திண்ணை 7

| Friday, March 28, 2014
28-03-2014
 
அமெரிக்க உளவாளி
 
அ.முத்துலிங்கம் அவர்களின் "அமெரிக்க உளவாளி" அவரின் இணைய தளத்தில் அவ்வப்போது எழுதி வந்த சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பு. பல்வேறு விடயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தமிழில் அவருக்கு மட்டுமே கைவந்திருக்கும் சூட்சுமமான நகைச்சுவை பெரும்பாலான கட்டுரைகளில் ஆகி வந்திருக்கிறது. தவிரவும், இவர் [அவரே சொல்லியிருப்பது போல] பணி புரியாத நாடுகள் மிகவும் குறைவு என்பதால் இவரின் அவதானிப்பு மிகவும் விரிந்து பட்டதாகவும், நமக்கெல்லாம் புதிய அனுபவமாகவும் இருக்கிறது. முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளை படிக்கத் தொடங்கிய நாட்களில் எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஏன் இவர் இலங்கைக்காரராக இருந்தும் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒன்றும் எழுதவே இல்லை? நான் நினைத்தது தவறு. எழுதுகிறார். ஐநா அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களோடு நிறைய வருடங்கள் பணி செய்திருப்பதால் என்ன முடியும், எது முடியாது மற்றும் உலக வல்லமைகள் இது குறித்த விடயங்களில் எவ்விதமான நிலைப்பாடு எடுக்கும் என்பது இவருக்கு முன்னமேயே தெரிந்திருக்கிறது. ஆனாலும், தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல, ஆங்காங்கே தன் தாய் நாட்டைப் பற்றிய ஏக்கமும், அதன் சுதந்திரத்திற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்களைப் பற்றிய வணக்கமும் கட்டுரைகளில் எதிர்பாராத இடங்களில் வாசகன் சந்திக்க முடிகிறது. புலிகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான சதாசிவம் கிட்டுவைப் பற்றிய கட்டுரை இப்புத்தகத்தில் ஆகச் சிறந்தது. போலியான பாவனைகளை இவரது எழுத்தில் அவதானிக்கக் கூடுவதில்லை.

அ.முத்துலிங்கம் தமிழுக்கு நேர்ந்திருக்கும் சிறந்த நவீன எழுத்தாளர்களில் ஒருவர்.
 
----
 
27-03-2014
 
காற்றில் மிதக்கும் புல்லாங்குழல்
 
கல்யாணி என்கிற கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசனின் தந்தையும் இடது சாரி எழுத்தாளர்களில் மூத்தவருமான தி.க.சி. மறைந்து விட்டார். இலக்கிய விமரசனத்தை தனது தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருந்தவர். திருநெல்வேலி தந்த நல் வயிரங்களில் ஒருவர். "தி.க.சியின் நேர்காணல்கள்" என்ற புத்தகத்தில் அன்னாரது இலக்கிய கொள்கைகள், தடங்கள், எதிர்நோக்கங்கள் ஆகியவை காணக் கிடைக்கலாம். தமிழ் நவீன இலக்கியத்திற்கு பெரிய இழப்பு.

----

18-03-2014
 
கலாப்ரியாவின் Trilogy

கலாப்ரியா அவர்களின் சுயசரிதை என்றுதான் இவைகளை சொல்ல வேண்டும். ஒரு trilogy தந்திருக்கிறார். முதலில் 'நினைவின் தாழ்வாரங்கள்'; அடுத்து 'ஓடும் நதி'; கடைசியில், 'உருள் பெருந்தேர்'. இவைகளுக்கும் பிறகு, 'சுவரொட்டி' வந்திருக்கிறது. ஆனால், அதில் அறுபதுகளின் சினிமாவைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறார்.

எந்த விதமான பந்தா இல்லாமல் எழுதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது எழுத முயன்றவர்களுக்கு தெரியும். வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது, அதிலும் எந்தவிதமான romanticism இல்லாமல் திரும்பிப் பார்ப்பது இன்னும் சிலருக்கே முடியும். கலாப்ரியா வார்த்தைகளை தேடுவதேயில்லை. எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. எழுதப் பட்ட வார்த்தைகளைத்தான் இவரோ அல்லது இவர் குறிப்பிடும் நபர்களோ அந்தச் சமயங்களில் பேசியிருப்பார்கள். தன்னைப் பற்றி பிறர் கணக்கீடு கௌரவமாக இருக்காது என்ற கவலை எங்கேயும் தெரியவில்லை.

தன் குடும்பத்தின் வீழ்ச்சியை சொல்லும்போதும் ஒரு detached மன நிலையில் இருந்தே சொல்கிறார். யாரந்த சசி? சசியைப் பற்றி மட்டும் இன்னும் அந்த உணர்வழுத்தம் நீங்கிய பாடில்லை. மரணப் படுக்கையில் இறுதி நிமிடங்களில் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் நினைவுகளில் மிதந்தபடி கடைசியாக எஞ்சியிருக்கப் போவது நிறைவேறாத காதலின் துக்கம் மட்டும்தானா?

இந்த மூன்றையும் நீங்கள் படிக்க நான் பிரியப்படுகிறேன்.
[1] நினைவின் தாழ்வாரங்கள் - கலாப்ரியா
[2] ஓடும் நதி - கலாப்ரியா
[3] உருள் பெருந்தேர் - கலாப்ரியா

நம்மைப் போன்ற ஒரு மனுஷனின் நினைவு, வேதனை, சந்தோசம் ஆகியவை நமக்குமானதல்லவா?
 
----
 

0 comments:

Post a Comment