டார்ச் லைட் 1

| Thursday, November 28, 2013
 19-11-2013
வி.ஆர்.கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி.
நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களைப் பற்றியதான ஒரு கட்டுரை அண்மையில் தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கிறது. நல்ல முறையில், ஐயா அவர்களைப் பற்றிய புரிதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரையில் அவரின் ஆங்கிலத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடாததுதான் ஒரு குறை. நீதிபதி வி ஆர் கிருஷ்ணா அய்யர் அவர்களின் ஆங்கிலத்தை பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆங்கில ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நான், அய்யர் அவர்களுடய ஆங்கிலத்தைப்போல படித்ததில்லை. இவரின் ஆங்கில சொல்லாட்சி நிகரற்றது. நுனி நாக்கில் வைத்து ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசிப் பிறரை ஏமாற்றும் கபடப் பேர்வழிகள் (இவர்களில் பெரும்பாலும் பன்னாட்டு நிறுமங்களில் மென்பொருள் பொறியாளர்களாகவும், அவைகளில் HR பிரிவுகளிலும் தங்களின் பணியை அயராது கொட்டித்தீர்ப்பவர்கள். விலக்குகளும் உண்டு) இவரின் ஆங்கிலத்தை படித்தால் வெட்கிப்போவார்கள். சிவாஜி கணேசன் கம்பீரமாக தமிழை உச்சரிப்பதைப்போல், இவரின் ஆங்கிலம் அதற்கே உரிய நளினம் கலந்த கட்சிதத்தோடு இருக்கும். இவரின் உரைநடை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில இலக்கியம் பயிலுவோருக்கு பாடமாக வைக்கத் தகுந்தது.

-------
17-11-2013 

இன்றைய தமிழ் தி ஹிந்து நாளிதழில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி வெளியிடப்பட்டுள்ளது. ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் தன்மையாகவும், அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்காமல் ஜனநாயக ரீதியில் உள்ளதாகவும் நிறைய வாசகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களின் நினைவாற்றலுக்கும் பெரிய நன்றி. இலங்கை விடுதலை பெற்றதற்கு முன்பிருந்தே சிங்கள பேரினவாதம் மிகக் கவனமாக திட்டம்போட்டு, "வந்தேறிகள்" என்று அவர்களால் கொச்சையாக அழைக்கப்பட்ட தமிழர்களை இன ஒழிப்பு செய்து வந்திருக்கிற இருநூறு ஆண்டு கால வரலாறை தெரியாதவர்கள் இன்றைய செவ்வியை மட்டும் படித்துவிட்டு, திரு.விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து நூற்றுக்கு இருநூறு சதம் சரி என்று சொல்லலாம். இவர்கள் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை எப்படிவேண்டுமானாலும் எடை போடலாம். ஒரு இன வரலாற்றையும் அதன் ரத்தம் சொரிந்த நாட்களையும் இன்றைய சௌகர்யத்திற்காக புறக்கணிப்பதும், அதன் வேதனையை, துயரத்தை வருவதாக சொல்லப்படும் புற வாழ்வியல் வசதிகளுக்காக மறைக்க முற்படுவதும், இனமான அவமானத்தை ஏற்றுக்கொள்வதும் "தி ஹிந்து" போன்ற 'உண்மை விளம்பிகள்" செய்யலாம். ஐயா விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமாதானத்தை விரும்பினாலும், இன எழுச்சிக்காக போராடியவர்களின் நினைவுக்கு குந்தகம் விளைவிக்க விரும்பும் எந்த ஒரு கருத்தையும் வெளியிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
-------

17-11-2013 

 இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் நீதியரசர் சந்துரு அவர்கள் தமிழகத்தின் சிலைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். தமிழகத்தின் கடந்த நாற்பத்தைந்து வருட அரசியல், சிலைகள் சம்பந்தப்பட்டது. சிலைகள் தவிர்த்த திராவிடக் கட்சிகளின் அரசியல் உப்பு சப்பில்லாதது. உண்மையில், சிலைகளே தமிழகத்தை கடந்த நான்கு தசாப்தங்களாக ஆண்டு வந்துள்ளன. முதலில் திரு. அண்ணாதுரை அவர்களின் சிலையும், பிறகு திரு.எம்ஜியார் அவர்களின் சிலையும் தமிழகத்தை, சிலைகளால் முடிந்தவரை, ஆட்சி செய்துள்ளன. பரதனுக்கு ராமனின் செருப்பைப் போல திமுகவிற்கு அண்ணாதுரையும், அதிமுகவிற்கு எம்ஜியாரும் சிலைகளாக நின்றவாறே அரசுக்கட்டிலை நிர்வகித்துவந்துள்ளனர். இதில், காமராஜரும், சிவாஜியும் இன்னபிற சிலையாளர்களும் "ஓரங்கட்டப்பட்டனர்". நேரு ரொம்பப் பாவம். கையிலிருந்த புறாவோடு காணாமல் போய்விட்டார். புறா அவரை தூக்கிக்கொண்டு போயிருக்கலாம். காணாமல் போவதும், திடீரென்று கண்ணில் விழுவதும் கண்ணகியின் வழக்கம். இதையெல்லாம் கவனித்துவரும் நீங்கள் ஏன் ஆடாமல் அசையாமல் நிற்கிறீர்கள்? சிலையாகிவிட்டீர்களா?

-------
17-11-2013 

டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் சென்று வந்திருக்கிறார். இலங்கையில் தனி மனித சுதந்திரம் தாராளமாக இருக்கிறது என்பதின் அடையாளமாக இதைப் பார்க்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. டேவிட் கேமரூன் அவர்களின் அரசியல் துணிவையே இது காட்டுகிறது. "உதயன்" நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று எரிந்து போன பதிப்புப் பொறிகளை பார்வையிட்ட டேவிட் கேமரூன் காட்டமான அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நடுவில், சில சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்கள், "பிரித்தொனிய அரசின் காலனி ஆதிக்கம் முடிந்துவிட்டது: டேவிட் கேமரூன் சொல்லி இனி ஆகப்போவது ஏதுமில்லை" என்ற வகையில் கருத்தருளியுள்ளார்கள்.

மன்மோகன் சிங் வராவிட்டால் பரவாயில்லை; சல்மான் குர்ஷித் உங்களிடம் மன்னிப்புக் கேட்டு காலில் விழுந்து நீங்கள் மன்னிக்கும் வரை அழுது தொழுவார். டேவிட் கேமரூன் கதை கொஞ்சம் வேறு விடயம். சர்வதேசியம் உங்களின் கதையை நீங்கள் சொல்லியவாறு நம்பத்தயாரில்லை. நடந்தது என்ன என்பதை அது பாதிக்கப்பட்ட தரப்பாரிடமும் பேசிப் புரிந்து கொள்ள முனைய ஆரம்பித்துள்ளது. நீங்களும் உங்களின் ஆகப்பெரிய தோழருமான இந்திய அரசும் சர்வதேசியம் முன் வைக்கப்போகும் புதிய கதை எவ்வளவு சுவராஸ்யங்களும் வெட்கக்கேடுகளும் நிறைந்ததோ?
 -------

16-11-2013 

குழந்தைகளுக்கான 7 டி சினிமா தியேட்டர் சென்னையில் ஸ்கைவாக் வளாகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ளது. சென்னை சென்றிருந்தபோது உள்ளே நுழைந்தேன். கண்களில் போட்டுக்கொள்ள பெரிய கண்ணாடி ஒன்றை கொடுத்தார்கள். ஒரு மணி நேரம் ஐந்து அல்லது ஆறு சிறுவர் படங்கள் திரையிடுகிறார்கள். கதையில் மழை பெய்தால் நம் மீதும் மழை பெய்கிறது. யாரோ யார் மீதோ எச்சில் துப்புகிறார்கள், நம் மீது விழுகிறது. அடிக்கடி நாம் அமரும் நாற்காலி பயங்கரமாக ஆடுகிறது. விழாமல் தப்பித்தால் பழனி முருகனுக்கு மொட்டை போட்டுக்கொள்வதாக நம்மிடம் கேட்காமலேயே மனம் வேண்டிக்கொள்கிறது. தியேட்டரில் இறுதியாக பல்புகள் எரிகையில் வயதையும் மீறி பல சாகசங்களைத் தாண்டி வந்ததற்காக நம்மை நாமே தட்டிக்கொடுக்கிறோம். நம்மை ஒரு மணி நேரம் குழந்தையாக்கிய இந்த அரங்கம், நமக்குச் சொல்வது: "குழந்தமை அற்புதமானது. அடிக்கடி நீங்கள் இப்படி சிரித்ததும் பிரமித்ததும் கடைசியாக எப்பொழுது? ஏன் வளர்ந்தீர்கள்? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்?"
-------
06-11-2013
 
புதிதாக நுழைந்துள்ள இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் வெளியிட இடம் அமைத்து தருகின்றன; இதன் காரணமாய் கருத்துக் குழப்பமும், கருத்து நெரிசலும் ஏற்பட்டு, ஏற்கனவே இடத்தையும் மடத்தையும் நிரப்பியிருக்கும் அறிவுஜீவிகளுக்கு சற்று சௌகர்யக் குறைவும், கவுரவக் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது என்றெல்லாம் திரு.கார்த்திகேயன் அவர்கள் தி ஹிந்துவில் எழுதியுள்ளார். கருத்துக்குழப்பம் ஏற்படுவதும், கருத்து நெரிசல் ஏற்படுவதும் கல்வி பரப்பலின் இயல்பான நகர்வு. நீங்கள் இணையத்தில் எல்லோரும் கருத்துக்களை தெரிவிக்க கூடாதென்றால், சாமான்யர், கல்வியறிவு பெற்ற காரணத்தால் மட்டுமே, தம்மையும் தமது கருத்தை அறிவிக்கவும் வேறு ஊடகத்தை நிறுவிக்கொள்வர். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லமுடியும் இங்கு. பாலும் விஷமும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். அருந்துபவர்தான் தன்மையை முடிவுசெய்கிறார். மற்றவர்க்கான முடிவை திரு.கார்த்திகேயன் போன்றவர்கள் எடுக்காமல் இருப்பது, அவரையும் சேர்த்த, எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
-------
03-11-2013

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் 85வது பிறந்த நாள் விழா அக்டோபர் ஒன்றாம் திகதி 2013ல் கொண்டாடப்பட்டபோது திரு.நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு YouTubeல் காணக் கிடைக்கிறது. திரு.நெல்லை கண்ணன் அவர்கள் தமது வழக்கமான உற்சாகத்தில் இல்லையோ என்று சந்தேகப்படும்படியான உரைதான் என்றாலுங்கூட, திரு.சிவாஜி அவர்கள் எப்படி இரண்டு தலைமுறைத் தமிழர்களின் தோற்றம், பாவனை, அலங்காரம், பேச்சு, செயல்பாடு மற்றும் சிந்தனையைப் பாதித்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. நெல்லை கண்ணனுடையது நிச்சயமாக மிகுவுரைதான் என்றபோதும், தமிழர்களின் பாவனைகளும் பேச்சுக்களும் திரு.சிவாஜி கணேசன் காலத்திற்கு முன்பேஇருந்து (சங்க இலக்கிய காலத்திலேயிருந்து என்று உறுதியாக சொல்ல முடியும்) மிகை வெளிப்பாடுகளாகத்தான் இருந்திருக்கின்றன என்பதால், அவைகளை மிகச் சரியாக மேடையிலும், திரையிலும் பிரதிபலித்த கலைஞன் திரு.சிவாஜி அவர்கள்தான். வாழ்க்கையையே நாடகமாக உணர்ந்திருப்பாரோ!

0 comments:

Post a Comment