலிகளின் உற்பத்தியை உறுதி செய்யும் கூடங்களாக அரசுப் பள்ளிகள் இருப்பதில் இந்திய ஜனநாயகத்திற்கு தடையெதுவும் இருக்க முடியுமா என்ன? அல்லது அமைப்பதிகாரம் இந்த நிலையை மாற்றிட முன்னெடுப்பேதும் செய்திடுமா என்ன?
----

துணையாய் வந்த நிழல்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் அடுத்ததாக எதைப் படிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்டமைப்பின் நேர்த்திக்காக எனது கவனத்தைக் கவர்ந்தது "நெஞ்சின் ஒளிரும் சுடர் - சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகள்".
 
நூலைப் படிக்கத் துவங்கி ஒரே மூச்சில் முடித்த போது மணி இரண்டரை. துவங்கும் போது நடுநிசியாக இருந்திருக்கலாம். மிகவும் எளிமையான மொழி. இதனூடே நூலாசிரியர் தான் யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவரை மிகவும் அந்தரங்கமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்ததின் சரளம் இழையோடுகிறது. திருமதி கமலா ராமசாமி அவர்கள் தனது கணவரின் இறப்பிற்கு பிறகு எழுதிய சுயசரித்திரம் இது. தான் பிறந்து வளர்ந்த கிராம, குடும்பப் பின்னணி பற்றியும் திருமணமாகி நாகர்கோயில் வந்த பிறகு, கணவர் ராமசாமி வீட்டில் படிப்பைத் தொடர்ந்தது, மாமனார் மாமியார் குணச்சித்திரங்கள், கணவரின் சகோதரிகள், திருமணமாகியும் கணவரின் உந்துதலால் பள்ளி இறுதிப் படிப்பு வரை தொடர்ந்தது, மாமனாரின் ஜவுளிக்கடை வியாபாரம், அதில் கணவரின் உற்சாகமின்மை, கணவரின் எழுத்துத் திறமை, அதிலே குடும்பத்தாருக்கு இருந்த நம்பிக்கையின்மை, கணவரின் நண்பர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகள், தங்கள் வீட்டுக்கு நிற்காமல் பெய்யும் மழை போல வந்து கொண்டேயிருந்த கணவரின் இலக்கிய சகாக்கள் என்று அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக மிகச் சரளமாக எழுதியுள்ளார். படித்து முடித்ததும் இவரின் உரைநடைதான் என்னை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. இதுதான் இவரின் முதல் எழுத்து. கணவரின் அந்திமக் காலத்தில் அவரின் கட்டுரைகளை மெய்ப்புப் பார்த்துள்ளார் என்பதே இவருக்கும் எழுத்துக்கும் இருந்த சம்பந்தம். ஆனாலும் கூட, வந்து சேர்ந்திருக்கும் கோர்வையும் பிரவாளமும் ஐம்பது ஆண்டுகள் சு.ரா.வை அருகிலுருந்து அவதானித்து வந்ததால் வாய்த்த வரம்.
 
கணவரின் நண்பர்களிலேயே அதிகம் இவர் சிலாகிப்பது கிருஷ்ணன் நம்பியைத்தான். அதிகம் ஆடிப் போனது, தருமு சிவராமு என்னும் பிரமிள் தொடர்பைப் பற்றித்தான். ஜெயமோகன், ராஜமார்த்தாண்டன், ஜி.நாகராஜ் உள்ளிட்ட பலரைப் பற்றி கமலா அவர்களின் நினைவுகள் எந்தவித காழ்ப்பும் இன்றி வெளிப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் ஒரு பெண்மணியின் பார்வை என்பதால், அடிக்கடி சமையல்கட்டும் பதார்த்தங்களும் தலைகாட்டுகின்றன. சு.ரா.வுக்கு தோசை ரொம்பவும் பிடிக்கும் என்பதிலிருந்து "தோசை எனக்கு எப்ப பிடிக்காமல் போறதோ அப்போ நான் செத்துட்டதா அர்த்தம்" என்று அவர் சொன்னதை அமெரிக்க மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோது ஞாபகம் வந்ததாக கமலா அம்மா சொல்வது ஒரு அன்பான மனைவியின் உருக்கம்.

சு.ரா.வின் அன்பர்களுக்கும், சரிதம் - சுயசரிதம் ஆகியவைகளில் விருப்பம் கொண்டோருக்கும் படிக்கத் தகுந்த நூலாகவே இதைக் கருத முடியும். நேர்த்தியாக புத்தகம் கட்டமைக்கப் பட்டுள்ளது கூடுதல் விசேஷம். புத்தகத்தின் இறுதியில் சு.ரா.வின் குடும்ப வரைபடமும், கமலா அம்மையாரின் குடும்ப வரைபடமும் சேர்க்கப்பட்டிருப்பதும், சு.ரா.தொடர்பான சில அரிய குடும்பப் புகைப்படங்களைச் சேர்த்திருப்பதும் சிறப்பானவை.


[நெஞ்சில் ஒளிரும் சுடர் - சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகள், கமலா ராமசாமி, காலச்சுவடு அறக்கட்டளை வெளியீடு, நன்கொடை உரூபா 100/-.]
----
          

Top of Form